Saturday, February 25, 2012

கூடங்குளம் எதிர்ப்பு - அமெரிக்க சதியா?

எந்த சலசலப்புக்குமே வாய் திறக்காத பிரதமர் மன்மோகன் சிங்  நேற்று அதிசயமாகப் பேசினார். கூடங்குளம் எதிர்ப்பாளர்களுக்கு அரசு சாரா அமெரிக்க சேவை நிறுவனங்கள் நிதி உதவி அளிக்கின்றன. கூடங்குளம் எதிர்ப்பு பின்னணியில் அமெரிக்க சதி இருக்கிறது என்று பகிரங்கமாகவே குற்றம் சாட்டினார்.

கடந்த சில மாதங்களாகவே இதே குற்றச்சாட்டை மத்திய அமைச்சர் நாராயணசாமி தொடர்ந்து எழுப்பிக் கொண்டிருக்கிறார். தற்போது இ.வி.கே.எஸ் இளங்கோவனும் இதை மேடைக்கு மேடை சொல்லிக் கொண்டிருக்கிறார்.

தினமலர் பத்திரிகை விடாமல் இதே கருத்தை பல மாதங்களாக எழுதிக் கொண்டே இருக்கிறது.

ஆனால் அப்போதெல்லாம் அவ்வளவு சீரியஸாக எடுத்துக்கொள்ளப்படாத இந்தக் குற்றச்சாட்டு தற்போது வலுவடைந்திருக்கிறது. ஏனென்றால் மௌனகுரு என்று வர்ணிக்கப்படும் பிரமரே வாய்திறந்து இந்தக் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

ரஷ்யாவின் கோபம்
பிரதமரே இப்படிச் சொன்னதும், இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் அலெக்ஸாண்டர் எம்.கடாகின் இன்று மீடியாவுக்கு வந்துவிட்டார். கொஞ்சம் கோபமாகவே தனது குற்றச்சாட்டுகளையும், சந்தேகங்களையும் பகிரங்கமாக பேட்டியில் தெரிவித்தார்.

 கூடன்குளம் அணு மின் நிலையம் உலகிலேயே100 சத வீத பாதுகாப்பானது. புகுஷிமா விபத்து நடந்தபோது போராட்டக்காரர்கள் சும்மாதான் இருந்தார்கள். ஆனால் 6 மாதத்திற்கு பின்னர் அவர்கள் கூடங்குளம் வேண்டாம் என்று பிரச்னை எழுப்புவது போராட்டக்காரர்கள் மீதான சந்தேகத்தை தெளிவாக்கியிருக்கிறது. அவர்களுடைய போராட்டத்துக்கான நிதி அமெரிக்க தொண்டு நிறுவனங்கள் மூலமாக இந்தியாவிற்கு வருகிறது. அவர்களுக்கு ரஷ்யாவின் துணையுடன் இங்கு அணு உலை அமைவதில் விருப்பமில்லை. இந்திய பிரதமரே பகிரங்கமாக குற்றம்சாட்டியபின், எங்களுடைய சந்தேகம் உண்மைதான் என்று ஊர்ஜிதமாகிறது. எனவே அணுமின் நிலையம் துவக்குவதற்கு ரஷ்யா முழு ஆதரவு அளிக்கும் என்றார்.


போராட்டக்குழு தலைவர் உதயகுமாரின் சவால் - நாங்கள் யாரிடமும் பணம் பெறவில்லை
ஆனால் போராட்டக் குழு தலைவர் உதயகுமார் அசரவில்லை. ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் பிரதமருக்கு நேரடியாக சவால் விடுத்தார். போராட்டக் குழுவுக்கு அமெரிக்க நிதி கிடைப்பதாக பிரதமர் சொல்வது பொய். குற்றச்சாட்டை நிரூபித்தால் நாங்கள் போராட்டத்தை கை விடுகிறோம். நிரூபிக்க முடியாவிட்டால் பிரதமர் பதவி விலகத் தயாரா என்று பகிரங்கமாக சவால் விட்டிருக்கிறார். அது மட்டுமல்லாமல் பிரதமர், அமைச்சர் நாராயணசாமி, ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ஆகிய மூவர் மீதும், தவறான குற்றச்சாட்டுகளை சொல்வதாக வழக்கு தொடரும் முயற்சியிலும் இறங்கிவிட்டார்.


உரிமம் ரத்து செய்யப்பட்ட அமெரிக்க NGOக்களின் பெயர் என்ன? மத்திய அரசு தெரிவிக்க வேண்டும்.
இந்நிலையில் பிரதமர் அலுவலகத்தில் இருந்து 3 அமெரிக்க தொண்டு நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.


பிரதமர் அலுவலகமும், போராட்டக் குழுவினரும் நேரடியாக மோதிக் கொள்ளும் இந்த சூழலில், உரிமம் ரத்து செய்யப்பட்ட 3 அமெரிக்க தொண்டு நிறுவனங்களின் பெயர்களையும் மத்திய அரசு வெளியிட வேண்டும். ஏன் உரிமம் ரத்து செய்யப்பட்டது என்ற காரணத்தையும் ஆதாரங்களுடன் வெளியிட வேண்டும். அப்போதுதான் பிரதமர் கூறியி குற்றச்சாட்டுகளுக்கு நம்பகத்தன்மை கிடைக்கும்.


ரஷ்யா கொஞ்சம் அளவுக்கு மீறி பேசுகிறதா?
வழக்கம்போல இந்த விஷயத்தில் பிரதான எதிர்கட்சிகளான திமுகவும், அதிமுகவும் வாயைத் திறக்காமல் இருக்கின்றன. அவர்களுக்கு ஓட்டு பயம். ரஷ்யா கொஞ்சம் அளவுக்கு அதிகமாகவே இன்று பேசியதாகத் தோன்றியது. கூடங்குளம் விஷயத்தை பொறுத்தவரை அவர்கள் வியாபாரிகள்தான். அவர்களுடைய தொழில்நுட்பத்தை நமது மத்திய அரசு பணம் கொடுத்து பயன்படுத்திக் கொள்கிறது. எனவே ஒரு கன்ஸல்டன்ட் என்ற அளவுடன் ரஷ்யா தனது மூக்கை நிறுத்திக் கொள்வது நல்லது. தேவையில்லாமல் தனது அமெரிக்க வெறுப்புக்கு, இந்தியாவில் குஸ்தி மேடை அமைக்கும் தோரணையை கைவிட வேண்டும்.


கூடங்குளம் ஆதரவு/எதிர்ப்பு பின்னணியில் தலை தூக்கும் இதர பிரச்சனைகள்
அண்ணா ஹசாரேவைப் பார்த்து அவருடைய பாணியிலேயே, போராட்டக் குழுவினர் வலுவாக அணி சேர்ந்ததும் அவர்களை கலைக்க ஜெயலலிதா அரசு பேச்சு வார்த்தை நடத்தியது. ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை. சில நாட்களிலேயே கிறிஸ்தவர்கள் ஒன்று சேர்கிறார்கள். அவர்கள் கூடங்குளத்தை தடுக்கிறார்கள் என்று தினமலர் போன்ற பத்திரிகைகளின் ஆதரவுடன் பிரச்சாரம் செய்யப்பட்டது. இன்னமும் மெலிதாக இந்தப் பிரச்சனை இருக்கிறது.


அந்தப் பிரச்சாரம் அவ்வளவாக எடுபடவில்லை என்றதும், கிறிஸ்தவ அமைப்புகளுக்குப் பதிலாக அமெரிக்க நிதி உதவி பெறும் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் இந்த அணு உலைச் சண்டையில் இழுக்கப்பட்டிருக்கின்றன.


பிரதமரும் இந்த குற்றச்சாட்டில் இணைந்து கொண்டார் என்பதுதான் ஹைலைட். உபரி லைட்டாக ரஷ்யாவின் அமெரிக்க எதிர்ப்பு பிரசாரம் இந்தியாவில் தலைகாட்ட ஆரம்பித்திருக்கிறது. ஆனால் அமெரிக்க வெளியுறவுத் துறை எங்களுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்று கூறியிருக்கிறது.


மக்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது
எது உண்மை எது பொய் என்பது காலப்போக்கில் தெரிந்துவிடும். ஆனால் சில விஷயங்களில் இந்திய மக்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். ஹிந்து, கிறித்துவன் என்ற பிரிவினை வாதங்களுக்கு பலியாகக் கூடாது. அடுத்து ரஷ்யா உட்பட எந்த நாட்டையும், நமது இந்தியாவிற்குள்ளேயே இருந்து மற்ற நாடுகளுக்கு எதிரான வெறுப்பை உமிழ இடம் தரக் கூடாது.


அணு உலை விவகாரத்தில் அமெரிக்கா, ரஷ்யா இருவருமே வியாபாரிகள். இரு வியாபாரிகளுக்கும் ஒருவரையொருவர் பிடிக்காது. ஆனால் அவர்களுடைய சண்டைக்கு இந்தியா மைதானமாகிவிடக் கூடாது.

கோர்டில் சசிகலாவின் ஒப்புதல்! (சட்டப்படி) வாக்கு மூலமே அல்ல!

செக்ஷன் 313 கேள்விப்பட்டிருக்கீங்களா? எனக்கு நான் படிச்ச டென்த் பி செக்ஷன்தான் தெரியும். இன்னைக்கு காலையிலதான் செக்ஷன் 313ஐ பத்தி கேள்விப்பட்டேன். எனக்கு லெட்டர்ஸ் டு த எடிட்டர் பிடிக்கும். ஒரே செய்தியைப் பற்றி (படித்த எழுதக்கூடிய) மக்களின் வெவ்வேறு கோணங்கள் கிடைக்கும் என்பதால். சில நேரம் அதில் வல்லுனர்களும் எழுதுவார்கள். எல்லாவற்றையும் சேர்த்து படித்தால் சுவாரசியமாக இருக்கும். இன்று காலையில் காபியுடன், ஒரு சுவாரசியமும் சேர்ந்தே கிடைத்தது.

இன்று காலை ஹிந்து நாளிதழில் டாக்டர் ஏ.இ.செல்லையா என்பவர்தான் இந்த (டெக்னிகல்) குண்டை போட்டிருந்தார். ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் எல்லா தப்பையும் நான்தான் செய்தேன் என்று சசிகலா ஒப்புக் கொண்டுவிட்டதாக நாம் எல்லோரும் அப்பாவியாக நம்பிக் கொண்டிருக்கிறோம். சசிகலா எல்லாக் குற்றங்களையும் தானே செய்ததாக வாக்குமூலம் தந்துவிட்டதாக நாம் எல்லோருமே நம்ப வைக்கப்பட்டிருக்கிறோம். முந்திரிக்கொட்டை செய்திச் சேனல்களும், பரபரப்பை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட செய்தித் தாள்களும், புலனாய்வு செய்வதாக சொல்லிக் கொள்ளும் பத்திரிகைகளும், அப்படித்தான் அந்த சசிகலா அழுகைக் காட்சியை வர்ணித்திருந்தன. ஆனால் . . .

நான் சொல்வதெல்லாம், உண்மையைத் தவிர வேறெதுவும் இல்லை என்று சாட்சிகள், குற்றவாளிகள் எல்லோரும் கோர்டில் சொல்வதை (சினிமா வாயிலாக) நாம் அறிவோம். கிரிமினல் நடவடிக்கைகளில் செக்ஷன் 313 ஒரு ஸ்பெஷல். இதன்படி
  • குற்றம் சாட்டப்பட்டவரிடம் இது போல சத்யப் பிரமாணம் வாங்கிக் கொள்ளப்படாது. 
  • சத்யப்பிரமாணம் வாங்கிக் கொள்ளாததால் குற்றம் சாட்டப்படுபவர் பொய் சொல்லவும் அனுமதி உண்டு. அவர் சொன்னது பொய் என பின்னர் தெரியவந்தாலும், அதற்கு தண்டனை கிடையாது. 
  • இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல மாட்டேன் என்று மறுக்கிற உரிமையும் குற்றம் சாட்டப்பட்டவருக்கு உண்டு. 


பின்ன எதுக்குதான் செக்ஷன் 313?
தனக்கு எதிராக என்னென்ன குற்றச்சாட்டுகள் உள்ளன? அது தொடர்பான கேள்விகள் என்ன என்பதை குற்றவாளிகள் தெரிந்து கொள்ள சட்டம் தருகிற ஒரு வாய்ப்பாம். தன்னை தற்காத்துக்கொள்ள, செக்ஷன் 313ன் கீழ் கேட்கப்படும் கேள்விகளை குற்றம்சாட்டப்பட்டவர் பயன்படுத்திக் கொள்ளலாம். எனவே இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்லலாம் (அ) பொய் சொல்லலாம் (அ) பதில் தெரியாது என பாஸில் விடலாம். குற்றம் சாட்டப்பட்டவருக்கு சட்டம் தெரிந்தே இந்த சலுகையை தருகிறது.

அதனால் செக்ஷன் 313ன் கீழ் ஒப்புக் கொள்ளப்படும் குற்றங்கள் வாக்கு மூலங்கள் அல்ல. எந்த வேல்யுவும் இல்லாத ஒரு கேள்வி பதில் வேடிக்கை அவ்வளவுதான். எனவே ஜெ. எந்த குற்றமும் செய்யவில்லை. எல்லாவற்றையும் நான்தான் செய்தேன் என்று சசிகலா கோர்டில் அழுதுகொண்டே சொன்னது வாக்குமூலமே அல்ல. கோர்ட் அதனை வாக்குமூலமாக பதிவு செய்து கொள்ளவில்லை.

செக்ஷன் 164 என ஒன்று இருக்கிறதாம். அதன் கீழ் சொல்லப்படும் பதில்கள்தான் வாக்குமூலமாக பதிவு செய்யப்படும். ஜெவோ சசிகலாவோ இந்த செக்ஷனின் கீழ் கேள்விகளை இது வரையில் எதிர்கொள்ளவில்லை என்றே நினைக்கிறேன். ஒருவேளை அப்படி எதிர்கொண்டால் அவர்கள் எப்படி பல்டி அடிப்பார்கள் என்பதை, இதை வாசிக்கிற உங்கள் யூகத்துக்கே விட்டுவிடுகிறேன்.

ஜெவும் சசியும் பிரிந்துவிட்டார்கள் என்ற செய்தியை மீடியாக்கள் நம் தலையில் திணிக்கின்றன. கிடையவே கிடையாது! வழக்குகளில் இருந்து தப்பிக்க, வழக்கை திசை திருப்ப வேண்டியதிருக்கிறது. அதற்கான தந்திரக் காட்சிகள்தான் இவை என்று யூகங்களையும் வதந்திகளையும் சிலர் கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

செக்ஷன் 313 இந்த வதந்திகளுக்கும், யூகங்களுக்கும் வலு சேர்க்கிறது. . . நம்புவதும் நம்பாததும் அவரவர் இஷ்டம். நான் மீண்டும் லெட்டர்ஸ் டு த எடிட்டர் படிக்கப் போகிறேன். நீங்க. . .?

மாத்தி யோசி - சக்ஸஸ்!

வகுப்பறையாக இருந்தாலும், இன்டர்நெட் அரட்டை அறையாக இருந்தாலும், எனக்கு மாணவர்களுடன் பழகுவது மிகப் பிடிக்கும்!  சென்ற வாரம் மீண்டும் அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தது.

மாத்தியோசி! புதிதாக வெளிவரப்போகும் இளைஞர் மாத இதழ்! சென்னைக்கு சற்று வெளியே இருக்கும் பொன்னேரியில் இருந்து வெளிவரப்போகிறது. அதனால் பொன்னேரியில் வசிக்கும் மாணவர்களுக்கு ஏதாவது உருப்படியாகச் செய்ய ஆரம்பித்த பின், முதல் இதழை துவக்கலாம் என்று முடிவு செய்தோம்.

முதல் செயலாக, 10வது மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான இலவச பயிற்சி முகாம் செய்ய முடிவு செய்தோம். இது தேர்வுக் காலம் என்பதால், மாணவர்கள் அச்சமின்றி தேர்வு எழுதுவது எப்படி என்பதே அந்தப் பயிற்சி முகாம்.

கிட்டத்தட்ட 170 மாவணர்கள் ஆர்வமுடன் வந்திருந்தார்கள். மாணவிகளும் அதிக அளவில் கலந்து கொண்டதால் மிகச் சந்தோஷமாக இருந்தது.

முதலில் இறுக்கமாக இருந்த மாணவர்களுடன் ஜாலியாக பேசத் துவங்கி அவர்களை சகஜ நிலைக்கு கொண்டு வந்து, அன்றைய முகாமுக்கு தயார் செய்தேன். மாணவர்கள் பயம் கலைந்து கலகலவென ஆனார்கள்.

பின்னர் திரு. துரை அரசன் ஒரு உற்சாக உரையாற்றினார். குட்டிக் குட்டி கதைகள், பாடல்கள் என பேச்சு நீண்டதால் ஒரே கரகோஷம்.

தொடர்ந்து தியானம் மற்றும் யோகா! தேர்வுக்கு போகும் முன் மனதையும், உடலையும் கட்டுக்குள் கொண்டு வர சின்னச் சின்ன பயிற்சிகள். ஒரு விளையாட்டு போல அவற்றை பயிற்றுவித்ததால் மாணவ, மாணவிகள் முழு ஈடுபாட்டுடன் பயிற்சிகளை செய்தார்கள்.

இறுதியாக திரு.சுரேகா கண்டிப்பும், நகைச்சுவையும் கலந்து டிப்ஸ்களை அள்ளி வீசினார். வந்திருந்த அனைவரும் கவனம் பிசகாமல் அவருடன் ஐக்கியமாகினர்.

ஒரு நெகிழ்வான கதையுடன் சுரேகா முகாமை நிறைவுறச் செய்தார். வந்திருந்த அனைவருமே ஏழை மாணவர்கள். கதையைக் கேட்ட மாணவர்களின் கண்களில் கண்ணீர். எப்படியாவது படித்து முன்னேற வேண்டும் என்ற துடிப்பு. தன் குடும்பத்தின் வறுமையை ஒழிக்க வேண்டும் என்ற கனவு. என வித விதமான எண்ணங்கள், ஆனால் படித்து நன்றாக பாஸ் பண்ண வேண்டும் என்ற ஒரே இலக்குடன் அனைவரும் விடைபெற்றார்கள்.

பயிற்சியாளர்கள் அனைவரிடமும் மாணவர்கள் ஆர்வமுடன் ஆட்டோகிராஃப் வாங்கியது கண்கொள்ளாக் காட்சி. சினிமா நடிகர்களை மட்டுமல்ல, தங்களுக்கு உதவ முன் வந்திருக்கும் நல் இதயங்களையும் ஆராதிப்போம் என்று அவர்கள் சொல்லாமல் சொன்னார்கள்.

கிராமப்புற மாணவர்களிடம் நான் ஒரு முக்கியமான அம்சத்தை கவனித்திருக்கிறேன். வழி காட்ட ஆள் இல்லாத வரை இலக்கின்றி இருக்கிறார்கள். வழிகாட்டி கிடைத்துவிட்டால்,  இலக்கை அடையாமல் விட மாட்டார்கள்.

பொன்னேரி மாணவர்கள் அனைவருக்கும் மாத்தியோசி சார்பாக மீண்டும் ஒரு முறை வாழ்த்துகள்!

கண் சிமிட்டு முத்தம்



கடைத்தெருவில் 

அப்பா கவனிக்காத நேரத்தில்
குறும்பாக கண் சிமிட்டுவாள்! - நான்
இடை வளைவில்
அவளே கவனிக்காத நேரத்தில்
எறும்பாக விரல் நகர்த்தி
இதழோடு இதழ் சீண்டுவேன்.

Friday, February 24, 2012

சென்னை போலீஸ் - ஒய் திஸ் கொலவெறி!

முதல் வரியிலேயே சொல்லிவிடுகிறேன். இது சென்னை போலீசுக்கு எதிரான கட்டுரை அல்ல. கொள்ளையர்களுக்கும், குற்றவாளிகளுக்கும் ஆதரவாக கொடி பிடிக்கும் கட்டுரையும் அல்ல. ஆனால் அதிகாரத்தில் இருப்பவர்கள் சொல்வது அனைத்தும் உண்மை என்பதை அப்படியே நம்பமுடியாது. அவர்களின் அத்துமீறல்கள், ஜோடனைகள் பற்றி கேள்விகள் எழுவது இயல்பு.

பின்வருபவை, சென்னை போலீஸ் நடத்தி முடித்திருக்கும் எண்கவுன்டர் பற்றிய சில சந்தேகங்கள் (மீடியாக்கள் எழுப்பியுள்ள கேள்விகளின் தொகுப்பு)

துப்பாக்கி சத்தம் கேட்கவே இல்லை
நள்ளிரவு 1 மணிக்கு துவங்கிய துப்பாக்கி சண்டை 1.15 வரை நீடித்ததாக போலீஸ் சொல்கிறது. சுவற்றில் 10 இடங்களில் குண்டு பாய்ந்த சுவடுகள் (Ricochet) உள்ளது. உள்ளிருந்த 5 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இரண்டு போலீசார் துப்பாக்கிக் குண்டு காயம் அடைந்திருக்கிறார்கள். வீட்டுக்குள் கதவை உடைத்து போலீஸ் நுழைந்திருக்கிறது. எவ்வளவு சத்தம் கேட்டிருக்க வேண்டும்.   ஆனால் சுற்றுவட்டாரத்தில் இருந்த எவருக்கும் ஏன் துப்பாக்கிச் சத்தம் மட்டும் கேட்கவே இல்லை. வேறு சில சத்தங்கள் கேட்டது போல இருக்கிறது என்று மற்றவர்களும் சந்தேகமாக இழுக்கிறார்கள். அனைத்தும் சைலன்ஸர் பொருத்திய துப்பாக்கிகளா?

தோட்டாக்களின் தடயமே இல்லாத ஜன்னல்கள்
ஒரு ஜன்னல் க்ரில் வழியாக முதல் ரவுண்டை சுட்டதாக போலீஸ் சொல்லியிருக்கிறது. வெறும் 9 செ.மீ அகலம் மட்டுமே அந்த துளை வழியாக நிச்சயம் கையை விட முடியாது. அதுவும் துப்பாக்கி ஏந்திய கையை விட முடியாது. எனவே வெளியே இருந்துதான் சுட்டிருக்க முடியும். ஆனால்  வெளிச்சமே இல்லாத நள்ளிரவில் 9 செமீ அகலத் துளை வழியாக ஜன்னல் கம்பிகளில் கூட படாமல் சுட்டோம் என்று கூறுவதை நம்ப முடியவில்லை. துப்பாக்கி குண்டுகள் நிச்சயம் ஜன்னலில் பட்டிருக்க வாய்ப்பு உண்டு. ஆனால் அப்படி தடயம் எதுவும் இல்லை.

சேதமே இல்லாத உடைத்ததாகச் சொல்லப்படும் கதவுகள், தாழ்பாள்கள்
ஜன்னல் வழியாக சுட்டுவிட்டு அதன் பின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று என்கவுண்டரை தொடர்ந்ததாக போலீஸ் ஜோடிக்கிறது. ஆனால் உடைக்கப்பட்டதற்கான எந்த அடையாளமும் கதவிலோ, தாழ்பாள்களிலோ இல்லை.

துப்பாக்கிகள் உண்மையா? பொம்மையா?
கொள்ளை சம்பங்கள் அனைத்திலும் கொள்ளையர்கள் பொம்மைத் துப்பாக்கியை பயன்படுத்தியாக போலீஸ் கூறியிருந்தது. ஆனால் என்கவுண்டர் நடந்த அறையில் 7 உண்மைத் துப்பாக்கிகள் கிடந்ததாக போலீஸ் அறிக்கை சொல்கிறது. உண்மைத் துப்பாக்கி வைத்திருந்தவர்கள், ஏன் பொம்மைத் துப்பாக்கியுடன் கொள்ளையில் ஈடுபட்டார்கள்.

பூட்டப்பட்ட வீட்டுக்குள்ளிருந்து போலீசை துரத்திச் சுட்டார்களாம்
போலீஸ் தரப்பில் இருவருக்கு காயம். கொள்ளையர்கள் சுட்டதால்தான் தற்காப்புக்காக நாங்கள் சுட்டோம் என்கிறது போலீஸ். ஆனால் வீடு பூட்டியிருந்தது. முதலில் ஒரு ரவுண்டு சுட்டோம். அதற்குப்பின் கேட்டை உடைத்துதான் உள்ளே சென்றோம் என்கிறது அதே போலீஸ். வெளியே எட்டிப் பாரக்கக் கூட சிரமமான ஒரு சிறிய பூட்டப்பட்ட அறைக்குள் இருந்தவர்கள் வெளியில் இருந்த போலீசை எப்படிச் சுட்டிருக்க முடியும்?

ஏன் சுற்றி வளைக்கவில்லை?
பூட்டப்பட்டிருந்த வீட்டுக்குள் இருந்த கொள்ளையர்கள்தான் முதலில் சுட்டார்கள் என்று வைத்துக் கொண்டாலும், பூட்டியிருந்த வீட்டுக்குள் பதுங்கியிருப்பவர்களை எளிதாக மடக்கியிருக்கலாமே.. வீட்டின் மொத்த பரப்பே 300 சதுர அடிதான். அதில் ஒரு சிறிய அறைக்குள்தான் கொள்ளையர்கள் இருந்திருக்கிறார்கள். கதவைத் திறந்து அவர்கள் தப்பி ஓடுவதற்கு இருந்த ஒரே வழியும், குறுகலனா சிறிய பாதைதான். போலீஸ் எளிதாக அவர்களை மடக்கியிருக்க முடியும். ஆனால் ஏன் அவர்களை உயிருடன் பிடிக்க முடிவு செய்யவில்லை.

அறைக்குள் இருந்த அனைவருமே கொள்ளையர்கள் என்பதை எப்படி கண்டுபிடித்தார்கள்?
என்கவுண்டர் நடத்துவதற்கு முன்பு, உள்ளே இருந்த அனைவருமே கொள்ளையர்கள்தான் என்பதை போலீஸ் எப்படி உறுதி செய்தது? வங்கி CCTV காமிராவில் சிக்கியவன், காமிராவில் அணிந்திருந்த அதே உடையில் இறந்து கிடந்தான். மற்றவர்கள் கொள்ளையர்கள்தான் எப்பதை போலீஸ் எப்போது உறுதி செய்தது. சுடுவதற்கு முன்பா? சுட்ட பின்பா?

என்கவுண்டரை எதிர்பார்த்து போலீஸ் தயாராகச் சென்றது எப்படி?
போலீஸ் நடவடிக்கைகளை பார்க்கும்போது, கொள்ளையர் தேடுதல் வேட்டை நிச்சயம் என்கவுண்டரில்தான் முடியும் என்று எதிர்பார்த்து செயல்பட்டது போல இருக்கிறது. சம்பவம் மதியம் வரை அவர்களிடம் பொம்மை துப்பாக்கிதான் இருந்தது என்று கூறிய போலீஸ், அவர்களிடம் உண்மைத் துப்பாக்கி இருப்பதை எப்போது அறிந்தது?


இலட்சங்களை கொள்ளையடித்தவர்கள் சில ஆயிரம் அட்வான்ஸ் பணத்தை திரும்பப் பெறவா காத்திருந்தார்கள்?

பல இலட்சங்கள் கொள்ளைக்குப் பின், போலீஸ் தேடுவதாகத் தெரிந்ததும் ஏன் வீட்டை காலி பண்ணவில்லை? வீட்டு ஓனர் தாமதமாகத் தருவதாகச் சொன்ன சிறிய அட்வான்ஸ் தொகைக்காக கொள்ளையர்கள் காலி பண்ணாமல் இருந்தார்களாம். இதுவும் போலீஸ் சொன்ன செய்திதான்.


என்கவுண்டர் நள்ளிரவில், செய்தியோ அதிகாலையில்தான்
நள்ளிரவு 1.15 மணிக்கே என்கவுண்டர் முடிந்துவிட்டதாக போலீஸ் சொல்கிறது. ஆனால் அதிகாலை 5.30 மணி வரை மீடியாக்களை சம்பவ இடத்துக்கு அனுமதிக்கவே இல்லை. எதற்காக இந்த இடைப்பட்ட 4 மணி நேரம் பயன்படுத்தப்பட்டது? ஏன் ஒரு கிலோமீட்டருக்கும் அதிகமான தொலைவிலேயே மீடியாக்கள் தடுத்து நிறுத்தப்பட்டன?

குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் தண்டிப்பதே சந்தேகத்துக்கு உரிய வகையில் இருப்பதை அனுமதிக்க முடியாது. தீவிரவாதி கசாப்பையே இன்னும் கோர்ட்டில் வைத்து விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் 5 பேரும் குற்றவாளிகள்தானா என்று உறுதிப்படுத்தாமலே அவர்களை சுட்டுக் கொன்றுவிட்டதாகச் சொல்வது சந்தேகங்களை எழுப்புகிறது.

கடைசியாக ஒரு சந்தேகம் : 
வட மாநிலத்தைச் சேர்ந்த கொள்ளையர்கள் என்ற பதத்தை அடிக்கடி போலீஸ் பயன்படுத்துவதன் நோக்கம் என்ன?

டியூஷன் முத்தம்



அவள் மேனி மறைப்பது எப்படி என 

அவள் அதரங்களை என் இதழ்களால் மூடி
அவள் புடவைத் தலைப்புக்கு டியூஷன் எடுத்தேன்!

Wednesday, February 22, 2012

கலர் பொருத்த முத்தம்



புது தாவணிக்குப் பொருத்தமாய்

அவள் அதரங்களையும் சிவக்க வைத்தேன்!
கன்னங்கள் தானாக சிவந்து கொண்டன!

Tuesday, February 21, 2012

எதற்கோ முத்தம்




அவள் எதற்கோ திரும்பிப் பார்த்தாள்.

நான் அதற்குத்தான் என நினைத்து
அவள் இதழ் படர்ந்தேன்.
அவள் தோள் தவழ்ந்த மல்லிகைச் சரங்கள்
அணைப்பில் கசங்கியபடி ஏதோ சொல்கின்றன.
என்னவென்று கேட்டுக் கொள்கிறேன்,
முத்தங்கள் முடிந்தபின்!

அணி முத்தம்



கோவிலுக்குள் நுழையும் முன் 

பாதணிகளை வாசலிலும், 
முத்த அணிகளை 
அவள் இதழ்களிலும் விட்டுச் சென்றேன்.