Saturday, February 25, 2012

கோர்டில் சசிகலாவின் ஒப்புதல்! (சட்டப்படி) வாக்கு மூலமே அல்ல!

செக்ஷன் 313 கேள்விப்பட்டிருக்கீங்களா? எனக்கு நான் படிச்ச டென்த் பி செக்ஷன்தான் தெரியும். இன்னைக்கு காலையிலதான் செக்ஷன் 313ஐ பத்தி கேள்விப்பட்டேன். எனக்கு லெட்டர்ஸ் டு த எடிட்டர் பிடிக்கும். ஒரே செய்தியைப் பற்றி (படித்த எழுதக்கூடிய) மக்களின் வெவ்வேறு கோணங்கள் கிடைக்கும் என்பதால். சில நேரம் அதில் வல்லுனர்களும் எழுதுவார்கள். எல்லாவற்றையும் சேர்த்து படித்தால் சுவாரசியமாக இருக்கும். இன்று காலையில் காபியுடன், ஒரு சுவாரசியமும் சேர்ந்தே கிடைத்தது.

இன்று காலை ஹிந்து நாளிதழில் டாக்டர் ஏ.இ.செல்லையா என்பவர்தான் இந்த (டெக்னிகல்) குண்டை போட்டிருந்தார். ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் எல்லா தப்பையும் நான்தான் செய்தேன் என்று சசிகலா ஒப்புக் கொண்டுவிட்டதாக நாம் எல்லோரும் அப்பாவியாக நம்பிக் கொண்டிருக்கிறோம். சசிகலா எல்லாக் குற்றங்களையும் தானே செய்ததாக வாக்குமூலம் தந்துவிட்டதாக நாம் எல்லோருமே நம்ப வைக்கப்பட்டிருக்கிறோம். முந்திரிக்கொட்டை செய்திச் சேனல்களும், பரபரப்பை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட செய்தித் தாள்களும், புலனாய்வு செய்வதாக சொல்லிக் கொள்ளும் பத்திரிகைகளும், அப்படித்தான் அந்த சசிகலா அழுகைக் காட்சியை வர்ணித்திருந்தன. ஆனால் . . .

நான் சொல்வதெல்லாம், உண்மையைத் தவிர வேறெதுவும் இல்லை என்று சாட்சிகள், குற்றவாளிகள் எல்லோரும் கோர்டில் சொல்வதை (சினிமா வாயிலாக) நாம் அறிவோம். கிரிமினல் நடவடிக்கைகளில் செக்ஷன் 313 ஒரு ஸ்பெஷல். இதன்படி
  • குற்றம் சாட்டப்பட்டவரிடம் இது போல சத்யப் பிரமாணம் வாங்கிக் கொள்ளப்படாது. 
  • சத்யப்பிரமாணம் வாங்கிக் கொள்ளாததால் குற்றம் சாட்டப்படுபவர் பொய் சொல்லவும் அனுமதி உண்டு. அவர் சொன்னது பொய் என பின்னர் தெரியவந்தாலும், அதற்கு தண்டனை கிடையாது. 
  • இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல மாட்டேன் என்று மறுக்கிற உரிமையும் குற்றம் சாட்டப்பட்டவருக்கு உண்டு. 


பின்ன எதுக்குதான் செக்ஷன் 313?
தனக்கு எதிராக என்னென்ன குற்றச்சாட்டுகள் உள்ளன? அது தொடர்பான கேள்விகள் என்ன என்பதை குற்றவாளிகள் தெரிந்து கொள்ள சட்டம் தருகிற ஒரு வாய்ப்பாம். தன்னை தற்காத்துக்கொள்ள, செக்ஷன் 313ன் கீழ் கேட்கப்படும் கேள்விகளை குற்றம்சாட்டப்பட்டவர் பயன்படுத்திக் கொள்ளலாம். எனவே இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்லலாம் (அ) பொய் சொல்லலாம் (அ) பதில் தெரியாது என பாஸில் விடலாம். குற்றம் சாட்டப்பட்டவருக்கு சட்டம் தெரிந்தே இந்த சலுகையை தருகிறது.

அதனால் செக்ஷன் 313ன் கீழ் ஒப்புக் கொள்ளப்படும் குற்றங்கள் வாக்கு மூலங்கள் அல்ல. எந்த வேல்யுவும் இல்லாத ஒரு கேள்வி பதில் வேடிக்கை அவ்வளவுதான். எனவே ஜெ. எந்த குற்றமும் செய்யவில்லை. எல்லாவற்றையும் நான்தான் செய்தேன் என்று சசிகலா கோர்டில் அழுதுகொண்டே சொன்னது வாக்குமூலமே அல்ல. கோர்ட் அதனை வாக்குமூலமாக பதிவு செய்து கொள்ளவில்லை.

செக்ஷன் 164 என ஒன்று இருக்கிறதாம். அதன் கீழ் சொல்லப்படும் பதில்கள்தான் வாக்குமூலமாக பதிவு செய்யப்படும். ஜெவோ சசிகலாவோ இந்த செக்ஷனின் கீழ் கேள்விகளை இது வரையில் எதிர்கொள்ளவில்லை என்றே நினைக்கிறேன். ஒருவேளை அப்படி எதிர்கொண்டால் அவர்கள் எப்படி பல்டி அடிப்பார்கள் என்பதை, இதை வாசிக்கிற உங்கள் யூகத்துக்கே விட்டுவிடுகிறேன்.

ஜெவும் சசியும் பிரிந்துவிட்டார்கள் என்ற செய்தியை மீடியாக்கள் நம் தலையில் திணிக்கின்றன. கிடையவே கிடையாது! வழக்குகளில் இருந்து தப்பிக்க, வழக்கை திசை திருப்ப வேண்டியதிருக்கிறது. அதற்கான தந்திரக் காட்சிகள்தான் இவை என்று யூகங்களையும் வதந்திகளையும் சிலர் கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

செக்ஷன் 313 இந்த வதந்திகளுக்கும், யூகங்களுக்கும் வலு சேர்க்கிறது. . . நம்புவதும் நம்பாததும் அவரவர் இஷ்டம். நான் மீண்டும் லெட்டர்ஸ் டு த எடிட்டர் படிக்கப் போகிறேன். நீங்க. . .?

No comments: