Tuesday, September 23, 2014

சிவாஜி என்கிற அனுபவம்

நடிகர் திலகம் பற்றி இதுவரை ஒரே ஒரு எக்ஸ்க்ளுசிவ் தொலைகாட்சி நிகழ்ச்சிதான் வந்திருக்கிறது.

ஒரு காலத்தில் தூர்தர்ஷன் மட்டும் இருந்தபோது ”மலரும் நினைவுகள்” என்ற நிகழ்ச்சி பிரபலம். நட்சத்திரங்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்வார்கள். அந்தக்காலத்தில் சினிமா கிளிப்பிங்கை பார்ப்பதே அபூர்வம் என்பதால் அந்த நிகழ்ச்சிக்கு ஏக வரவேற்பு. அதில் ஒரு முறை சிவாஜியின் மலரும் நினைவுகள் இடம்பெற்றது. ஆனால் மிகப் பெரிய எதிர்பார்ப்பை கொடுத்து விட்டு மிகச் சாதாரணமான ஒரு நிகழ்ச்சியாக அது அமைந்துவிட்டது. என்னைப் போன்ற சிவாஜி இரசிகர்களை அந்நிகழ்ச்சி ஒரு சதவிகிதம் கூட திருப்தி செய்யவில்லை.

இன்று நூற்றுக்கணக்கான சேனல்கள் வந்துவிட்டன. அத்தனை சேனல்களும் ஒரே நேரத்தில் முயன்றாலும் சிவாஜியைப் பற்றி ஒவ்வொரு சேனலும் ஒவ்வொரு விதவிதமாக நிகழ்ச்சிகள் செய்யலாம். சிவாஜியைப் பற்றிப் பேச அத்தனை விஷயங்கள் உள்ளன.

தூர்தர்ஷனாவது ஏதோ முயற்சி செய்தது. ஆனால் அதில் ஒரு பங்கைக் கூட எந்த தனியார் சேனலும் செய்யவில்லை. செய்ய இயலாது என்று கூட தோன்றுகிறது.

டிவி, ரேடியோ என எதை எடுத்துக்கொண்டாலும் 24 மணி நேரமும் ஏதாவது நிகழ்ச்சிகளை தர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். அதனால் சீக்கிரமே கற்பனை வரண்டு போய், தொகுப்பாளர் தன்னைப் பற்றியே அலட்டிக் கொள்கிற சுய அபத்தங்கள் கூட நிறைய வருகிறது. டிவி ரேடியோ நிலையங்கள் அவற்றையும் வேறு வழியின்றி அனுமதிக்கின்றன. அவர்களில் ஒருவருக்காவது Quality Content பற்றிய எண்ணம் இருந்தால் சிவாஜி பற்றி எத்தனையோ விஷயங்களைப் பேச முடியும். சிவாஜி பற்றி மட்டுமல்ல அவர் போன்ற மாபெரும் மேதைகள் பற்றி நிறைய சொல்ல முடியும். ஆனால் இந்த இன்ஸ்டன்ட் யுகத்தில் அந்த வினாடி கண்ணிலும், செவியிலும் படுவதை மட்டுமே மனித மூளை கிரகிக்கிறது.

இன்றைய மீடியாக்கள் வெற்று விஷயங்களை மட்டுமே கடத்துகின்றன. அனுபவக் கடத்தல் நிகழ்வதே இல்லை.

நல்ல அனுபவங்களைத தேடி நமது டிவிக்களும், ரேடியோக்களும் பயணப்படும்போது சிவாஜி ஒருவேளை அவர்கள் கண்களில் படக்கூடும். அது வரை சிவாஜி தந்த அனுபவங்கள் அவரது இரசிகர்களின் மனதில் மட்டும் இருக்கும். இந்த பதிவு கூட பகிர்வு அல்ல. ஒரு தந்தையாக, சகோதரனாக, ஆசிரியனாக, இறை பக்தியாக, தமிழாக, உச்சரிப்பாக, தமிழ் குடும்ப அமைப்பாக, தமிழ் குடும்பங்களின் சந்தோஷமாக, துக்கமாக, எதிர்பார்ப்பாக, கனவாக சிவாஜி தந்து விட்டுச் சென்றிருக்கிற அனுபவங்களை அன்றைய என்னிலிருந்து இன்றைய எனக்கு நானே கடத்திக்கொள்கிற சிறு முயற்சி.

Monday, September 22, 2014

போலாம் ரைட்டு! நாட்டுத்தக்காளியும் பெண் தேடும் படலமும்

காய்கறிகடைக்கும், மளிகைக்கடைக்கும் செல்வது ஒரு இளைஞனின் இமேஜை பாதிக்கும். அப்படித்தான் நான் இருபது ப்ளஸ் வயதில் நினைத்துக் கொண்டிருந்தேன்.  ஆனால் முப்பது ப்ளஸ் வயதில் திருமணம் ஆன சில நாட்களிலேயே அந்த இமேஜ் தலைகுப்புற பல்டியடித்து டேமேஜ் ஆனது. நல்ல நாட்டுத்தக்காளியா பார்த்து அரை கிலோ வாங்கிட்டுவாங்க என்ற மனைவியின் குரல் என்னை அண்ணாச்சி கடையில் நிறுத்தியிருந்தது. தக்காளி தெரியும், அதென்ன நாட்டுத்தக்காளி.. தக்காளியில் அப்படி ஒரு வெரைட்டி இருப்பதே அன்றுதான் எனக்குத் தெரியும். இருந்தாலும் அண்ணாச்சியிடம் எல்லாம் தெரிந்ததுபோல ஸ்டைலாக கிலோ எவ்வளவு என்றேன். அவர் விலையைச் சொல்லிவிட்டு "இந்தாங்க இந்த கூடையில பெரக்கித்தாங்க.. எடை போட்டுருவோம்" எனச் சொல்லிவிட்டு யாரோ கேட்ட கத்தரிக்காயில் பிஸியாகிவிட்டார். எனக்கு ஒரே குழப்பம். எது நாட்டுத்தக்காளி அதில் எது நல்ல தக்காளி என ஒன்றும் புரியவில்லை. குழப்பத்துடன் விழித்துக்கொண்டிருந்தேன். 

கடந்தவாரம் ஒரு பிரபலத்தை சந்தித்தேன். தன் மகனுக்கு பெண் தேடியபோது அவர் எப்படியெல்லாம் விழித்தார் என்பதை மிகவும் சுவாரசியமாகச் சொன்னார். கிட்டத்தட்ட 4 வருடத்தேடல். தமிழகத்தில் எத்தனையோ குடும்பங்கள் உள்ளன. ஒவ்வொரு குடும்பத்திலும் எத்தனையோ பெண்கள் இருக்கிறார்கள். அவர்களில் யார் தன் மகனுக்கு ஏற்ற பெண்? ”பெரிய குழப்பம் சார். எந்த பெண்ணை பார்த்தாலும் செட் ஆகல. என்னடா பண்றதுன்னு எக்கச்சக்க குழப்பம். அப்பதான் ஒரு இளைஞன் எனக்கு அறிமுகமானான். அவனுக்கு பெண் நிச்சயம் ஆகிடுச்சு. ஆனா தன் தங்கைகளுக்கு திருமணம் ஆன பின்தான் தனக்கு கல்யாணம்னு அவன் உறுதியா இருந்தான். இந்தக் காலத்துல இப்படி ஒரு பையனா? தன் தங்கைகளுக்காக தன்னுடைய திருமணத்தை தள்ளி வைச்சிருக்கானே அப்படின்னு அவன் மேல ஒரு மரியாதை வந்திருச்சு. அப்பதான் சட்டுன்னு ஒரு முடிவெடுத்தேன். இப்படி ஒரு இளைஞன் இருக்கிற குடும்பம் நிச்சயமா ஒரு சிறந்த குடும்பமாகத்தான் இருக்கும் அப்படின்னு என் மனசுல பட்டுது. என்னுடைய கணிப்பு வீண் போகல. இன்னைக்கு அந்த அழகான குடும்பத்துல என் மகனுக்கு சம்பந்தம் பேசிட்டேன்” என்றார். அவர் குரலில் அப்படியொரு நிறைவு.

இன்று என் நண்பருக்கு ஒரு இளைஞன் வந்தது போல அன்று அண்ணாச்சி கடைக்கு ஒரு மாமி வந்தார். அவர் வந்ததும் அண்ணாச்சி அலர்ட் ஆகிவிட்டார். கடைப் பையனை அவசரமாகக் கூப்பிட்டு "டேய் மாமி வர்றாங்க. காய்கறி கொஞ்சம் சுமாரா இருந்தா கூட கறாரா வேணாம்னு சொல்லிடுவாங்க. இன்னைக்கு வந்த நாட்டுத்தக்காளியை எடுத்துப்போடு" என்றார். அவ்வளவுதான். பளிச்சென்று எனக்குள் ஒரு பல்ப். அந்தக் கறார் மாமி செலக்ட் செய்தால் அது நிச்சயம் நல்ல தக்காளியாகத்தான் இருக்கும் என்று முடிவெடுத்தேன். அதனால் அவர் தேர்ந்தெடுத்து கூடையிலிருந்த தக்காளியை வாங்கி வீட்டில் மனைவியிடம் சமர்த்து என்ற கொஞ்சலான பாராட்டுடன் ஒரு மென் அணைப்பும் பெற்றுக்கொண்டேன்.

முடிவெடுக்கத் திணறும் சமயங்களில் அந்த இளைஞன் அல்லது அந்த மாமியைப்போல யாரோ ஒருவர் நமக்கான தீர்வுகளை அடையாளம் காட்டுகிறார்கள். அதை தவறவிடாமல் கவனித்து பளிச்சென்று கவர்ந்து கொள்ள வேண்டும். 

இதான் இன்னைக்கு பாயிண்டு! போலாம் ரைட்டு!