Saturday, December 3, 2011

கனிமொழி இனி ஜெயலலிதாவை பின்பற்ற வேண்டும்!

கனிமொழி நினைத்தே பார்த்திருக்கமாட்டார். கிட்டத்தட்ட 192 நாட்கள் திஹார் சிறை வாசம். அதுவும் ஊழல் செய்த குற்றச்சாட்டுக்காக. கருணாநிதி போன்ற அரசியல்வாதியின் மகளாக இருப்பதின் சௌகர்யம், அசௌகர்யம் இரண்டையும் ஒரு சேர அனுபவித்திருக்கிறார் கனிமொழி.

அவர் ஜாமீனில்தான் வெளியே வந்திருக்கிறார். இன்னமும் சட்டத்தின் முன்னால் அவர் குற்றம்சாட்டப்பட்டவர்தான். இதிலிருந்து அவர் மீண்டு வருவது ஒரு நெடிய போராட்டமாக இருக்கும். மீண்டு வரமுடியாமலும் போகலாம்.

அவர் சென்னைக்கு வந்திறங்குகிற வேளையில் இரண்டு அரசியல் வதந்திகள் உலவிக் கொண்டிருக்கின்றன. ஒன்று, அவருடைய வருகையை ஒட்டி திமுகவின் கொண்டாட்டங்களை பாதிக்கும் வகையில் ஸ்டாலினை நில அபகரிப்பு வழக்கில் கைது செய்வது. இரண்டு, சென்னை சங்கமம் தொடர்பாக ஒரு வழக்கு பதிவு செய்து கனிமொழியையே கைது செய்வது. முதலாவது வதந்திக்கு முகாந்திரம் அதிகம். இரண்டாவது நடந்தாலும் நடக்கலாம்.

தனது அரசியல் எதிரி கருணாநிதியை பழிவாங்க, ஜெயலலிதாவுக்கு இதை விட நல்ல வாய்ப்பு கிடையாது. இதை கருணாநிதியை விட கனிமொழி நன்றாக உணர வேண்டும். இல்லையென்றால் அவர் நசுக்கப்படுவார். கனிமொழி உடனே என்ன செய்ய வேண்டும்?

சென்னை வந்ததும், அப்பாடா என ஓய்வெடுக்காமல் தமிழக அரசியல் கோதாவில் இறங்க வேண்டும். ஜெயலலிதா சார்பில் திமுகவிற்கு எதிராக முடுக்கிவிடப்படும் வழக்குகளையும், நெருக்கடிகளையும் நேரடியாக சந்திக்க வேண்டும்.

கனிமொழி இனி எப்படி இருக்க வேண்டும்? இந்தக் கேள்விக்கு விடை  ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கைதான் உதாரணம். பெண்ணாக இருந்தாலும், நெருக்கடி வந்த போதெல்லாம், முன் எப்போதையும் விட மேலும் வலிமையுடன் ஜெயலலிதா களம் இறங்கியிருக்கிறார். ஓடி ஒளியவில்லை. அவரையே முன்னுதாரணமாக வைத்துக் கொண்டு, ஜெயலலிதாவை அரசியல் களத்தில் சந்திக்க கனிமொழி தயாராக வேண்டும்.

தான் ஒரு அரசியல்வாதியா? அரசியல்வாதியின் மகள் மட்டுமா? என்பதை அவர் தீர்மானிக்கும் நேரம் வந்துவிட்டது. திஹாரிலிருந்து அவருடைய தனி விமானப் பயணம் சென்னையைத் தொடும்போது அவர் இந்தக் கேள்விகளுக்கான விடையுடன் தரையிறங்க வேண்டும்.

அவர் ஒரு வெற்றிகரமான அரசியல்வாதியாக தன்னை முன்னிலைபடுத்திக் கொள்ள இதை விட சிறந்த சந்தர்ப்பம் கிடைக்காது.

காலம் கேள்விகளை மட்டுமே வீசும். பதில் மட்டுமே நாம். உங்கள் பதில் என்ன கனி?

3 comments:

Vijay Prasanna said...

தோல்விகளையும் அவமானங்களையும் வெற்றி படிக்கட்டுகளாக மாற்றியமைத்து கொள்பவர்களே சரித்திரம் படைக்கிறார்கள்! கனிமொழிக்கு கிடைத்திருக்கும் நல்ல வாய்ப்பு பயன்படுத்திகொள்வார் என்றே நம்புவோம்!

Jayadev Das said...

What is happening is just drama. In the spectrum case nobody will be implicated, everybody will be found "innocent" and released later. Karunanidhi will never arrest Jaya and Jaya will not harm any of the big people in DMK. We people are the final "Bakras".

MANO நாஞ்சில் மனோ said...

எப்பிடியும் கட்சியில் இனி பெரிய பதவியும், தியாகி பட்டமும் கொடுப்பார்கள், ம்ம்ம்ம் அதைவச்சிட்டு போராடலாம் ஹி ஹி...ஆமா ஊழல் செய்த பணம் எங்கே போச்சுன்னு எனக்கு இன்னும் புரியவே இல்லை...?