Friday, June 29, 2012

இந்தியாவில் பெட்ரோல் விலை ஏற்ற இறக்கங்களுக்கு காரணம் என்ன?

பெட்ரோல் விலை ரூ. 2.46 காசுகள் குறைந்திருக்கிறது.

இந்த வரியை படிப்பதற்கு சில வாரங்களுக்கு முன்பு நீங்கள் பெட்ரோல் பங்க்கில் க்யூவில் நின்று வந்திருக்கலாம். அல்லது நண்பருக்கு ஃபோன் செய்து ஆட்டோகாரன் பெட்ரோல் விலையை காரணம் காட்டி 200 ரூபாய் கேட்டதைச் சொல்லி அங்கலாய்த்திருக்கலாம். அல்லது உங்கள் அக்காவோ அம்மாவோ பெட்ரோல் விலை ஏறினா ஏன் காய்கறி விலை ஏறணும் என்று காய்கறி வண்டிக்காரனிடம் மல்லு கட்டுவதை கவனித்திருக்கலாம்.

அதே போல இந்த வரியை வாசிக்கும்போது, அப்பாடி ஏதோ இரண்டு ரூபாயாவது இறக்கினானுங்களே, இதை அப்பவே செய்திருக்கலாம்ல. ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு குறைச்சிட்டாங்களா, என ஆபீசிலும், கேன்டினிலும், பஸ்ஸிலும் பேசிக் கொண்டு வந்திருப்பீர்கள்.

சரி ஏன் இந்த ஏற்ற இறக்கங்கள்? மக்கள் கொதித்துப் போயிருக்கிறார்கள் என்று தெரிந்தும் ஏன் ஏழு ரூபாய் விலை ஏறியது? விலை ஏற்றத்தை மறந்து அதற்குப் பழகிப் போயிருந்தபோது ஏன் விலை இறங்கியது?

பொதுவாக கச்சா எண்ணை விலை ஏறினால் உலகமெங்கும் பெட்ரோல் விலையும் எகிறிவிடும். ஆனால் இந்த முறை அப்படியில்லை. கச்சா எண்ணை ஒரு நயா பைசா கூட ஏறவில்லை. ஆனாலும் பெட்ரோல் விலை ராக்கெட் போல எகிறியது. காரணம் யூரோ கரன்ஸி. அதென்ன யூரோ கரன்ஸி. உலகப் போருக்குப் பின்னர் சர்வதேச அளவில் அதிகம் புழங்கும் கரன்சியாக அமெரிக்க டாலர் வந்துவிட்டது. எனவே உலகமே போண்டியானாலும் அமெரிக்கா சமாளித்துக் கொள்ளும் நிலை இன்றும் இருக்கிறது. இதைத் தடுக்க ஐரோப்பிய நாடுகள் பல ஒன்று சேர்ந்து ஐரோப்பிய யூனியன் ஒன்றை உருவாக்கின. இந்த நாடுகள் அனைத்துக்கும் பொதுவாக யூரோ மணி என்ற கரன்ஸியை உருவாக்கின. டாலருக்குப் போட்டியாக இதை உருவாக்கி தங்களுக்குள் கொடுக்கல் வாங்கலை எல்லாம் யூரோ கரன்சியாகவே செய்து வந்தார்கள். ஆனால் இதெல்லாம் ஓரளவுக்குத்தான். ஏற்கனவே ஏற்றுமதி இறக்குமதிக்காக கடன் வாங்கிய நாடுகள் பல, டாலர்களில்தான் வர்த்தகம் செய்து வந்தார்கள். அதனை உடனடியாக மாற்ற இயலவில்லை. இந்த யூரோ-டாலர் குழப்பத்தால் யூரோ மணியின் மதிப்பு தடாலடியாக கீழே விழுந்துவிட்டது. இதனால் ஐரோப்பிய யூனியனில் அங்கத்தினர்களாக இருந்த சில நாடுகள் திவாலாகிவிட்டன.

யூரோ மணி கீழே விழுந்ததும் பதற்றத்தில் டாலரின் மதிப்பு முன்பை விட எக்கச்சக்கமாக உயர்ந்தது. எனவே வேறு வழியில்லாமல் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கீழே இறங்கிக் கொண்டே வந்தது. எனவே டாலருக்கு நிகராக 45 ரூபாயாக இருந்த இந்திய கரன்ஸி கிட்டத்தட்ட 60 ரூபாயாக இறங்குகிற நிலை வந்துவிட்டது. நாம் நம் நாட்டிற்கு தேவையான கச்சா எண்ணையை டாலர்களில்தான் இதுவரை வாங்கிக் கொண்டிருக்கிறோம். இனிமேலும் அப்படித்தான் வாங்க முடியும். ஆனால் ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு உயர்ந்துவிட்டதால் நாம் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு குறைந்தபட்சம் 8 ரூபாய் அதிகம் செலவழிக்க வேண்டிய நிலை வந்துவிட்டது.

நம்நாட்டில் பெட்ரோல் விற்பனை பெரும்பாலும் தனியார் வசம்தான் உள்ளது. இந்த விலை உயர்வை தாங்க முடியாத அந்த நிறுவனங்கள் அடம்பிடித்து விலையை ஏற்றிவிட்டன.

காரணம் இந்த விலைக்கு கச்சா எண்ணையை தொடர்ந்து வாங்கினால் ஒரு நாளைக்கு சில ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாகக் கூறி எண்ணை நிறுவனங்கள் தொடர்ந்து பெட்ரோல் சப்ளை செய்வதை நிறுத்திவிட்டன.

இதை எப்படிக் குறைப்பது என அரசும் அந்த நிறுவனங்களும் தவித்துக் கொண்டிருக்கும் வேலையில் நாம் பெட்ரோல் பங்கில் சண்டை பிடித்துக் கொண்டிருந்தோம்.

யூரோ கால்பந்து அரையிறுதியில் இத்தாலியும், ஜெர்மனியும் மோதிக் கொண்டிருக்கும் நள்ளிரவில் பெட்ரோலின் விலை இரண்டு ரூபாய்க்கும் மேல் குறைக்கப்பட்டிருக்கிறது. இந்த விலை குறைப்புக்கு காரணம் நமது ரூபாயின் எழுச்சிதான். ஒரேடியாக வீழ்ந்து வந்த இந்திய ரூபாய், தற்போது ஸ்டெடியாக இருக்கிறது. யூரோவின் மதிப்பு மேலும் சரியாதிருக்க மன்மோகன் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் சிலர், சில ஐரோப்பிய நாடுகளுக்கு கடன் கொடுத்ததை ஞாபகத்தில் கொள்ளுங்கள். இது போன்ற நடவடிக்கைகளால் யூரோ ஸ்டெடி ஆனதும், ரூபாயும் டாலருக்கு எதிரான தள்ளாட்டத்தைக் குறைத்துக் கொண்டது. எனவே பெட்ரோலின் விலையும் நம்மைப் பொறுத்தவரை குறைந்துவிட்டது.

இம்முறை டாலரின் மதிப்பு உயர்ந்தும் ஐடி நிறுவனங்களின் மதிப்பு உயரவில்லை.
ஓ.. பெட்ரோல் கிடைக்காததற்கு இதுதான் காரணமா என்று ஆச்சரியப்படுகிற அதே நேரத்தில் இந்த செய்தி எங்களுக்கு எதற்கு என்று உங்களில் சிலர் கேட்கக் கூடும். பெட்ரோலுக்கும் ஐடிக்கும் தொடர்பு இருக்கிறது. இது போல டாலர் விலை உயர்ந்து ரூபாயின் மதிப்பு சரியூம்போதெல்லாம் பங்கு மார்கெட்டில் ஐடி நிறுவனங்களின் பங்குகள் எல்லாம் உயரும். ஐடி நிறுவனங்களின் பங்கை வாங்க ஒரு போட்டியே நடக்கும். காரணம் பெரும்பாலான இந்திய ஐடி நிறுவனங்கள் அமெரிக்க டாலரில்தான் பெரும்பாலும் சம்பாதிக்கின்றன. எனவே டாலரின் மதிப்பு உயரும்போது ஐடி நிறுவனங்களின் சொத்து மதிப்பும் உயருகின்றன. எனவே ஐடி நிறுவனங்களின் பங்கை வாங்கி விற்க பெரும்போட்டி நடக்கும்.

ஆனால் இந்த முறை அந்த மாதிரி பரபரப்பு எதுவும் இருக்கவில்லை. ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு 8 ரூபாய் வரை வீழந்தாலும் ஐடி நிறுவனங்களுக்கான மவுசு கூடவில்லை. காரணம் . . . . ரொம்ப சிம்பிள். நம் நாட்டின் ஐடி நிறுவனங்கள் தற்போது அமெரிக்காவை மட்டும் நம்பி இல்லை. அமெரிக்கா தவிர நிறைய உள்நாட்டு புராஜக்டுகளை நம்பி இயங்குகின்றன. அதனால் டாலரின் ஏற்றம் ஐடி நிறுவனப் பங்குகளை வாங்கி விற்கும் பங்கு தரகர்களுக்கு அதிக உற்சாகம் தரவில்லை.


No comments: