Friday, March 7, 2014

மை டியர் பாலாஜி

பாலாஜி! முழுவதும் பிரகாசிக்காமல் உறங்கிவிட்ட நட்சத்திரம். ஆரம்பத்தில் GEC என்ற பெயரில் துவங்கி, பறக்கும் குதிரை லோகோவுடன் புது மாற்றத்துடன் வெளிவந்த விஜய் டிவியை ஞாபகம் இருக்கிறதா? பாலாஜிதான் அன்றைய விஜய் டிவியின் முதல் ஸ்டார். ஒரு படப்பாடல்கள் என்ற நிகழ்ச்சி. இன்றைய லொள்ளு சபாவின் ஒரிஜினல் அதுதான். பிரபல திரைப்படங்களின் Spoof... தமிழ் சின்னத்திரைக்கு புதுசு. நான் வேறொரு நிகழ்ச்சிக்காக உள்ளே நுழைந்து இந்த நிகழ்ச்சிக்கு இயக்குனர் ஆனேன்.

பாலாஜியை அப்போதுதான் எனக்கு அறிமுகம் ஆனது. சின்ன துண்டுக்காகிதத்தில் ஸ்கிரிப்டை வைத்துக்கொண்டு ஸ்பாட்டிலேயே மெருகேற்றும் திறமைசாலி பாலாஜி. தொழில் ரீதியாக அவனுடைய பலமும், பலவீனமும் அதுவே. வசீகரமான முகம். எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் எனக்குரல் மாற்றிப் பேசும் அபாரத் திறமை. பாலாஜியின் அந்தத் திறமைதான் அந்த நிகழ்ச்சியை மெகா ஹிட் ஆக்கியது. ஷோலே அம்ஜத்கானாகவும், நாயகன் கமலாகவும், பாட்ஷா ரஜினியாகவும், கௌரவம் சிவாஜியாகவும் பாலாஜி அசத்திய காட்சிகளை என்னால் மறக்க முடியவில்லை.

அப்போதே பாலாஜியை தெருக்களில் மக்கள் அடையாளம் கண்டுகொள்வார்கள். ஆனால் ஒருபோதும் அவனுக்கு தலைக்கனம் வந்ததில்லை. மற்றவர்கள் மேல் பொறாமையோ, கோபமோ வந்ததில்லை. நண்பர்களை ஊக்குவிப்பதில் பாலாஜிக்கு நிகர் பாலாஜிதான். அவனால் வாய்ப்பு பெற்றவர்கள் பலர். விஜய் டிவி மாறன் ஆரட் அசிஸ்டென்டாக இருந்தான். அவனுக்குள் இருந்த நடிப்புத் திறனை அடையாளம் கண்டு, என்னிடம் சிபாரிசு செய்தது இன்னமு் நினைவிருக்கிறது. இன்றைய லொள்ளு சபா மனோகரையும், திரை நட்சத்திரமாக உயர்ந்துவிட்ட சந்தானத்தையும் சின்னத்திரைக்கு அழைத்துவந்ததும் பாலாஜிதான். கல்லூரி காலத்திலேயே கருணாசும், பாலாஜியும் நெருங்கிய நண்பர்கள். இன்டர்காலேஜ் அளவில் மிகப்பிரபலமாக இருந்தவர்கள். தான் பிரபலமாக இருக்கும்போது கருணாசை வரவழைத்து அவ்வப்போது பாடல் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்வான்.

டாக்டர் மாத்ருபூதமும், டாக்டர் ஷர்மிளாவும் இணைந்து வழங்கிய புதிரா, புனிதமா என்றொரு தைரியமான நிகழ்ச்சியை ஞாபகம் இருக்கிறதா? அந்த நிகழ்ச்சியை முதன் முதலில் இயக்கியது பாலாஜிதான்.

அபார திறமைசாலி. ஆனால் அதிக உயரம் தொடாமலேயே மறைந்துவிட்டான் என்பதில் நண்பர்கள் அனைவருக்குமே வருத்தம்தான். சிவந்த முகத்தில் துளிர்க்கும் புன்னகையுடன் சார் என அழைக்கும் அவனுடைய குரல் எனக்கு இன்னமும் கேட்கிறது. பாலாஜி என்ற நல்ல ஆன்மா சாந்தியடையட்டும்.

உன்னை சந்தித்து பல வருடங்கள் ஆகிவிட்டன. ஆனால் எதனாலோ உன் நினைவு வந்து நேற்று இரவுதான் உன்னைப் பற்றி பேசிக் கொண்டிருந்தேன். ஆனால் இன்று நீ இல்லை.

சென்று வா பாலாஜி! நீ இல்லாவிட்டால் என்ன... உன்னுடைய பிரதியாக கருணாசும், சந்தானமும் இருக்கிறார்கள். 

3 comments:

Unknown said...

rip

Unknown said...

பறக்கும் குதிரை லோகோவுடன் வந்த விஜய் டி.வி பார்க்கும் காலட்6ஹ்தில் அறிமுகப்பட்டிருந்த முகம் பாலாஜி அவருடையது...

நல்ல கலைஞனை நினைவுகூறும் உங்கள் எண்ணங்கள் மதிக்கத்தக்கவை...

Unknown said...

நல்ல கலைஞனை நினைவுகூறும்...
நிமிடங்கள் மதிக்கத்தக்கது...