Friday, March 9, 2012

ஒய் திஸ் உலை வெறி - பட்டாசாய் ஒரு பாட்டு!

கூடங்குளம் போல ஒரு அணு உலையை நிறுவினால் 50 வருடங்களுக்கு மின்சாரம் தயாரிக்க முடியும். ஆனால் அதனால் ஏற்படும் கழிவுகளை 1,00,000 வருடங்களுக்கு பத்திரமாக எங்காவது பதுக்கி வைக்க வேண்டும். அதற்காக செலவு செய்து கொண்டே இருக்க வேண்டும். இல்லையென்றால் மனிதனின் வாழ்வாதாரம் நிச்சயமாக பாதிக்கப்படும் என்கிறார்கள் அணுஉலைக்கு எதிராகப் போராடும் விஞ்ஞானிகள்.

உலக சமாதானத்துக்காக நோபல் பரிசு பெற்ற ஜெர்மானிய விஞ்ஞானி (Physicist) திரு. ஹேன்ஸ் பீட்டர் தற்போது இந்தியாவில் சுற்றுப் பயணத்தில் இருக்கிறார். அவர் சொல்வதை கவனியுங்கள். எந்த அணுஉலையும் 100 சதவிகிதம் பாதுகாப்பானது அல்ல. அதற்கு உத்தரவாதம் தரும் எந்த வாதத்தையும் ஏற்றுக் கொள்ள முடியாது என்கிறார்.

அணு உலையால் ஏற்படும் ஆபத்துகளை விட, அதன் கழிவுகளால் ஏற்படும் ஆபத்து அதிகம் என்கிறார். சுற்றுப்புறச் சூழல் பாதிப்பது ஒரு புறம் இருக்கட்டும். மறுபுறம் தீவிரவாதிகள் கைகளில் சிக்கினால், அணுக் கழிவுகளைக் கொண்டு அணு குண்டு தயாரிக்கும் அபாயம் உள்ளது என்கிறார்.

அணு உலை பாதுகாப்பானது என்று வைத்துக் கொண்டாலும், இன்னும் சில 100 வருடங்களில் அது இயங்கத் தேவையான யுரேனியமும் தீர்ந்துவிடும். அப்போது இந்த அணுஉலைகள் அனைத்தும் இயங்காமல் நின்றுவிடும். அப்படி இயங்காமல் போகக்கூடிய அணுஉலைகளை மக்களின் வாழ்வாதாரங்களை பாதிக்காமல், எப்படி இடித்துத் தள்ளுவது? அதற்கு திட்டங்கள் என்ன? அதனால் ஏற்படக் கூடிய பாதிப்பு என்ன? என்று தொடர் கேள்விகள் எழுப்புகிறார். எனவே மாஃபியா கொள்ளைக்காரர்களைப் போல பூமியிடமிருந்து இயற்கை கனிமங்களை திருடி, மக்களுக்கு தொல்லை ஏற்படுத்துவதை உடனே கைவிடுவோம். சூரியக் கதிர்களை நோக்கி நம் கவனத்தை செலுத்துவோம் என்கிறார்.

சூரியக் கதிர்களை உள்வாங்கி, சேமித்து அதனால் மின் சக்தி உட்பட வித விதமான சக்திகளை உருவாக்கக் கூடிய தொழில்நுட்பங்கள் தொடர்பான ஆராய்ச்சிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. பக்கவிளைவுகள் இல்லாத இவற்றில் நம் கவனத்தை செலுத்துவோம் என்கிறார்.

கூடங்குளம் எதிர்ப்பாளர்களை தேசப்பற்று இல்லாத தீவிரவாதிகள் என்று அரசுகள் முத்திரை குத்த முயற்சித்து வருகின்றன. ஆனால் மக்களைப் பற்றிக் கவலைப்படாத அரசுகளின் இந்த சூழ்ச்சிக்கு அஞ்சாத இளைஞர்கள் சிலர் ஒரு அருமையான மியூசிக் வீடியோவை வெளியிட்டிருக்கிறார்கள்.

அணு உலைக்கு எதிரான இந்த அருமையான முயற்சியில் இறங்கியுள்ள இளைஞர்களை நான் மனமார வரவேற்கிறேன். இவர்களை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு, கல்லூரி மாணவர்களும், இளைஞர்களும் சிந்திக்க வைக்கக் கூடிய படைப்புகளை தர வேண்டும்.

எரிதழல் படைப்பகம் மற்றும் அதன் குழவினர் அனைவருக்கும் என் அன்பும், ஆதரவும்.

1 comment:

RAVI said...

வருங்காலம் பற்றிய சிந்தனையற்றுப்போன முட்டாள்கள் மட்டுமே அணுவைக் கட்டியனைப்பார்கள்.