Saturday, February 25, 2012

கூடங்குளம் எதிர்ப்பு - அமெரிக்க சதியா?

எந்த சலசலப்புக்குமே வாய் திறக்காத பிரதமர் மன்மோகன் சிங்  நேற்று அதிசயமாகப் பேசினார். கூடங்குளம் எதிர்ப்பாளர்களுக்கு அரசு சாரா அமெரிக்க சேவை நிறுவனங்கள் நிதி உதவி அளிக்கின்றன. கூடங்குளம் எதிர்ப்பு பின்னணியில் அமெரிக்க சதி இருக்கிறது என்று பகிரங்கமாகவே குற்றம் சாட்டினார்.

கடந்த சில மாதங்களாகவே இதே குற்றச்சாட்டை மத்திய அமைச்சர் நாராயணசாமி தொடர்ந்து எழுப்பிக் கொண்டிருக்கிறார். தற்போது இ.வி.கே.எஸ் இளங்கோவனும் இதை மேடைக்கு மேடை சொல்லிக் கொண்டிருக்கிறார்.

தினமலர் பத்திரிகை விடாமல் இதே கருத்தை பல மாதங்களாக எழுதிக் கொண்டே இருக்கிறது.

ஆனால் அப்போதெல்லாம் அவ்வளவு சீரியஸாக எடுத்துக்கொள்ளப்படாத இந்தக் குற்றச்சாட்டு தற்போது வலுவடைந்திருக்கிறது. ஏனென்றால் மௌனகுரு என்று வர்ணிக்கப்படும் பிரமரே வாய்திறந்து இந்தக் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

ரஷ்யாவின் கோபம்
பிரதமரே இப்படிச் சொன்னதும், இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் அலெக்ஸாண்டர் எம்.கடாகின் இன்று மீடியாவுக்கு வந்துவிட்டார். கொஞ்சம் கோபமாகவே தனது குற்றச்சாட்டுகளையும், சந்தேகங்களையும் பகிரங்கமாக பேட்டியில் தெரிவித்தார்.

 கூடன்குளம் அணு மின் நிலையம் உலகிலேயே100 சத வீத பாதுகாப்பானது. புகுஷிமா விபத்து நடந்தபோது போராட்டக்காரர்கள் சும்மாதான் இருந்தார்கள். ஆனால் 6 மாதத்திற்கு பின்னர் அவர்கள் கூடங்குளம் வேண்டாம் என்று பிரச்னை எழுப்புவது போராட்டக்காரர்கள் மீதான சந்தேகத்தை தெளிவாக்கியிருக்கிறது. அவர்களுடைய போராட்டத்துக்கான நிதி அமெரிக்க தொண்டு நிறுவனங்கள் மூலமாக இந்தியாவிற்கு வருகிறது. அவர்களுக்கு ரஷ்யாவின் துணையுடன் இங்கு அணு உலை அமைவதில் விருப்பமில்லை. இந்திய பிரதமரே பகிரங்கமாக குற்றம்சாட்டியபின், எங்களுடைய சந்தேகம் உண்மைதான் என்று ஊர்ஜிதமாகிறது. எனவே அணுமின் நிலையம் துவக்குவதற்கு ரஷ்யா முழு ஆதரவு அளிக்கும் என்றார்.


போராட்டக்குழு தலைவர் உதயகுமாரின் சவால் - நாங்கள் யாரிடமும் பணம் பெறவில்லை
ஆனால் போராட்டக் குழு தலைவர் உதயகுமார் அசரவில்லை. ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் பிரதமருக்கு நேரடியாக சவால் விடுத்தார். போராட்டக் குழுவுக்கு அமெரிக்க நிதி கிடைப்பதாக பிரதமர் சொல்வது பொய். குற்றச்சாட்டை நிரூபித்தால் நாங்கள் போராட்டத்தை கை விடுகிறோம். நிரூபிக்க முடியாவிட்டால் பிரதமர் பதவி விலகத் தயாரா என்று பகிரங்கமாக சவால் விட்டிருக்கிறார். அது மட்டுமல்லாமல் பிரதமர், அமைச்சர் நாராயணசாமி, ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ஆகிய மூவர் மீதும், தவறான குற்றச்சாட்டுகளை சொல்வதாக வழக்கு தொடரும் முயற்சியிலும் இறங்கிவிட்டார்.


உரிமம் ரத்து செய்யப்பட்ட அமெரிக்க NGOக்களின் பெயர் என்ன? மத்திய அரசு தெரிவிக்க வேண்டும்.
இந்நிலையில் பிரதமர் அலுவலகத்தில் இருந்து 3 அமெரிக்க தொண்டு நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.


பிரதமர் அலுவலகமும், போராட்டக் குழுவினரும் நேரடியாக மோதிக் கொள்ளும் இந்த சூழலில், உரிமம் ரத்து செய்யப்பட்ட 3 அமெரிக்க தொண்டு நிறுவனங்களின் பெயர்களையும் மத்திய அரசு வெளியிட வேண்டும். ஏன் உரிமம் ரத்து செய்யப்பட்டது என்ற காரணத்தையும் ஆதாரங்களுடன் வெளியிட வேண்டும். அப்போதுதான் பிரதமர் கூறியி குற்றச்சாட்டுகளுக்கு நம்பகத்தன்மை கிடைக்கும்.


ரஷ்யா கொஞ்சம் அளவுக்கு மீறி பேசுகிறதா?
வழக்கம்போல இந்த விஷயத்தில் பிரதான எதிர்கட்சிகளான திமுகவும், அதிமுகவும் வாயைத் திறக்காமல் இருக்கின்றன. அவர்களுக்கு ஓட்டு பயம். ரஷ்யா கொஞ்சம் அளவுக்கு அதிகமாகவே இன்று பேசியதாகத் தோன்றியது. கூடங்குளம் விஷயத்தை பொறுத்தவரை அவர்கள் வியாபாரிகள்தான். அவர்களுடைய தொழில்நுட்பத்தை நமது மத்திய அரசு பணம் கொடுத்து பயன்படுத்திக் கொள்கிறது. எனவே ஒரு கன்ஸல்டன்ட் என்ற அளவுடன் ரஷ்யா தனது மூக்கை நிறுத்திக் கொள்வது நல்லது. தேவையில்லாமல் தனது அமெரிக்க வெறுப்புக்கு, இந்தியாவில் குஸ்தி மேடை அமைக்கும் தோரணையை கைவிட வேண்டும்.


கூடங்குளம் ஆதரவு/எதிர்ப்பு பின்னணியில் தலை தூக்கும் இதர பிரச்சனைகள்
அண்ணா ஹசாரேவைப் பார்த்து அவருடைய பாணியிலேயே, போராட்டக் குழுவினர் வலுவாக அணி சேர்ந்ததும் அவர்களை கலைக்க ஜெயலலிதா அரசு பேச்சு வார்த்தை நடத்தியது. ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை. சில நாட்களிலேயே கிறிஸ்தவர்கள் ஒன்று சேர்கிறார்கள். அவர்கள் கூடங்குளத்தை தடுக்கிறார்கள் என்று தினமலர் போன்ற பத்திரிகைகளின் ஆதரவுடன் பிரச்சாரம் செய்யப்பட்டது. இன்னமும் மெலிதாக இந்தப் பிரச்சனை இருக்கிறது.


அந்தப் பிரச்சாரம் அவ்வளவாக எடுபடவில்லை என்றதும், கிறிஸ்தவ அமைப்புகளுக்குப் பதிலாக அமெரிக்க நிதி உதவி பெறும் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் இந்த அணு உலைச் சண்டையில் இழுக்கப்பட்டிருக்கின்றன.


பிரதமரும் இந்த குற்றச்சாட்டில் இணைந்து கொண்டார் என்பதுதான் ஹைலைட். உபரி லைட்டாக ரஷ்யாவின் அமெரிக்க எதிர்ப்பு பிரசாரம் இந்தியாவில் தலைகாட்ட ஆரம்பித்திருக்கிறது. ஆனால் அமெரிக்க வெளியுறவுத் துறை எங்களுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்று கூறியிருக்கிறது.


மக்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது
எது உண்மை எது பொய் என்பது காலப்போக்கில் தெரிந்துவிடும். ஆனால் சில விஷயங்களில் இந்திய மக்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். ஹிந்து, கிறித்துவன் என்ற பிரிவினை வாதங்களுக்கு பலியாகக் கூடாது. அடுத்து ரஷ்யா உட்பட எந்த நாட்டையும், நமது இந்தியாவிற்குள்ளேயே இருந்து மற்ற நாடுகளுக்கு எதிரான வெறுப்பை உமிழ இடம் தரக் கூடாது.


அணு உலை விவகாரத்தில் அமெரிக்கா, ரஷ்யா இருவருமே வியாபாரிகள். இரு வியாபாரிகளுக்கும் ஒருவரையொருவர் பிடிக்காது. ஆனால் அவர்களுடைய சண்டைக்கு இந்தியா மைதானமாகிவிடக் கூடாது.

2 comments:

கூடல் பாலா said...

ஒரு சிறிய கிராமப் பிரச்சனையைக்கூட சமாளிக்க வழி தெரியாமல் பொய் சொல்லும் நிலைமைக்கு பிரதமர் தள்ளப்பட்டுள்ள பரிதாபம் ...இவரை நம்பி இந்தியாவா ...ஐயகோ !

உணவு உலகம் said...

நடுநிலையான வாதத்தை வைத்துள்ளீர்கள். நல்ல தீர்வு எட்டப்படவேண்டும்.அதுவே நம் அனைவரின் எதிர்பார்ப்பும். நன்றி.