Tuesday, August 16, 2011

அன்னா ஹசாரே - செய்திச் சேனல்களின் TRP பூஸ்டர்


அன்னா ஹசாரே கைது! என்று அதிகாலையிலேயே செய்திச் சானல்காரர்கள் அலற ஆரம்பித்துவிட்டார்கள்

இதென்ன எமர்ஜென்சியா? என்னை கைது செய்து ஒரு பஸ்ஸில் அழைத்துச் செல்கிறார்கள். எங்கே என்று தெரியவில்லை - இது கிரண்பேடியின் ட்வீட்

செய்திச் சேனல்களின் பாட்ஷா அன்னா ஹசாரேவுக்கு, ஆகஸ்டு 15 அன்றே டிரையலர்கள் துவங்கிவிட்டன. உலகத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக ஊழலுக்கு எதிரான ஒரு போராட்டம் என்று கூவாத குறையாக மீடியாக்கள் பில்ட் அப் கொடுத்துக் கொண்டிருக்கின்றன.

இன்று காலை 8 மணியிலிருந்து ஆங்கில செய்திச் சானல்களை பார்த்தால் நாடெங்கும் ஒரே கலவரம். மக்கள் ஊழலுக்கு எதிராக கிளர்ந்து எழுந்து கொண்டிருக்கிறார்கள். கைது செய்யப்பட்ட அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக தெருவெங்கும் கூடிக் கொண்டிருக்கிறார்கள். அரசு மக்களையும் கைது செய்து கொண்டிருக்கிறது. எமர்ஜென்சியை விட படு மோசமான அடக்கு முறை என்று ஸ்க்ரோலிங்கும், வாய்ஸ் பைட்டுகளும் பயமுறுத்தின.

இது போதாது என்று அதிரடி டிவிட்டுகளும், ஃபார்வர்டு செய்யப்பட்ட SMSகளும், அங்கே வாருங்கள், இங்கே வாருங்கள், ஊழலுக்கு எதிராக கூடுவோம் போராடுவோம் என்று படு ஆக்ரோஷமாக ஆட்களை திரட்டிக் கொண்டிருந்தன.

ஆனால் வீட்டை விட்டு வெளியே வந்தால், மீடியாக்களின் எந்த பரபரப்பும் இன்றி களைத்துப் போய் நண்பர் நின்று கொண்டிருந்தார். ஸாரிடா நீ சைடுல பணம் வெட்டாமல் உங்க வீட்டுக்கு த்ரீ ஃபேஸ் கனெக்ஷன் கிடைக்காதாம் என்றார்.

டிவிக்களில் சொல்லிக் கொண்டிருப்பது போல எந்த எமர்ஜென்சி அடக்கு முறையும் இல்லை. பஜ்ஜியில் எண்ணை அதிகமாக இருக்கிறது என்ற சில்லறை முறைப்புகளும், யோவ் உள்ள போய்யா என்ற ஃபுட்போர்டு பஸ் போராட்டங்களும்தான் இருந்தன.

மீடியாக்கள் இத்தனை உசுப்பியும், ஏன் அன்னா ஹசாரேவின் லோக்பல் மக்களை பரவலாகச் சென்றடையவில்லை. டிவிட்டர், ஃபேஸ்புக் மற்றும் பிளாகுகளில் பரபரவென எவ்வளவோ எழுதியும் ஏன் ஊழலுக்கு எதிராக மக்கள் ஒன்று சேர மாட்டேன்கிறார்கள்.

மிக முக்கியமான காரணம், இதை எழுதியிருக்கும் நான் உட்பட, இதை வாசித்துக் கொண்டிருக்கும் நீங்கள் உட்பட, எல்லோருமே அடிப்படையில் லஞ்சத்துக்கு பழகியவர்கள். நான் செய்தால் தப்பு இல்லை, தப்பு செய்வதைத் தவிர வேறு வழியே இல்லை என்று சமாதானமடைந்தவர்கள். ஆனாலும் மனசாட்சி உறுத்துவதால் அவ்வப்போது சாமிக்கு தேங்காய் உடைப்பதைப் போல, அன்னா ஹசாரேக்களுக்கு வாழ்க கோஷம் போட்டுவிட்டு மறந்துவிடுகிறோம். ஸ்கூல் ஃபீஸ், மின்சாரக் கட்டணம், மளிகை பாக்கி, மகளின் திருமணம் என்ற தினசரி தனிமனித நெருக்கல்களின் காரணமாக, சமூகப் போராட்டங்களுக்கு உடலும், உள்ளமும் ஒத்துழைப்பதில்லை. எனவே தான் ஊழலையும், ஊழலுக்கு எதிரான போராட்டங்களையும் சினிமா பார்ப்பது போல, வேடிக்கை பார்ப்பதுடன் நிறுத்திக் கொள்கிறோம்.

அடுத்த காரணம், சுனாமி பரிதாபங்கள், அன்னா ஹசாரே கோபங்கள் என எல்லாவற்றையும் ஊதிப் பெரிதாக்கி, இடை இடையே ஷாம்பூ விளம்பரங்கள் மற்றும் டெலிஷாப்பிங் அபத்தங்களை ஒளிபரப்பி எதையும் பூதாகரமாக்கி பணம் சம்பாதிக்கும், TRP டிவி உத்திகள். எனவே அடடா இவ்வளவு பெரிய போராட்டமா? நமக்கு இடம் கிடைக்காது என்று ஒதுங்குதல் அல்லது இவங்க சொன்ன மாதிரி பெரிசா ஒண்ணும் இல்லையே என்று நிராகரித்தல் ஆகிய இரு மனநிலைக்குத் தள்ளப்பட்டு ஒதுங்கிவிடுகிறோம்.

மூன்றவாது மிக முக்கிய காரணம். அன்னா ஹசாரே லோக்பல் மசாதாவை இரண்டாவது சுதந்திரப் போராட்டம் என்று வர்ணிக்கிறார். ஆனால் மகாத்மா காந்திக்கும், அன்னா ஹசாரேவுக்கும் மிகப்பெரிய வேற்றுமைகள் உள்ளன. காந்தி காங்கிரஸ் என்ற பேரியக்கத்தை முன்னிறுத்தி அதன் போராட்டத் தலைவராக தன்னை நியமித்துக் கொண்டு இயங்கினார். ஆனால் ஹசாரே அப்படி எந்த ஒரு இயக்கத்தையும் சார்ந்தவர் இல்லை. ஆனால் தலைவராக தன்னை முன்னிறுத்திக் கொள்கிறார். அன்னா ஹசாரே சொல்வது எவ்வளவுதான் நல்ல விஷயமாக இருந்தாலும், எத்தனைதான் மீடியா ஆதரவு இருந்தாலும், ஈர்க்கப்பட்டு திரளும் மக்கள் கூட்டத்தை ஒருங்கிணைக்க ஒரு அமைப்பு தேவை. அது நாடு முழுவதும் கிராமம் கிராமமாக இயங்க வேண்டும். மத்திய தலைமையாக அன்னா ஹசாரே இருக்கும்போது, அவர் பேச்சுக் கேட்டு நடக்கும் கிளைத் தலைவர்கள் இருக்க வேண்டும். ஆனால் அன்னா ஹசாரே விஷயத்தில் அப்படி எதுவும் இல்லை.

இதை பிஜேபி தனக்கு சாதகமாக்கப் பார்க்கிறது. எங்களை அழைத்தால் நாடு முழுவதும் ஆதரவு தருகிறோம் என்கிறது. சுப்பிரமணியன் சுவாமி, நான் வரவா என்கிறார். பாபா ராம்தேவ் ஏற்கனவே குட்டையைக் குழப்பியது ஞாபகமிருக்கலாம்.

எனவே என்னதான் நியாயமான காரணங்களுக்காக அன்னா ஹசாரே போராடினாலும், அது நாடு தழுவிய இயக்கமாக இயங்க வேண்டும் என்றால், நாடு தழுவிய அமைப்பு அவருக்கு வேண்டும். அது தற்சமயம் இல்லாததால், ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற இந்தப் போராட்டம், காங்கிரஸை தேர்தலில் தோற்கடிக்கும் போராட்டமாக மட்டும் சுருங்கிவிடும். அன்னா ஹசாரே மற்றும் அவரது ஆதரவாளர்களின் உழைப்பை ஏதோ ஒரு கட்சி கபளிகரம் செய்து கொண்டு போய்விடும். மிஞ்சிப் போனல் ஆட்சி மாறும்! ஆனால் ஊழலும் அதை எதிர்க்கும் போராட்டங்களும் அப்படியேதான் இருக்கும். அன்னா ஹசாரே செய்திச் சேனல்களின் TRP பூஸ்டராக இருந்து பதவி இறக்கம் செய்யப்படுவார். யோசிங்க மக்காஸ்! யோசிங்க ஹசாரே!

4 comments:

Prabu Krishna said...

நேற்றில் இருந்தே இந்தக் கூத்துதான்.... நானும் முன்னர் அவர் சாதிக்கப் போகிறார் என்று நினைத்தேன். ஆனால் மீடியா அவரை பயன்படுத்துகிறது என்பதுதான் உண்மை... நீங்கள் சொல்வது போல ஒரு அமைப்பு கட்டாயம் வேண்டும்.

இனியன் பாலாஜி said...

உண்மைதான்

Cuddalore J. Shanthakumar said...

இதே கருத்தைத்தான் இன்று எனது நண்பனிடத்தில் சொன்னேன் , என்னைப் போல ஒருவன் ! வாழ்த்துக்கள்

Anonymous said...

what you are saying is 101% true