Wednesday, July 16, 2014

ராமானுஜம் - திரைக்கதை இல்லாத திரைப்படம்

திரு. ஞானராஜ சேகரன் அற்புதமான, அவசியமான ஒரு பணியை செய்து கொண்டிருக்கிறார். பாரதியார், காமராஜர், பெரியார் மற்றும் ராமனுஜம் என நாம் மறந்த மேதைகளின் வாழ்க்கைகளை தனது திரைப்படங்களின் வழியாக பதிவு செய்கிறார். அடுத்த தலைமுறைக்கு இவர்களின் வாழ்க்கையை அறிமுகப்படுத்த இப்படி ஒரு பதிவு அவசியம் தேவைப்படுகிறது. அதற்காக ஒரு சபாஷ்.

ஆனால் . . . அவருடைய முயற்சிகள் எப்போதும் மேலோட்டமாகவே இருக்கின்றன. அவருடைய முயற்சியில் ஆழம் இல்லை. கதையாக நிகழ்வுகளை வரிசைப்படுத்திவிடுகிறார். இது மிகவும் கடினமானது. ஆனால் ஒருபோதும் கதையை திரைக்கதையாக்க அவர் மெனக்கெட்டதில்லை.

ஒருவரின் வாழ்க்கையை கதையாக வரிசைப்படுத்துவதை விட, ஒரு திரைப்படத்திற்கு ஏற்ற திரைக்கதையாக மாற்றுவது மிக மிக சவாலான ஒரு விஷயம். இந்த சவாலுக்கு அவர் ஒரு போதும் தன்னை உட்படுத்திக் கொண்டதில்லை. மோகமுள்ளில் துவங்கி ராமானுஜன் வரை அவர் திரைக்கதை என்ற ஏரியாவிற்குள்ளேயே வரவில்லை. அவருடைய அத்தனை படங்களும் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தாதற்குக் காரணம் திரைக்கதையில் அவர் கவனம் செலுத்தவே இல்லை என்பதுதான்.

ராமானுஜன் படத்தில் அவர் இந்தக் குறையை சரி செய்திருப்பார் என நினைத்தேன். ஆனால் இதில் இன்னும் மோசம். ராமானுஜன் வாழ்க்கையைப் பொறுத்தவரை நாம் அறிந்தது மிக மிக சொற்பமே. அதனால் சுவாரசியமான நிஜ சம்பவங்கள் இல்லவே இல்லை. திரைக்கதாசிரியருக்கு ஒரு வகையில் இது அனுகூலம். கதையை அடுத்தடுத்து நகர்த்துவதற்கும், ஒரு காலத்திலிருந்து இன்னொரு காலத்திற்கு நகர்வதற்கும் புத்திசாலித்தனமாக சம்பவங்களை கற்பித்து எழுதிக்கொள்ளலாம்.

ஆனால் துளியும் திரைக்குத் தேவையான கற்பனை ஏதுமின்றி துண்டுத் துண்டுக் காட்சிகளாக படம் நகரும்போது மனம் ஒன்ற மறுக்கின்றது. நல்லவேளையாக போரடிக்கும்போதெல்லாம் விசிலடித்து, கூச்சலிட்டு மற்றவர்களை இம்சிக்கும் எவரும் வந்திருக்கவில்லை. அதனால் மொத்த தியேட்டரும் அமைதியாக எந்த ஒன்றுதலும் இல்லாமல் இடைவேளை வரை காத்திருந்தோம்.

ராமானுஜன் என்ற கணித மேதை நமக்குள் ஏற்படுத்தி வைத்திருக்கும் பிம்பம்தான் அந்த பொறுமையைக் கொடுக்கிறது. இந்தப்படம் நாம் அறியாத யாரைப்பற்றியோ இருந்திருந்தால் நான்கைந்து காட்சிகளுக்குள் பொறுமையிழந்திருப்போம்.

ராமானுஜன் தனது கணித மேதைமையால் முதலில் வகுப்பாசிரியரை ஆச்சரியப்படுத்துகிறார், அடுத்து கோவில் பட்டரை ஆச்சரியப்படுத்துகிறார், அதற்கடுத்து வயதில் பெரிய பட்டதாரிகளை ஆச்சரியப்படுத்துகிறார், பின்னர் புரொபசரை, பிரின்ஸிபாலை, ஊர் பெரியவரை, கலெக்டரை, சென்னை பல்கலைக்கழகத்தை என ஒவ்வொருவராக வரிசையாக ஆச்சரியப்படுத்துகிறார்.  ஆனால் அவர் ஆச்சரியப்படுத்தும் காட்சிகளில் இயக்குனரும், திரைக்கதாசரியரும்  புத்திசாலித்தனமாக எதுவும் செய்யாததால் மகா போரடிக்கிறது.

கணிதத்தில் பெரிய மேதையாக இருந்தாலும் மற்ற பாடங்களை பாஸ் பண்ண முடியாத சாதாரண மாணவனாக தாழ்வு மனப்பான்மை கொண்டவனாக இருக்கிறார். தனது தந்தை உட்பட எவரும் தனது திறமையை அங்கீகரிக்காததால் வீட்டை ஓடிவிடுகிறார், இரயில் முன் படுத்து தற்கொலைக்கு முயற்சிக்கிறார், தனி அறையில் அமர்ந்து அழுகிறார்.

தனது திறமையை இந்த உலகுக்கு தெரிவிக்க அவர் தைரியமாக தன்னம்பிக்கையுடன் முயற்சி செய்யவில்லை. அவரது திறமை மற்றவர்களின் முயற்சியால்தான் மற்றவர்களுக்கு தெரிந்திருக்கிறது.

தன்னம்பிக்கை இல்லாத ஒரு மாபெரும் கணித மேதை தான் ராமானுஜன் என்கிற எண்ணம் நமக்கு படத்தின் இறுதியில் ஏற்படுகிறது. ஆனால் அவருடைய மனப்போராட்டங்களும், மேதைமையின் உச்சங்களும் பலமில்லாத வசனங்களால் படத்தில் சொல்லப்படுகிறது. ஆழமான காட்சிகள் மிஸ்ஸிங். Beautiful Mind படத்தில் இது போன்ற மனச்சிக்கல் கொண்ட ஒரு மேதை அபாரமாக சித்தரிக்கப்பட்டிருப்பார். அந்த அளவிற்கான ஸ்கோப் இருந்தும் ராமானுஜன் வெகு சாதாரணமாக படமாக்கப்பட்டுவிட்டது.

ரமேஷ் விநாயகத்தின் இசையில் இரண்டு பாடல்கள் அருமையாக இருக்கின்றன. பிண்ணனி இசையும் பரவாயில்லை. எடிட்டிங் லெனின். படத்தின் நீளத்தை வெட்டி எறிவதிலேயே அவருக்கு பாதி நேரம் செலவாகியிருக்கும் என நினைக்கிறேன். சில காட்சிகளை அவர்தான் வரிசைப்படுத்தினாரோ என்று கூட தோன்றுகிறது.

நாம் அறிந்து கொள்ள வேண்டிய ஒரு மேதையை அறிமுகப்படுத்துகிற படம் என்பதால் மட்டும் இந்தப்படத்தை நான் வரவேற்கிறேன். அடுத்த படத்திலாவது நல்ல திரைக்கதை குழுவை வைத்துக்கொண்டு களத்தில் இறங்க வேண்டும் என திரு.ஞானராஜ சேகரனுக்கு வேண்டுகோள் வைக்கிறேன்.

No comments: