Tuesday, March 2, 2010

இந்தியர்கள் சகிப்பின் உச்சம். மற்றவர்கள் சகிப்பின் எ - - - -

அசிரத்தையாக துபாய் மியுசியம் பார்த்துவிட்டு வெளியே வந்தபோது, நண்பர் மீனாட்சி சுந்தரம் கோவிலுக்கு போய்விட்டு வரலாம் என்றார். துபாயின் அவசர வாழ்க்கையிலும் தினம் தியானம் பண்ணி கடவுளை வழிபட்டு பிறகு காரில் ஏறிப் பறப்பவர் அவர். அதனால் அவர் அழைத்ததும் வருகிறேன் என்றேன். எனக்கு கோவில் பிரசாதங்களின் மேல் அலாதி பிரியம்.

நம்ம ஊர் மினி ஹால் திருமண மண்டபங்களின் வாசலைப் போல, விசாலமும் இல்லாமல் குறுகலாகவும் இல்லாமல் ஒரு இடம். இங்குதான் கோவில் நுழைவாயில். ஷீவைக் கழற்றி இலவச ஸ்டாண்டில் வைத்துவிட்டு, காமிராவை ஆயத்தப் படுத்தினேன். நண்பர் தயவுசெய்து கிளிக் செய்யாதீர்கள், வந்திருப்பவர்கள் அசௌகரியப்படுவார்கள் என்றார். நான் பதில் பேசவில்லை. காமிராவை ஜீன்ஸ் பாண்டுக்குள் சிரமப்பட்டு நுழைத்தேன்.


பெருமாள் பூகடை என்ற தமிழ் போர்டு மட்டும் ஞாபகம் இருக்கிறது. மற்றபடி அந்த குறுகலான நுழைவாயிலின் இருபுறமும் வடஇந்தியர்களின் வழக்கப்படி மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிற பூக்களால் அலங்கரிக்கப்பட்ட மாலைகளை விற்ற பெட்டிக் கடைகளே நினைவில் நிற்கின்றன. கிட்டத்தட்ட சென்னை ரங்கநாதன் தெருவை நேர்வகிடாக கால்வாசி வெட்டி வைத்ததுபோல குறுகல். ஆனால் எந்தக் கடையிலும் காதைக் கிழிக்கும் சாமி குத்துப்பாட்டுகள் இல்லை.


இரும்பு படிக்கட்டுகளால் ஆன படியேறி மாடிக்கு மேலே சென்றால் கோவில் இருக்கிறது. அதை கோவில் என்று நீங்கள் ஒப்புக் கொள்ள மாட்டீர்கள். ஒரு மார்வாடி வீட்டு வரவேற்பறை போல உள்ளது. திருநீர் இல்லை, குங்குமம் இல்லை. தீபங்கள் இல்லை, பத்திகள் இல்லை. வேத கோஷங்கள் இல்லை, கோவில் மணி இல்லை. தேங்காயும் உடைக்கப்படுவதில்லை. தேங்காய் லிங்கத்தின்(லிங்கம்தானே?) அருகில் காண்பிக்கப்பட்டு பெரிய கருமை நிற பிளாஸ்டிக் கோணியில் திணிக்கப்படுகிறது. ஆனால் அங்கேதான் இந்து மத பக்தர்கள் கூடுகிறார்கள்.

பூசாரி மற்றும் பக்தர்கள் உட்பட அனைவருமே மௌன விரதம் இருப்பவர்கள் போல மனதுக்குள் முனகிக்கொண்டே பிரார்த்தனை செய்தார்கள். நான் அங்கிருந்த சாமிப்பட கண்ணாடிகளில் என் முகம் பார்த்துவிட்டு, தரையில் சாஷ்டாங்க நமஸ்காரத்தில் இருந்தவர்களை இடறாமல் பிரசாதம் எங்கே என்று தேடினேன். நாமே அங்கிருந்த பேப்பர் தட்டுகளை எடுத்துக் கொண்டு வரிசையில் நிற்க வேண்டும் என்பதை உணர்ந்தபோது நண்பரும் நமஸ்காரத்தை முடித்துவிட்டு வந்துவிட்டார். பிரசாதத்துடன் படி இறங்கினோம். கோவில் எப்படி இருக்கிறது? என்றார். பிரசாதம் சுமார் என்றேன்.


புன்னகைத்துக் கொண்டே வாங்க அங்க போலாம் என்றார். அவர் கை காண்பித்த இடம் கிருஷ்ணன் கோவிலாம். அங்கேயும் பளபள மொசைக் தரையில் சைலண்ட் பக்தர்கள் மற்றும் பூசாரிகள். நிஜமாவே இன்னமும் கூட்டம் சேராத ஒரு கல்யாண வீடு போலவே இருந்தது. கிருஷ்ணர் எங்கே இருக்கிறார் என்று தேடியபோது, பக்கத்து காம்பவுண்டில் இருந்த மசூதியில் இருந்து இறை அழைப்பு ஒலித்தது. அதன் பிண்ணனியில் இந்து பக்தர்கள் கை கூப்புவது எனக்கு வித்தியாசமாக இருந்தது. மசூதியின் இறை வணக்கம் முடிந்தபின், பூசாரி ஏதோ ஒரு ஆம்ப்ளிபயரை முடுக்கினார். சன்னமாக ஏதோ பஜன் கேட்டது.


வெளியில் வந்து ஷீவை மாட்டும்போது சீக்கிரம் வாங்க நேரமாகிவிட்டது என்று யாரோ அழைக்க கடைசி நேர பக்தர்கள் அவசரமாக உள்ளே ஓடினார்கள். நண்பர் கடைசியாக ஒரு முறை கோவிலை திரும்பி பார்த்துவிட்டு, ராசியான கோவில், வேண்டிக்கொண்டால் நினைத்தது நடக்கும் என்றார்.


நம்ம ஊர் தைப் பூசம் போல வேல் வேல் வெற்றி வேல் என்றும், ஐயப்ப பக்தர்கள் போல சாமியேய் சரணம் ஐயப்பா என்றும், திருப்பதி மலையை நிறைக்கும் கோவிந்தா கோவிந்தா என்றும் இங்கே தினமும் இந்த அரபு மண்ணில் குரல் கொடுக்க அனுமதி வேண்டும் என்று வேண்டிக்கொண்டால் இந்த சாமிகளால் அருள் பாலிக்க முடியுமா?


அந்த சாமிகளால் நிச்சயமாக முடியாது. ஆனால் அந்த அரபு மண்ணின் கட்டுப்பாடுகளை ஏற்று தனது ஆகம விதிகளை குறுக்கிக் கொண்ட கோவில்களைப் போல, அரபு மண்ணின் விதிகளை ஏற்று தனது ஆன்மீக அடையாளங்களை சுருக்கிக் கொண்ட பக்தர்களின் சகிப்புத் தன்மையை நான் பாராட்டுகிறேன்.


பின் குறிப்பு

கத்தார் நாட்டு்க்கு குடியுரிமை வாங்கிச் சென்றுள்ள  ஓவியர் திரு. எம்.எஃப் உசேன் அவர்களுக்கு சில விஷயங்கள்.


மத அடையாளங்களை கடைபிடிக்கின்ற விஷயத்தில், துபாயுடன் ஒப்பிடும்போது கத்தார் மிகவும் கெடுபிடியான நாடு.

துபாயில் வசிக்கின்ற இந்தியர்கள், தான் வாழும் மண்ணுக்கேற்ப தனது அடையாளங்களை மறைத்துக் கொண்டும் அந்த வேதனைகளை சகித்துக் கொண்டும் எப்படி வாழ்கிறார்கள் என்பதை ஒரு முறை அவர்களை நேரில் சந்தித்து கற்றுக் கொள்ளுங்கள்.


கத்தாருக்கு குடியுரிமை பெற்ற சூட்டோடு, அந்த மண்ணின் இயல்புகளை, புனிதங்களை கலை என்ற பெயரில் மறுக்கவோ, நிர்வாணப்படுத்தவோ முயற்சிக்காதீர்கள்.

உங்களுடைய எல்லா முயற்சிகளுக்கும் இந்தியாவில் மட்டுமே இடமுண்டு. எனவே உங்கள் தூரிகை அத்து மீற நினைக்கும்போதெல்லாம் இந்தியா வாருங்கள். இந்தியர்கள் சகிப்பின் உச்சம். மற்றவர்கள் சகிப்பின் எ . . .

16 comments:

Guru said...

செல்வா சார்! அருமையான பதிவு ! நிச்சயம் இந்தியர்கள் சகிப்புத்தன்மையின் உச்சம் தான். ! இருந்தாலும் நாம் ஊரில் போலி மதசார்பற்றவாதிகள் (Pseudosecularists) ஹுசைனுக்கு நன்றாகவே கொடி பிடிக்கிறார்கள்..
என்ன வேணாலும் எழுதலாம்! வரையலாம்! பேசலாம்! மத உணர்வுகளை புண்படுத்தலாம்.. சகிப்பு தன்மை அதிகம் தான் !

அப்புறம் துபாய் கோயில் மேட்டர் "ஆலை இல்லா ஊருக்கு இலுப்பைபூ சர்க்கரை" இதுவாவது இருக்கிறதே! ஓமானில் சிவன்,ஐயப்பன் கோயில்கள் இருப்பதாய் கேள்வி!

