Saturday, August 16, 2014

சர்ச்சையைக் கிளப்பியிருக்கும் 9 மொழிப்பாடல் - என்னுடைய மொழி எங்கே?

ஏ.ஆர்.ரகுமானின் வந்தேமாதரம் பாடல் வெற்றிக்குப்பின், தேசிய ஒருமைப்பாட்டை மையமாக வைத்து பல பாடல் முயற்சிகள். #MicromaxUniteAnthem அந்த வரிசையில் லேட்டஸ்ட். மைக்ரோமேக்ஸ் - சோனி நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் இந்தப்பாடல் தயாராகியிருக்கிறது. தயாராகியிருக்கிறது என்பதை விட சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது என்பதுதான் உண்மை.

முதல் காரணம் பழைய டியூன். இதற்காக புதிதாக எதையும் கம்போஸ் செய்யவில்லை. ரங்தேபசந்தி படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள Roobaroo என்ற பாடலை சற்றே வடிவம் மாற்றியிருக்கிறார்கள். இது கூட பரவாயில்லை. இந்த சிங்கிள் ஆல்பத்தில் 10 பாடகர்கள் 9 இந்திய மொழிகளில் பாடியிருக்கிறார்கள். இதுதான் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. தேசிய ஒருமைப்பாடுதான் தீம் என்றால் ஏன் 9 மொழிகளுக்கு மட்டும் முக்கியத்துவம் தரவேண்டும். எங்கள் மொழியை ஏன் நிராகரித்தீர்கள் என்று பாடலில் இடம் பெறாத மொழி பேசுபவர்கள் ஆன்லைனில் கோபமாக தங்கள் கருத்துகளை தெரிவித்துவருகிறார்கள்.

எனக்கும் அதுதான் தோன்றுகிறது. மைக்ரோமேக்ஸ் - சோனி போன்ற பெரிய நிறுவனங்கள் கைகோர்க்கும்போது நிச்சயமாக ஒரு புதுப்பாடலை உருவாக்கியிருக்க முடியும். அதைச் செய்யாததே ஏனோதானோ என்ற எண்ணத்தையே குறிக்கிறது. அடுத்ததாக ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளை இடம்பெற வைக்க வேண்டும் என்று முடிவு செய்தது சிந்தனையில் ஆழமில்லை என்பதைக் காட்டுகிறது. ஏனென்றால் இந்தியாவில் பரவலாக பேசப்படும் அத்தனை மொழிகளையும் இதில் இடம்பெற வைப்பது சாத்தியமே இல்லாதது. எனவே இந்தப் பாடலில் இடம்பெறாத மொழியைப் பேசுபவர்கள் நிச்சயம் ஏமாற்றமடைவார்கள். தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் பாடல் நாட்டின் எந்தப்பகுதியைச் சேர்ந்தவரையும் உயர்த்துவதோ, தாழ்த்துவதோ, கண்டுகொள்ளாமல் விடுவதோ, முக்கியத்துவம் தருவதோ தவறு. ஆனால் இந்தப்பாடல் இந்தக் குளறுபடியான எண்ணங்கள் அனைத்தையும் தருகிறது. பாடலுக்கான வீடியோவிலும் எந்தக் க்ரியேட்டிவிட்டியும் இல்லை. பாடல் வரிகளில் இடம்பெறாத மொழிகளை எழுத்து மற்றும் காட்சி வடிவிலாவது வீடியோவில் கொண்டு வர முயற்சித்திருக்கலாம்.

சுருக்கமாகச் சொன்னால் தங்கள் விளம்பரத்துக்காக இரண்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் தயாரித்து வெளியிட்டிருக்கும் ஒரு சாதாரண வீடியோதான் இது. இதற்கும் தேசிய ஒருமைப்பாட்டுக்கும் தொடர்பே இல்லை.

No comments: