Saturday, October 18, 2014

டிபிக்கல் ஜெயலலிதா ஸ்டைலில் Grand entry!

ஜெயலலிதா கைதானவுடன் பிரியாணி பொட்டலத்துக்காக பலபேர் நடித்தார்கள்  என்பது உண்மை. ஜெயலலிதா ஜாமீனில் வெளிவந்தவுடன் தானாகவே பலபேர் தெருக்களில் கூடினார்கள் என்பதும் உண்மை.

ஜெயலலிதா அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்து வைத்திருக்கிறார் என்பதை நிருபிக்க இனிமேலும் நீதிமன்றங்களில் வழக்கு நடக்கும். ஆனால் மக்கள் செல்வாக்கையும் சேர்த்து வைத்திருக்கிறார் என்பதை எல்லா மன்றங்களும் ஒப்புக்கொள்ளும்.

தெருவெங்கும் கட்சிக்காரர்களும், பொது மக்களும் மழையில் நனைந்தபடி ஆரவாரமாக வரவேற்ற இந்த Grand entry எதிர்பார்த்ததுதான். டிபிக்கல் ஜெயலலிதா ஸ்டைல்.

இருபத்தி ஒரு நாள் சிறை வாசம் தந்த களைப்பை போயஸ் கார்டன் திரும்பிக்கொண்டிருக்கும்போது வழியிலேயே ஜெயலலிதா மறந்து உற்சாகமாகியிருப்பார். நடுவழியில் ஒரு பிள்ளையாரை வழிபட்டது அவர் ரிலாக்ஸ் ஆக ஆரம்பித்திருக்கிறார் என்பதன் அறிகுறி.

ஜனநாயக நாட்டில் வெற்றி பெற வேண்டும் என்றால் மக்கள் செல்வாக்கு அவசியம். ஆனால் மக்கள் செல்வாக்கு மட்டுமே போதாது, சுய ஒழுக்கமும் தேவை என்பதை அதே ஜனநாயகம் ஜெயலலிதாவுக்கு கடுமையாக உணர்த்தியிருக்கிறது.

ஜெயலலிதா இன்றைக்கு தோற்றிருக்கலாம். இடைக்கால ஆறுதல் பெற்றிருக்கலாம். நாளை வெல்லவும் கூடும். ஆனால் தனக்கு எது நடந்தாலும் அதை தமிழக மக்களின் பிரச்சனை என்பது போன்ற அரசியல் மாயங்களை உருவாக்குவதில் ஜெயலலிதாவும், கருணாநிதியும் ஒருவருக்கொருவர் சளைக்காத தந்திரசாலிகள். அதைத்தான் இன்றைய தமிழக அரசியல் நமக்கு உணர்த்துகிறது. இதுதான் மற்ற எல்லாவற்றையும் விட மாபெரும் உண்மை.

நமக்குப் பிடிக்கிறதோ இல்லையோ, இந்த உண்மையை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். வெல்கம் பேக் ஜெயலலிதா! 

No comments: