Tuesday, February 15, 2011

அந்த இளைஞர்களுக்கு சல்யூட்!






கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு முன். நான் அப்போதுதான் கல்லூரி முடித்து கம்ப்யூட்டர் பயிற்சி நிறுவனம் துவங்கியிருந்த நேரம். உதவும் கரங்கள் வித்யாகரை சந்தித்தேன்.

”நீங்கள் வாரா வாரம் இங்கிருப்போருக்கு கம்ப்யூட்டர் பயிற்சி தர முன் வந்திருப்பது நல்ல விஷயம். ஆனால், உங்களால் இதை தொடர்ந்து செய்ய முடியும் என்ற உத்திரவாதம் தந்தால் மட்டுமே, நான் உங்கள் உதவியை ஏற்பேன்”, என்றார். அவர் குரலில் இருந்த மெல்லிய கடுமை என்னை கோபம் கொள்ள வைத்தது. உதவி செய்ய வந்திருக்கிற ஒருவனை, உன்னால் தொடர்ந்து செய்ய முடியுமா? என்று கேட்பது என்ன நியாயம் என்று மனதிற்குள் புகைந்த கேள்விகளுடன் விடைபெற்று விட்டேன்.

கடந்த ஞாயிறன்று கிட்டத்தட்ட இதே கேள்வியை இயக்குனர் சேரன் கேட்டார் அல்லது தன்னைத் தானே கேட்டுக் கொண்டார். யுத்தம் செய் திரைபடத்திற்க்காக, சென்னை ஐநாக்ஸ் தியேட்டரில் ஒரு சிறப்புக் காட்சியை ஏற்பாடு செய்து, அதில் கிடைத்த தொகையை கொரட்டூரில் உள்ள ஒரு குழந்தைகள் விடுதிக்கு அளித்துவிட்டு காரில் சன்னமான வேகத்துடன் திரும்பிக் கொண்டிருந்தோம். உடன் சகோதரன் அன்பு மற்றும் தங்கை கயல்.

”பணம் கொடுத்தோம், அவர்களும் வாங்கிக் கொண்டார்கள். இது ஒன்று அல்லது இரண்டு வாரத்திற்கு அக் குழந்தைகள் சாப்பிட உதவும். அதற்குப் பின் என்ன? இந்த தொகையை கொடுத்ததுடன் நம் பங்களிப்பு முடிந்துவிட்டதா? ஒரே ஒரு நாள் பணம் கொடுப்பதின் மூலம், அக் குழந்தைகளின் எதிர்காலத்தை நம்மால் வளமாக்க முடியுமா?” என்றார்.

கிட்டத்தட்ட வித்யாகர் கேட்ட கேள்வி. ”ஒரே ஒரு நாள் வந்து கம்ப்யூட்டர் பயிற்சி தந்தால் போதுமா?” நியாயமான கேள்வி. ஒரு கல்லூரி மாணவனாக கோபத்துடன் எதிர்கொண்டு, பின் அனுபவத்தில் புரிந்து கொண்ட கேள்வி. உதவி செய்தல் என்பது வெறும் நல்ல குணமாக மட்டும் இருத்தல் போதாது. தொடர்ந்து செய்யக் கூடிய ஒரு குறைந்தபட்ச திட்டமாவது இருக்க வேண்டும். அப்போதுதான் அந்த உதவி முழுமை பெறும்.

காட்சி முடிந்ததும் வீட்டுக்குத் திரும்புகிற சினிமா இரசிகனின் மனநிலை இது போன்ற சமூக சேவைகளுக்கு ஒத்து வராது. எவ்வளவுதான் நல்லவராக இருந்தாலும், தொடர்ந்து அர்ப்பணிக்கின்ற ஒரு குறுகிய கால திட்டமாவது இருக்க வேண்டும்.

இரத்த தானம், பள்ளிகளில் குப்பை தொட்டி வழங்குவது, மெடிக்கல் கேம்ப் என்று சின்னச் சின்னதாக நற்பணிகளில் ஈடுபட்டிருந்தாலும், எதையும் தொடர்ச்சியாகச் செய்யவில்லை என்பது என்னைப் பொறுத்தவரை உண்மை. ஒரு செடிக்கு ஒரே ஒரு நாள் நீரூற்றிவிட்டு மறுநாள் அது கருகினால் அதற்கு நான் பொறுப்பில்லை என்று விலகிக் கொள்கிற மனப்பான்மை, ஒரே ஒரு நாள் உதவி செய்துவிட்டு விலகிக் கொள்வதிலும் உள்ளது.

சேரன் மனதிலும் இதே எண்ணம் நிச்சயம் தோன்றியிருக்க வேண்டும். நாங்கள் தொகையை வழங்கச் சென்ற நேரத்தில் அங்கு ஒரு பெண் உட்பட சில இளம் கம்ப்யூட்டர் வல்லுனர்களை பார்த்தோம். ஒவ்வொரும் TCS, Ford போன்ற நிறுவனங்களில் கைநிறைய சம்பாதிப்பவர்கள். கல்லூரியில் படித்த காலத்தில் இருந்து, தற்போது பணிக்கு வந்துவிட்ட நிலையிலும் தொடர்ச்சியாக சமூக நலப் பணியில் ஈடுபட்டிருப்பதாகச் சொன்னார்கள். குறிபபாக நாங்கள் சென்றிருந்து குழந்தைகள் விடுதிக்கு, ஒரு வருடத்திற்கும் மேல் வருகை தந்து குழந்தைகளின் கல்வி மற்றும் மற்ற திறன்களை வளர்க்க உதவி செய்து கொண்டிருப்பதாகச் சொன்னார்கள்.

”இளைஞர்களாகிய நீங்கள் எந்த எதிர்பார்ப்பும் இன்றி வந்திருப்பது மிகுந்த நம்பிக்கையை தருகிறது. என்னுடைய வருகையை விட, உங்கள் வருகை அர்த்தமுள்ளது”, என சேரன் அவர்களை பாராட்டினார்.

நாங்கள் சில ரோஜாக்களுக்கு ஒரு நாள் தண்ணீர் வார்த்துவிட்டு வந்துவிட்டோம். அந்த இளைஞர்கள் அவற்றை தினம் தினம் பாதுகாக்கிறார்கள். அவர்களே இந்தியாவின் ”புதிய தலைமுறை”


Monday, February 14, 2011

இதுதான் காதல் என்பதா?


நான் ஓய்வெடுக்கப் போவது என் வீட்டு காலிங் பெல்லிற்கு எப்படியோ தெரிந்துவிடும். இன்றும் அப்படித்தான். எழுந்து வர்றீயா இல்லையா என்பது போல தொடர் டிர்ர்ர்ரிங்.. கடுப்புடன் மாடியிலிருந்து எட்டிப் பார்த்தபோது ஒரு இளம்பெண்ணும் ஆணும்.

”சார் ஒரு நிமிஷம்” என்றாள் அவள்.
 ”எனக்கு எதுவும் வேண்டாம்மா”, என்று ஒரே வாக்கியத்தில் அவளை துரத்தப் பார்த்தேன்.
”சார். . . நான் சென்சஸ் எடுக்க வந்திருக்கேன்”, என்றாள். பட்டென என் மூடு மாறியது. படி இறங்கி வந்தேன்.

”ஓ . . . மன்னிக்கணும். நான் யாரோ சேல்ஸ் கேர்ள் என நினைத்துவிட்டேன்”
”பரவாயில்ல சார்.. ஒரு சேர் கொடுங்க சார்”, அவளிடம் பல நாள் பழகிய பெண்ணைப் போல, புன்னகை கலந்த இயல்பு.

சேரை எடுத்துப் போட்டு விட்டு, ”தண்ணீர் வேண்டுமா?” என்றேன்.
”வேண்டாம் சார். ஆனால் வேணுமான்னு கேட்டதுக்கு ரொம்ப நன்றி சார்”, இம்முறை அந்த ஆண் பேசினார். அவரது குரலும் என்னை உடனே நண்பனாகு என்றது. என்னை அறியாமல் ஒரு புன்னகை பிறக்க, அவர் அப்பெண்ணிடமிருந்து சில தாள்களை வாங்கிக் கொண்டு, ”நான் எதிர் வீட்டுக்குப் போய் வேலையை முடிக்கறேன்”, என்றபடி சென்றுவிட்டார்.
 
”சார் உங்க பேரு”, என்றாள் அப் பெண்.
சொன்னேன்.
”பிறந்த தேதி” , என்றாள்.
சொன்னேன்.
தொடர்ந்து அவள் கேட்ட பல கேள்விகளுக்கு பதில் சொல்லிக் கொண்டே இருந்தேன்.
”அவ்வளவுதான் சார். இந்த இடத்துல உங்க பேர் எழுதி கையெழுத்துப் போடுங்க”, என்று கூறியபோது, அந்த ஆண் உள்ளே நுழைந்தார். கையில் தண்ணீர் பாட்டில்.

”இவங்க வெளியில தண்ணி குடிக்க மாட்டாங்க சார், அதான் கடையில போய் வாங்கிட்டு வந்தேன்”, என்றவர் அந்தப் பெண்ணைப் பார்த்து ”இந்த பிஸ்கெட்டையும் கொஞ்சம் சாப்பிட்டா தெம்பா இருக்கும்”, என்றார்.
உடன் வேலைசெய்யும் பெண்ணின் மேல் இவ்வளவு கரிசனமா? என்ற எண்ணம் எழுந்த போதே,
”சார் இவங்க என் கணவர்”, என்றாள் அப்பெண்.
எனக்குள் பட்டென ஒரு ஆச்சரியம் பூத்தது.

”நீங்க ரெண்டு பேருமே டீச்சர்ஸா?”
”இல்ல சார். நான் மட்டும்தான் டீச்சர். பாரதி வித்யாலயாவில ஒர்க் பண்றேன். இவரு ஆட்டோ ஓட்டறார்.”
”பாவம் சார் இது. தினம் 7 மணிக்கெல்லாம் சென்சஸ் எடுக்க கிளம்பிடுது. சரியா சாப்பிடறது கூட இல்ல. வெயில்ல சுத்துது. நாலு நாளா பாக்கறதுக்கே மனசு கேட்கல சார். அதான் இன்னைக்கு ஆட்டோ ஓட்டறத விட்டுட்டு, நானும் கூடவே வந்துட்டேன்.”
”கூடவே நீங்களே சென்சஸ் எடுக்கறதெல்லாம் இருக்கட்டும். ஆனா அதுக்கு பணம் கிடைக்காதே, ஆட்டோ வருமானமும் போயிடுமே”
”அட போனா போகுது சார். பணம் யாருக்கு சார் வேணும். என்னை நம்பி வந்த பொண்ணு, என் முன்னாடி கஷ்டப் படாம இருந்தால், எனக்கு அதுவே போதும். பாருங்க வெயில்ல சுத்தி எவ்வளவு கருத்துடுச்சு”, குரலில் அப்படியொரு வாஞ்சை!
அதைக் கேட்ட அடுத்த வினாடி மளுக்கென்று ஒரு விசும்பல். அந்தப் பெண்ணின் கண்களில் ஈரம்.
”ஏய்.. நீ ஏம்மா அழற?”, என்றபடி அவர் அவளை அணைத்துக் கொள்ள, அவரின் கண்களில் இருந்தும் அடங்கமாட்டாமல் கண்ணீர் பெருக்கெடுத்தது.
உலகமே காதலர் தினத்தை வாழ்த்து அட்டைகளிலும், அர்த்தமற்ற சேட்டைகளிலும் கொண்டாடிக் கொண்டிருக்க, இங்கே இரு அன்பான ஜீவன்கள் காதலர் தினத்துக்கு அர்த்தம் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

”அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்!”
 என் கண்களிலும் ஈரம் கோர்க்கிறதோ...! இருக்கட்டும்!
அனைவருக்கும் இந்த தம்பதியினரின் சார்பாக, காதலர் தின வாழ்த்துகள்!

புகைப்படம் - ஜெயராஜ் பாண்டியன்.