Tuesday, April 1, 2014

நடிகை அபிராமி ரிஷிமூலம் டாக் ஷோ தொகுப்பாளரானது எப்படி?

நல்லா இருக்கு... டெஸ்ட் போதும், நேரடியாக நிகழ்ச்சி தயாரிப்பில் இறங்கிவிடலாம் என்றது புதுயுகம் சேனல் நிர்வாகம். பளிச்சென மகிழ்ச்சி!

ஆனால் தொகுப்பாளராக ஒரு சினிமா நட்சத்திரப் பெண்ணை களமிறக்கலாம் என்றார்கள். பளிச் கொஞ்சம் டல்லானது. காரணம் பெண் சினிமாப் பிரபலங்களைப் பற்றி இத்தனை வருடங்களாக எனக்குள் இருந்த பிம்பங்கள்.

அழகாக இருப்பார்கள், ஆனால் அவர்களின் பொது அறிவும், தமிழும் நேரெதிராக இருக்கும். எனவே டாக் ஷோக்களுக்கு அவர்கள் ஒத்து வரமாட்டார்கள் என திடமாக நம்பினேன்.

எனவே முதன்முதலாக அபிராமியின் பெயரைச் சொன்னபோது எனக்குள் கலவையான எண்ணங்கள். அவரைப் பற்றி எனக்குள் எந்தக் கருத்தும் இருக்கவில்லை. ஏனென்றால் அவரை முற்றிலும் நானோ எனது குழுவோ எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவருடைய அறிமுக இ-மெயில் எனக்கும் என் குழுவினருக்கும் நம்பிக்கை தந்தது. அவர் அழகுப் பெண் மட்டுமல்ல, நிறைய அறிவு சார்ந்த கேள்விகளுடன் விடை தேடி பயணிப்பவர் என்பது புரிந்தது.

அமெரிக்காவில் இருந்து வருவதற்கும், அறிமுகத்துக்கும், டிஸ்கஷனுக்கும் சேர்த்து மொத்தம் மூன்றே நாட்கள்தான் இருந்தது. சிம்பிளாக வந்தார், மலையாளம் கலந்த தமிழ் பேசினார், நிறைய தமிழ் வார்த்தைகள் கற்றார், ஒரு டெஸ்ட் ஷீட்டில் கலந்துகொண்டார், வடிவத்தை புரிந்து கொண்டு தயார் என்றார்.

ரிஷிமூலம் நிகழ்ச்சிக்குள் தொகுப்பாளராக அபிராமி வந்தது இப்படித்தான். இன்னமும் அவ்வப்போது மலையாள வார்த்தைகள் வந்துவிழுகின்றன. ஆனாலும் அவருடைய ஈடுபாடு மற்றும் புரிதல் காரணமாக அவர் நிகழ்ச்சியை தொகுக்கும் முறையை இரசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

தற்போது ரிஷிமூலம் டிசைன்ஸ் என்றே வேலூரில் சில உடைகள் விற்க ஆரம்பித்திருப்பதாக அங்கிருந்து வந்த சில பங்கேற்பாளர்கள் சிலர் சொன்னார்கள். அது அபிராமிக்கு கிடைத்த வெற்றி.

அபிராமி எங்கள் குழுவை ஈர்த்திருப்பதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. அது அவருடைய எளிமை. பந்தா இல்லாமல் எங்களுடன் சேர்ந்து ரோட்டுக் கடையில் பானிபூரி, அவசரத்துக்கு சாதா ஹோட்டலில் உணவுகளுக்கும் ஓகே சொல்லிவிடுவார். இதுதான் வேண்டும் என அடம்பிடிக்கமாட்டார்.

தற்போது மீண்டும் படங்களில் நடிக்கத் துவங்கியிருக்கிறார். ரிஷிமூலம் குழுவின் சார்பில் அவர் மேலும் பல வெற்றிகள் பெற வாழ்த்துகள்.

No comments: