Wednesday, March 21, 2012

மின் சேகரிப்பு திட்டம் - தமிழகஅரசுக்கு ஒரு யோசனை

ஜெயலலிதா செய்ததிலேயே உருப்படியானது மழை நீர் சேகரிப்பு திட்டம்தான்.  இன்று வரையில் இந்த திட்டம் மக்களும், அரசும் சேர்ந்து வெற்றிகரமாக மழை நீரை சேகரிக்க, உதவுகிறது. இதே பாணியில் மின்சாரத்தையும் சேகரிக்கலாம்.

ஆறரை கோடி மக்கள் வசிக்கும் தமிழ்நாட்டில், குறைந்தபட்சம் ஒரு கோடி குண்டு பல்புகள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக சி.எஃப்.எல் குழல் பல்புகளை பயன்படுத்தினால், உடனடியாக 500 மெகாவாட் மின்சாரம் மிச்சமாகும்.


இதை நான் சொல்லவில்லை. பதவிக்கு வந்தவுடன், ஜெயலலிதா அரசின் சார்பில் சட்டமன்றத்தில் வைக்கப்பட்ட கொள்கைக்குறிப்பிலேயே இது இருக்கிறது.  இதை நிறைவேற்றினாலே, 500 மெகாவாட் மிச்சமாகிவிடும். இந்த தகவலும் அதே கொள்கைக் குறிப்பிலேயே இருக்கிறது. மிச்சப்படுத்துவதே உற்பத்திக்கு சமம், எனவே அணு உலைக்குப் பதிலாக இதை பரிசீலிக்கலாம்.


ஆனால் ஜெயலலிதாவோ போலீஸ் மிரட்டல்களை வைத்துக் கொண்டே ஆட்சியை நடத்திவிடலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். இருக்கட்டும் அது அவர் ஸ்டைல். சங்கரன் கோவிலில் கால்கடுக்க நின்று அலுத்துவிட்டது போலிருக்கிறது. தற்போது கூடங்குளம் போராட்டக்காரர்களை மிரட்ட தமிழக போலீசார் கூலிங்கிளாஸை மாட்டிக் கொண்டு, சந்துக்கு சந்து நின்று கொண்டிருக்கிறார்கள். 


இப்படி மக்கள் மத்தியில் பீதியைக் கிளப்பி அணு உலையை உடனே இயக்கினாலும் மின்சார உற்பத்தியாக குறைந்தபட்சம் 6 மாதங்கள் ஆகும் என்கிறார்கள். கூடங்குளத்தின் உச்சபட்ச  உற்பத்தி 1000 மெகாவாட். ஆனால் தற்போது 400 மெகாவாட்தான் உற்பத்தி செய்யுமாம். அதில் கிட்டத்தட்ட 50 மெகாவாட்டை கூடங்குளமே செலவிழித்துவிடுமாம். மீதி இருப்பது 350 மெகாவாட்தான். அதை கூடங்குளத்தில் இருந்து மாநிலத்தின் மற்றபகுதிகளுக்கு எடுத்து வரும்போது, வழியிலேயே 70 மெகாவாட் லீக் ஆகிவிடுமாம். மீதி உள்ள 280 மெகாவாட்டில் பாதியை மத்திய அரசு எடுத்துக் கொள்ளும். எனவே இத்தனை அமர்க்களத்திற்கும் பிறகு தமிழகத்துக்கு கிடைக்கப்போவது வெறும் 140 மெகாவாட்தான்.

எனவே அணு உலைக்கு பதிலாக, ரேஷன் கடைகளில் மக்களுக்கு இலவச சி.எஃப்.எல் பல்புகளை வழங்கலாம். வீட்டுக்கு வீடு குண்டு பல்புகளை தூக்கி எறிந்துவிட்டு, சி.எஃப்.எல் பல்புகளை பயன்படுத்தச் சொல்லலாம். இதனால் நமக்கு 500 மெகாவாட் மிச்சமாகிவிடும்.



இந்த தகவல்கள் அனைத்தையும் தனது ஓ பக்கங்களில் ஞாநி அழகாக எழுதியுள்ளார். ஜெயலலிதாவுக்கு அவர் எழுப்பியுள்ள கேள்விகள் அர்த்தமுள்ளவை. ஜெயலலிதா பதில் சொல்லப்போவதில்லை என்றாலும், நீங்கள் அக் கேள்விகளை தெரிந்து கொள்வதில் தவறில்லை. இங்கே சொடுக்குங்கள்!



No comments: