Saturday, August 16, 2014

பட்டி மன்றம் - முதன் முறையாக வெர்சுவல் ஸ்டுடியோவில் படம்பிடிக்கப்பட்டது.

பட்டிமன்றங்கள் என்றாலே உடனே ஏதாவது ஆடிட்டோரியத்திற்குள் புகுந்துவிடுவோம். வெகு அபூர்வமாக ஏதாவது பள்ளி (அ) கல்லூரி மைதானங்களில் படமாக்குவோம். மைதானங்களில் உள்ள சிக்கல் என்னவென்றால் மாலை நேரத்துக்கு மேல்தான் தோதுப்படும். ஏனென்றால் அப்போதுதான் பார்வையாளர்கள் தாங்கிக்கொள்கிற அளவுக்கு வெக்கை குறைவாக இருக்கும். ஆனால் இவற்றில் விளக்கைச் சுற்றும் பூச்சிகள், கொசுத்தொல்லை மற்றும் மழை போன்ற தடங்கல்களுக்கான வாய்ப்புகள் அதிகம். அதனால் ஆடிட்டோரியம்தான் சிறந்த சாய்ஸ்.


ஆனால் இந்த சுதந்திர தினத்துக்கு நாங்கள் வித்தியாசமான, துணிச்சலான ஒரு முடிவெடுத்தோம். எங்களுடைய புதுயுகம் வெர்சுவல் ஸ்டுடியோவிலேயே பட்டிமன்றத்தை படமாக்கலாம் என்பதே அது. ஏற்கனவே நடிகை அபிராமி தொகுத்து வழங்கிய ரிஷிமூலம் பேச்சு மன்றம் நிகழ்ச்சியை வெர்சுவல் ஸ்டுடியோவில் வெற்றிகரமாக நடத்தியிருக்கிறோம்.  அதைவிட இதில் சிக்கல் குறைவுதான். அதனால் பெரிதாக கவலைப்படவில்லை. ஆனால் பட்டிமன்றத்தை இதுவரை யாரும் முயற்சிக்கவில்லை என்ற சின்ன த்ரில் ஜாலியாக இருந்தது.

சரியாக 48 மணி நேரங்களே எங்களுக்கு இருந்தது. ஆனாலும் 3Dயில் மளமளவென ஒரு செட்டை வடிவமைத்தோம். பார்வையாளர்கள் 50 பேரை திரட்டினோம். பேச்சாளர்களை ஒரு கற்பனை மேடையில் அமர வைத்து அனைவரையும் ஒரு சேர எங்கள் ஸ்டுடியோவிலேயே படம்பிடித்தோம். வெர்சுவல் ஸ்டுடியோவில் உள்ள மிகப்பெரிய சிக்கல் நிழல்கள் விழாத லைட்டிங் மிக முக்கியம். ஆனால் 50 பேருக்கு மேல் உள்ளே இருந்தால் நிழல்களை தவிர்க்க மிகவும் மெனக்கெட வேண்டும். ஆனால் எங்கள் டெக்னிகல் டீம் அபாரமானது. அசராமல் செய்து முடித்தார்கள்.

இதில் இன்னொரு துணிச்சல் என்னவென்றால் பட்டிமன்ற பேச்சாளர்களில் நடுவர் பிரகதீஸ்வரனைத் தவிர வேறு எவருக்கும் பச்சைத் துணிகளால் சூழப்பட்ட கற்பனை மேடைகளில் (Virtual stage) பேசி பழக்கமில்லை. ஆனாலும் பெரிய சிக்கல்கள் எதுவும் எழாமல் படப்பிடிப்பை முடித்து ஒளிபரப்பும் செய்துவிட்டோம்.

அடுத்த முறை பார்வையாளர்களின் எண்ணிக்கையை 100 பேருக்கு மேல் உயர்த்தலாமா என்ற தைரியமான எண்ணம் வந்திருக்கிறது. கடினம் இல்லை என்றாலும் ஒரு பட்டிமன்றத்தை முதன் முறையாக வெர்சுவல் ஸ்டுடியோவில் படம்பிடித்த ஒரு திருப்தி. அந்த திருப்தியைத் தந்த புதுயுகம் டெக்னிகல் குழுவிற்கு சபாஷ்.

No comments: