Tuesday, August 7, 2012

மேரி கோம்! - இந்திய பெண்களுக்கு ரோல்மாடல்!

மணிப்பூர் நகரமே குஷியில் துள்ளிக் குதிக்கிறது. அதிரும் டிரம் இசையால் இம்பால் இளைஞர்கள் நகரையே குலுங்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒலிம்பிக் சலிப்பில் இருந்த இந்திய நாடு, நிமிர்ந்து உட்கார்ந்திருக்கிறது.

காரணம் குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோம்! 51 கிலோ எடைப் பிரிவில் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த காலிறுதி வெற்றி, அவருக்கு வெண்கல பதக்கத்தை உறுதி செய்திருக்கிறது.

29 வயதான அவர் இரு குழந்தைகளுக்கு தாய்! ஹாயாக பிடித்ததை சமைத்துக் கொண்டு, அபத்த சீரியல்களில் நேரம் கழிக்கலாம். ஆனால் மேரி கோம் அப்படி இருக்கவில்லை. மணிப்பூர் காவல்துறையில் தற்போது ASPயாக பணிபுரிகிறார். ஆனால் சிறுவயதிலிருந்தே குத்துச் சண்டையின் மேல் காதல். அவருடைய கரங்கள், தன் இரட்டைக் குழந்தைகளை கொஞ்சியதை விட, பாக்ஸிங் கையுறைகளை அணிந்திருந்த நேரம்தான் அதிகம்.

முரட்டுத்தனமாக விளையாடாதே. நுணுக்கங்களை பயன்படுத்து என்று மட்டும் என் மனைவிக்கு சொன்னேன். அவள் என்னை மட்டுமல்ல, மணிப்பூரையும், இந்தியாவையும் பெருமைப்படுத்திவிட்டாள் என்று பூரிக்கிறார் கணவர்.

‘அவருக்கு தங்கம் வெல்லும் தகுதியுள்ளது. அவர் வெல்வார் என்று நம்பிக்கையும் இருக்கிறது‘, என்று ஊக்கப்படுத்துகிறார் அவருடைய முதல் கோச் இபம்சா சிங்.

‘அடுத்த இரு போட்டிகளையும் வென்று அவர் தங்கம் வெல்ல கடவுளை பிரார்த்திப்பேன்‘ என்று நெகிழ்கிறார், மணிப்பூர் ஒலிம்பிக் அசோஷியனின் செயலாளர் ரோமன் சிங்!

மேரி கோம், ஏற்கனவே ஐந்து முறை உலக சாம்பியனாக இருந்தவர். இரு தினங்களுக்கு முன் அவருடைய குழந்தைகளுக்கு பிறந்த நாள். இந்த வெற்றி அவருடைய குழந்தைகளுக்கு மட்டும் பிறந்த நாள் பரிசு அல்ல, இந்தியாவுக்கே பரிசுதான்.

இந்தியாவின் சார்பில் கலந்து கொண்டு பதக்கம் வென்ற ஒரே வீராங்கனை மேரி கோம்தான்.

எல்லா துறைகளிலும் ஆண்களுக்கு இணையாக முன்னேறிவரும் இந்தியப் பெண்களுக்கு, புதிய ரோல் மாடல் மேர் கோம்!

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

பெருமைப் பட வேண்டிய தகவல்...
பகிர்வுக்கு பாராட்டுக்கள்...

தொடர வாழ்த்துக்கள்... நன்றி...


என் தளத்தில் : மனிதனின் உண்மையான ஊனம் எது ?