Thenammai Lakshmanan said...

மிக அருமை செல்வா நானும் துபாயில் நீங்கள் சொல்லும் எல்லா கோயிலும் சென்று இருந்தேன் மிகச் சரியான உண்மையான பதிவு இது நாம் உள்ளபடியே சகிப்பின் உச்சம் மற்றவர்கள் எச்சம் தான்

ISR Selvakumar said...

தேனம்மை,
ஒவ்வொரு முறையும் நான் துபாய் செல்லும்போது நண்பர்களுக்காக இந்தக் கோவிலுக்கு சென்றிருக்கின்றேன். ஒருமுறை கூட கோவிலாக உணர்ந்ததில்லை.

நம்மவர்களின் பயம் கலந்த சகிப்புத்தன்மையை அங்கே என்னால் உணர முடிகிறது.

ISR Selvakumar said...

குரு,
நீங்கள் சொல்வது சரி. நம்ம ஊர் போலி மதசார்பற்றவாதிகளை (Pseudosecularists) இதுபோன்ற நாடுகளின் கெடுபிடிகளை ஒரு முறை நேரில் பார்க்கச் சொல்ல வேண்டும்.

Barari said...

enna sakippu thanmai odrum puriyavillai?

ஜீவா ஓவியக்கூடம் said...

அற்புதம் செல்வா!!!

enRenRum-anbudan.BALA said...

போலி செக்யூலரிஸ்டுகளுக்கு / அறிவுஜீவிகளுக்கு செவிட்டில் அறைந்த மாதிரி இருக்கும்! அந்த ஃபைனல் பஞ்ச் அருமை!

உண்மையான இஸ்லாமியன் said...

அருமையான பதிவு. கசப்பான உண்மைதான்.. போலி மதச்சார்பின்மை வாதிகளுக்க்கு இதைப் பற்றியெல்லாம் எந்தக்கவலையுமில்லை.. இஸ்லாமிய ஆதரவு செய்தால் மட்டுமே அவர்களும் கவனிக்கப்படுகிறார்கள் என்பதால் ஊளைச் சத்தம் காதைப் பிளக்கிறது. தர்மமே வெல்லும் என்பதை மட்டும் நினைத்து அமைதி காக்க வேண்டியதுதான்.. பாவம் நாங்கள்..

வினோத் கெளதம் said...

வாவ்..அருமையான பதிவு செல்வா சார்..
துபாயில் இருக்கும் கோவிலுக்கு நான் இதுவரை சென்றது இல்லை..செல்வதற்கு விருப்பமும் இல்லை.அந்த கோவிலின் லட்சணம் எந்த அளவில் இருக்கும் என்பதை ஓரளவு யூகித்து வைத்திருந்தேன்.உங்கள் மூலமாக நிரூபணம் ஆகிடிச்சு.
கத்தார்ல அவர் வேலைய காட்டுனார்னா 'கட்' பண்ணிடுவாங்க..;)

ஓசை செல்லா said...

நண்பருக்கு சலாம்!

கடும் கண்டனங்கள் இந்த பதிவுக்கு! காரணம் கத்தார் என்ற மதச்சார்பு நாட்டோடு இந்தியா போன்ற ஒரு சோசலிச :-) குடியரசு நாட்டை ஒப்பிட்டதற்கு! நிலைமை இவ்வளவு கீழாகிவிட்டதா! இந்தியர்களின் சகிப்புத்தன்மைக்கு உதாரணம் நான் சொல்லட்டுமா... சமீபத்தில் உத்தப்புரம்.. கொஞ்சம் முன்னாடி குஜராத் படுகொலைகள்... இன்னும் முன்னாடி போனா.. சமணரைக்க் கொன்று குவித்த கழுமரங்கள்... கணவனோடு மனைவியை எரித்த நச்சுமனிதர்கள்... இன்றும் இரட்டைக்குவளையில் சகமனைதனை தூரத்தள்ளும்.. நம்மூரு டீக்கடைகள்! கொஞ்சம் நிதானமா பாருங்க என் கருத்துக்களையும்!

ISR Selvakumar said...

செல்லாவுக்கு வணக்கம்,
நீங்கள் சொல்வது எதையும் நான் மறுக்கப்போவதில்லை. சந்தர்ப்பம் கிடைக்கும் என்றால் உங்களுடன் சேர்ந்து நான் குரல் கொடுக்கத் தயார்.

எம்.எப்.ஹீசைன் - கத்தார் குடியுரிமை பெற்றுச் சென்றதற்க்கான காரணங்கள் வேறு. நீங்கள் குறிப்பிட்டுள்ள பிரச்சனைகள் வேறு.

கத்தார் நாட்டில் இதே எம்.எப்.ஹீசைன் தனது படைப்புச் சுதந்திரத்தை எந்த அளவுக்கு நிலைநாட்டப் போகிறார் என்பதே என் கேள்வி.

Anonymous said...

நண்பரே.. கத்தாரை விடுங்கள்.. அவர் மாதிரி ஒரு தனிப்பாணி கலைஞனுக்கு மேற்குலகம் நிச்சயம் கம்பளம் விரிக்கும்! நாடா இல்லை அவருக்கு!

என்னைப்பொறுத்தவரை சகிக்கமுடியாத தன்மைகளை அதிகம் கொண்ட ஒரு கிறுக்குத்தனமான நாடு இந்தியா! ஆயிரக்கணக்கான அப்பாவிகளை குசராத்தில் உயிரோடு எரித்த பாரதீயம் பேசும் நாடல்லவா இது!

ISR Selvakumar said...

இந்தியாவுக்குள் இருக்கும் கிறுக்குத்தனங்கள் இந்தியாவின் அறிவிக்கப்பட்ட கொள்கைகள் அல்ல. அது சில கிறுக்கர்களின் தவறான செயல் விளைவுகள். அந்தக் கிறுக்கர்கள் மட்டும் தான் இந்தியர்கள் என்று உருவம் தர முயற்சிப்பது தவறு. அவர்களை விமர்சிக்கின்ற நீங்களும் இந்தியரே.

Chitra said...

///ஷீவைக் கழற்றி இலவச ஸ்டாண்டில் வைத்துவிட்டு, /////

////காமிராவை ஜீன்ஸ் பாண்டுக்குள் சிரமப்பட்டு நுழைத்தேன்./////

////கிட்டத்தட்ட சென்னை ரங்கநாதன் தெருவை நேர்வகிடாக கால்வாசி வெட்டி வைத்ததுபோல குறுகல். ஆனால் எந்தக் கடையிலும் காதைக் கிழிக்கும் சாமி குத்துப்பாட்டுகள் இல்லை.////

////அதை கோவில் என்று நீங்கள் ஒப்புக் கொள்ள மாட்டீர்கள். ஒரு மார்வாடி வீட்டு வரவேற்பறை போல உள்ளது.////

/////நான் அங்கிருந்த சாமிப்பட கண்ணாடிகளில் என் முகம் பார்த்துவிட்டு, தரையில் சாஷ்டாங்க நமஸ்காரத்தில் இருந்தவர்களை இடறாமல் பிரசாதம் எங்கே என்று தேடினேன்./////

////கோவில் எப்படி இருக்கிறது? என்றார். பிரசாதம் சுமார் என்றேன்.///

////நிஜமாவே இன்னமும் கூட்டம் சேராத ஒரு கல்யாண வீடு போலவே இருந்தது./////

//////நம்ம ஊர் தைப் பூசம் போல வேல் வேல் வெற்றி வேல் என்றும், ஐயப்ப பக்தர்கள் போல சாமியேய் சரணம் ஐயப்பா என்றும், திருப்பதி மலையை நிறைக்கும் கோவிந்தா கோவிந்தா என்றும் இங்கே தினமும் இந்த அரபு மண்ணில் குரல் கொடுக்க அனுமதி வேண்டும் என்று வேண்டிக்கொண்டால் இந்த சாமிகளால் அருள் பாலிக்க முடியுமா?///////


////உங்களுடைய எல்லா முயற்சிகளுக்கும் இந்தியாவில் மட்டுமே இடமுண்டு. எனவே உங்கள் தூரிகை அத்து மீற நினைக்கும்போதெல்லாம் இந்தியா வாருங்கள்./////


........... செல்வா அண்ணனின் குறும்பு தெரிந்த இடங்கள். அந்த இடங்களில், உங்கள் கருத்துக்களையும் உள்குத்தாக வைத்து கொண்டே வந்த விதத்தை ரசித்தேன். ஒரு சர்ச்சைக்குரிய விவகாரத்தை கையில் எடுத்து கொண்டு, யாருக்கும் நோகமால் நுங்கு எடுத்து விட்டீர்கள். வாழ்த்துக்கள்.

BONIFACE (யார்கிட்ட தான் சொல்ல!!!!) said...

தலைப்பு ரொம்ப செரிதான், ஆனா இந்தியால இருந்தா சும்மா துல்லுவாங்க

Anonymous said...

எனக்கு சரியாகத்தெரியவில்லை ஒரிசா என்று நினைக்கிறன்.கிருஸ்துவ பாதிரியார் குடும்பத்தை எரித்தனர்.தகவலில் தவறு இருப்பின் மன்னிக்கவும்.இது தான் நீங்கள் கூறும் சகிப்பின் உச்சமோ.இது தான் எ......