Monday, March 19, 2012

சங்கரன் கோவிலும் அடுத்த பிரதமரும்

சங்கரன் கோவில்!
மேலோட்டமாகப் பார்த்தால், ஒரு சாதாரண இடைத்தேர்தல். ஆனால் இது இந்திய அளவில் அரசியல் மாற்றங்களை உண்டு பண்ணக் கூடிய சில அம்சங்களை உள்ளடக்கியது.

முதலில் தேர்தல் நடைபெறும் சூழலைப் பார்ப்போம். விலைவாசி, மின்சாரப் பற்றாக்குறை என மக்களின் கடும் அதிருப்தியுடன் அதிமுக தேர்தலை சந்திக்கிறது. எனவே ஏற்கனவே இத் தொகுதியை தன் வசம் வைத்திருக்கும் அதிமுக, இந்த தேர்தலை அது வென்றே ஆக வேண்டும். இல்லையென்றால் இந்த ரிசல்ட் பாராளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும். இதை வென்றால் மட்டுமே கூட்டணிக் கட்சிகள் அதிமுகவின் சொல்பேச்சை கேட்கும்.

பிரதான எதிர்கட்சிகள் எல்லாமே இம்முறை தனித்தனியாக தேர்தலை சந்திக்கின்றன. ஆளும்கட்சியை அதிகார பலம், பண பலத்தை மீறி இவர்களால் வெல்ல முடியாது. சிதறிக்கிடப்பதால் அதிமுகவுக்குதான் லாபம். ஆனால் தங்கள் சுய பலம் என்ன என்பதை ஓரளவுக்கு அறியவும், எதிர்காலத்தில் தங்களுக்குள்ளோ அதிமுகவுடனோ கூட்டணி அமைத்தால் கடுமையாக பேரம் பேசவும் இவர்களுக்கு உதவும்.


பாராளுமன்றத்துக்குள் குறைந்தபட்சம் 30 எம்பிக்களுடன் நுழைவதற்கான முன்னோட்டமாக அதிமுக இதைப் பார்க்கிறது. அகில இந்திய அளவில் தேர்தல் நடக்கும்போது, காங்கிரஸ் தோற்று பிஜேபி ஆட்சியை பிடிக்கக்கூடிய நிலை வந்தால், யார் பிரதமர் என்ற மோதல் அங்கே அதிகரிக்கும். அகில இந்திய அளவில் நரேந்திர மோடிதான் இப்போதைக்கு பிரபலம். ஆனால் அத்வானி கோஷ்டி மோடியை குஜராத்துக்குள்ளேயே முடக்க முயற்சிக்கும். ஏனென்றால் அத்வானிக்கு இதுதான் கடைசி வாய்ப்பு. ஆனால் அவருக்கு கட்சியில் அவ்வளவாக ஆதரவு இல்லை.

இந்த சமயத்தில் 30 எம்பிக்களுடன் ஜெயலலிதா தனது ஆதரவைத் தந்து, தன்னை பிரதமாராக முன்னிறுத்தினால் பிஜேபி ஆதரிக்குமாம். இது பத்திரிகையாளர் சோவின் கணக்கு. எனவே தேவகவுடா பிரதமர் ஆனது போல ஜெயலலிதாவும் பிரதமராவார் என்று சோ தலைமையில் ஒரு அரசியல் சாணக்ய குழு ஒன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறது.  இந்தப் பிரச்சாரம் ஜெயிக்க வேண்டுமென்றால் சங்கரன் கோவிலில் அதிமுக ஜெயித்தே ஆக வேண்டும்.

இனி திமுகவுக்கு வருவோம். இலங்கையில் மனித உரிமைப் பிரச்சனை நாளுக்கு நாள் சூடாகிக் கொண்டிருக்கிறது. ஐ.நா சபையில், அமெரிக்க தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் உட்பட சொல்ல ஆரம்பித்துவிட்டன. ஆனால் இந்திய அரசு இன்னும் இது தொடர்பாக முடிவெடுக்கவில்லை. ஒரு வேளை அதிமுக தோற்றால், திமுக உடனே தனது வாபஸ் ஆயுதத்தை கையிலெடுக்கும். வழக்கம்போல பூச்சாண்டி காட்டுவதாக அல்லாமல் உண்மையிலேயே வாபஸ் வாங்கும். காங்கிரஸ் ஆட்சி கவிழும்.

உத்திரப் பிரதேசத்தில் அகிலேஷ் மூன்றாவது அணி என்ற ஒரு திரியை கொளுத்திப் போட்டிருக்கிறார். திமுக அதற்கு எண்ணெய் ஊற்றி அதே தேவகவுடா ஃபார்முலாவில், முலயாம்சிங்கை பிரதமராக முன்னிறுத்தி, மாநில அளவில் வலிமையான கட்சிகளை இழுத்து,  3வது அணிக்கு முயற்சிக்கும்.

(பதிவை எழுதியபின் இரண்டாவது அப்டேட்...  திமுகவின் பயமுறுத்தல் இந்த முறை வேலை செய்துவிட்டது. உடனடி தேர்தல், 3வது அணி, இலங்கை விவகாரத்தில் தமிழக கட்சிகளின் அழுத்தம், இவற்றின் காரணமாக இலங்கைக்கு எதிராக வாக்களிக்கப்போவதாக பிரதமர் அறிவித்திருக்கிறார்.)

இதனால் இலங்கைப் பிரச்சனை முடிவுக்கு வந்துவிடுமா என்று கேட்காதீர்கள். அதைப்பற்றி யாருக்கும் உண்மையான அக்கறை இல்லை. அதே போலத்தான் கூடங்குளம் பிரச்சனையும். அதிமுக ஓட்டு குறைந்துவிடக் கூடாது என்பதற்காகவே  வழவழா கொழ கொழவாக தேவையா இல்லையா எனச் சொல்லாமல் இது வரை அரசு மழுப்பிக் கொண்டிருக்கிறது.

(இது முதல் அப்டேட்... இந்தப் பதிவை எழுதியபின் வந்த செய்தி.தமிழக அமைச்சரவை கூடங்குளத்தை உடனே செயல்படுத்த வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறது. வாக்குப் பதிவு முடிந்தபின் இந்த அறிவிப்பு வந்திருப்பதை கவனிக்கவும்)

ஜெயித்தால் போராட்டக்காரர்களை இந்த அரசு சிறையில் தள்ளும். ஆனால் இன்றே பாராளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்படுமானால், போராட்டக்காரர்களுடன் வெட்கமே இன்றி மீண்டும் சாதாரணமாகப் பேசும்.

எனவே சங்கரன் கோவில் சாதாரண கோவிலல்ல... அடுத்த பிரதமர் யார் என்ற கேள்விகளை துவக்கி வைத்திருக்கும் அரசியல் கோவில்.

1 comment: