Thursday, May 7, 2009

இலங்கை அகதிகளுக்கு உதவும் சூப்பர் ஸ்டார்?

”தனி ஈழம் வேண்டும், ஆனால் அதை வேறு யாரும் வாங்கித்தரக் கூடாது. நான்தான் வாங்கித்தருவேன்” என்று தமிழகத்தின் பிரதானக் கட்சிகள் முதல் குட்டிக் கட்சிகள் வரை குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. தேர்தல் நேரத்தில் இவர்களது கவலையில் மனிதாபிமானத்தைவிட அரசியல் இலாபம் அதிகம் கலந்திருப்பதால், அனைத்துக் கட்சியினரின் மீதும் சந்தேகம் வருகிறது.

பிரபாகரன் மீண்டும் பலம் பெற்று படைகளை முன்னெடுத்துச் சென்றால்தான் இந்த அரசியல்வாதிகளின் அலட்டல்கள் குறையும். ஈழ விஷயத்தில் இவர்களை கண்மூடித்தனமாக ஆதரிக்கும் குணங்கள் மறையும்.

ஈழத்தில் போர் முனையில் சிக்கி தினம் தினம் மாண்டுபோகும் தமிழர்களுக்காக (தேர்தல் நேரத்தில்) கண்ணீர் வடிக்கும் இவர்கள், தப்பி வந்து அகதிகளாக இருப்பவர்களுக்கு ஏதாவது செய்திருக்கிறார்களா என்று லென்ஸ் வைத்துத் தேடினாலும் அகப்படமாட்டேன்கிறது.

சூப்பர் ஸ்டார் வேகமான ஆள் என்றாலும், மற்றவர்களுக்கு உதவும்போது மிகவும் அமைதியாக விளம்பரமின்றி செய்யக் கூடியவர் என்று பலர் சொல்லக் கேட்டிருக்கின்றேன். முன்பு ஜெய்சங்கரை அப்படிச் சொல்வார்கள்.
தமிழகத்தில் இருக்கும் இலங்கை அகதிகளுக்கு அவ்வப்போது தன்னால் ஆன உதவிகளை ரஜினி தொடர்ந்து செய்து வருகிறாராம். ஆனால் சத்தமின்றி அவர்தான் உதவுகிறார் என்பது தெரியாமல் உதவிகள் அவர்களைப் போய்ச் சேருகின்றதாம்.

ரஜினி அலுவலகத்துடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் நண்பர் ஒருவர் சொன்னார். இது உண்மையா பொய்யா என்று சந்தேகம் வந்தாலும் சத்தமின்றி உதவிகள் நடப்பதால் உண்மையாக இருக்கட்டுமே என்று மனது நினைக்கிறது.

இத்தாலி அன்னையும் - தமிழ் அம்மாவும் கைகுலுக்கும் நேரம் வந்துவிட்டதா?

Rahul said the Congress considered the TDP, the JD (U) and the AIADMK as secular-minded parties. ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் ராகுல் இவ்வாறு கூறியதாக செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து தேர்தலுக்குப் பிந்திய அரசியல் அணி மாற்றங்களைப் பற்றிய ஜோசியங்கள் தொடங்கிவிட்டன.

தேர்தல் காலங்களில் தலைவர்களின் ஒவ்வொரு வார்த்தையும் ஒவ்வொரு விதமாகப் பார்க்கப்படும். அதற்கேற்ப கூட்டணிகளுக்குள் படபடவென பட்டாசு கொளுத்திப் போடும் வேலையை ராகுல் காந்தி கனக் கச்சிதமாகச் செய்து கொண்டிருக்கிறார். அவருடைய கடைசி கட்ட பிரச்சாரம் முழுக்க முழுக்க தேர்தலுக்குப் பின் உருவாகக் கூடிய அணி மாற்றங்களைப் பற்றித்தான் இருக்கிறது.

கூட்டணி இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது என்ற தீர்மானத்திற்கு வந்துவிட்ட ராகுல், தற்போதே எதிரணியில் இருக்கும் இடது சாரிகள், ஜனதா தள் மற்றும் அ.தி.மு.க கட்சிகளுக்கு வலை வீச ஆரம்பித்துவிட்டார். இதில் ஆச்சரியம் என்னவென்றால் அவருடைய வலையில் இந்த மீன்கள் சிக்கிக் கொள்ள ஆர்வம் காட்டுகின்றன.

அதற்கு முதல் காரணம் மூன்றாவது அணி என்பது வெறும் ஏட்டுச்சுரைக்காய் என்பதை, அந்த அணியில் உள்ளவர்களே உணர ஆரம்பித்துவிட்டதுதான்.

நித்திஷ் குமாரும் இடது சாரிகளும் ”இது பற்றி தற்போது எதுவும் பேசுவதற்கில்லை” என்று கூறிவிட்டார்கள். ஆனால் ராகுல் தொடர்ந்து அவர்கள் எங்கள் அணிக்கு வருவார்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அவர்களும் மறுப்பெதுவும் சொல்லவில்லை. சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் எதிராளியை பாய்ந்து குதறும் ஜெயலலிதா ”ராகுல் அப்படியா சொன்னார்? நான் இன்னும் அவருடைய பேட்டியை படிக்கவில்லை” என்று பட்டும் படாமல் பதில் சொல்கிறார். இடதுசாரிகளும்,நித்திஷ்குமாரும் சொன்னது போல ஒரு குறைந்த பட்ச மறுப்பு கூட அவரிடமிருந்து வெளிவரவில்லை.

நாட்டின் வேறெந்த பகுதியையும் விட தமிழ்நாட்டில் ராகுலின் பேச்சும், ஜெயலலிதாவின் பட்டும் படாத பதிலும், மிகப் பெரிய கூட்டணி குழப்பங்களை உண்டாக்கும். சோனியாவின் வருகை ரத்தானதற்கும், ராகுலின் இந்தப் பேச்சுக்கும் மிக எளிதில் இங்கே முடிச்சு போடப்படும்.

உணர்ச்சிகரமான ஒரு இன அழிப்பு பிரச்சனையை இங்கே சாதாரண கருணாநிதி-ஜெயலலிதா பிரச்சனையாக மாற்றி ஆளாளுக்கு அரசியல் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ஈழத்தமிழர்களி்ன் அவலத்தை முன்னிறுத்தி  அணி மாற்றங்களும் நடந்து, தேர்தல் பிரச்சாரமும் கடைசிக் கட்டத்திற்கு வந்துவிட்டது. இந்த வினாடி வரை சோனியாவும், ஜெயலலிதாவும் எதிரெதிர் அணியில். கம்யுனிஸ்டுகளை அருகில் வைத்துக்கொண்டே காங்கிரசுக்கு அழைப்புவிடுத்த ஜெ.வை இங்கே ஞாபகப்படுத்திக் கொள்வது நல்லது. ஒருவேளை வெளிப்படையாக ராகுலும், இரகசியமாக ஜெயலலிதாவும் ஆசைப்படுவது போல தேர்தலுக்குப்பின் ஓரணிக்கு திரண்டால் . . .?


ஐயோ பாவம் . . . இவர்களை நம்பிய கருணாநிதி பிரிவு ஈழ ஆதரவாளர்கள் மற்றும் ஜெ. பிரிவு ஈழ ஆதரவாளர்கள்.

Wednesday, May 6, 2009

கருணாநிதி இருந்தும் இல்லாத தேர்தல் களம்

தி.மு.க தன்னை புதிய தலைமைக்கு தயார் படுத்திக் கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டதாகத்தான் தோன்றுகிறது. தி.மு.வின் சரித்திரத்தில் முதன் முறையாக கருணாநிதி இல்லாமல் அடுத்த கட்டத் தலைவர்கள் மட்டும் களத்தில் உள்ளார்கள். வடசென்னையில் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்திற்குப்பின் திருச்சியில் ஒரு கூட்டத்தில் கருணாநிதி பேசினார். அத்துடன் சரி. முதுமையும், தற்போதைய உடல் நிலையும் அவரை மீண்டும் மருத்துவமனைக்குள் முடங்கச் செய்துவிட்டது. இன்றைக்கு (மே 6) அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாவுடன் இணைந்து செய்யவிருந்த பிரச்சாரம் ரத்தாகிவிட்டது. இன்னும் இரு நாட்களுக்கு அவர் மருத்துவமனையில்தான் இருப்பார் என்று செய்திகள் கூறுகின்றன.

நிச்சயமாக தி.மு.க தொண்டர்களுக்கு இது ஒரு சோர்வை உண்டாக்கும். குறைந்தபட்சம் இன்னும் ஒரே ஒரு பிரச்சார மேடையிலாவது கருணாநிதி தோன்ற வேண்டும் என்று தீவிர உடன்பிறப்புகள் காத்திருக்கின்றார்கள். கருணாநிதி அப்படி ஒரு சாகசத்தை செய்யக் கூடியவர்தான். தற்போது வீல் சேரில் அசராமல் வலம் வருவதைப்போல, ஸ்டெரச்சரில் படுத்துக் கொண்டாவது ஒரு மேடையில் எதிர்க்கட்சிகளுக்கு பதில் சொன்னாலும் சொல்வார். அப்படி ஒன்று நடந்தால் நான் ஆச்சரியப்பட மாட்டேன். கருணாநிதியின் விளம்பர மோகமும், எத்தனையோ கருத்துக்களும், அரசியல் நடவடிக்கைகளும் எனக்குப் பிடிக்காது. ஆனால் அவருடைய உழைப்புக்கும், எதற்கும் துவளாத குணத்துக்கும் நான் மிகப் பெரிய இரசிகன். இந்தக் குணத்தைப் பொறுத்தவரை, இன்றைய தேதியில் உலக அளவில் அவருக்கு ஈடு கொடுக்க எவரும் இல்லை. குறிப்பாக தி.மு.வில் எவரும் இல்லை.

இருந்திருந்தால் இன்றைக்கு சோனியாவுடன் அவர்கள் கருணாநிதியின் இடத்தை பிரச்சார மேடையில் நிரப்பியிருப்பார்கள். இன்றையக் கூட்டம் நடந்திருக்கும். இன்றைய பிரச்சாரக் கூட்டத்தின் ரத்து, தி.மு.வின் நிலையைத்தான் காட்டுகிறது.

கருணாநிதி இந்தத் தேர்தலை விட, தேர்தலுக்குப் பின் கட்சியின் தலைமையைப் பற்றித்தான் அதிகம் கவலைப் படுகிறார் என்று நான் நினைக்கிறேன். நான் நினைப்பது சரியோ தவறோ, ஆனால் அவர் தேர்தலுக்கு முன் இன்னும் ஒரே ஒரு முறையாவது மேடையில் தோன்றி கர்ஜிப்பார் என்று காத்திருக்கிறேன்.

ஜெயலலிதா மட்டும் தனியாக வாள் சுழற்றுவது, ஜெயலலிதாவுக்கே அலுப்பாக இருக்கும். நீங்கள் இல்லாத தேர்தல் களம் பரபரப்பின்றி இருக்கிறது! வாருங்கள் கலைஞரே!

Tuesday, May 5, 2009

நேற்று ஜெ! இன்று புலிகள்! ஸ்ரீஸ்ரீரவிசங்கர் அவர்களின் சி.டியில் அப்படி என்னதான் இருக்கிறது?

இலங்கைக்குச் சென்று வந்தஸ்ரீஸ்ரீரவிசங்கர் ஜி அவர்களின் சிடியில் அப்படி என்னதான் இருக்கிறது. அதைப் பார்த்த அடுத்த நாளே ஜெயலலிதா தீவிர ஈழ ஆதரவாளராக மாறிவிட்டார். அதைப் பார்த்து ஈழ ஆதரவாளர்கள் பலரும் ஜெயலலிதா ஆதரவாளராக மாறிவிட்டார்கள்.

தற்போது விடுதலைப் புலிகளே ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரை அணுகியுள்ளார்கள் என்று செய்தி வெளியாகியுள்ளது. இலங்கை அரசுக்கு அவருக்கிருக்கும் நல்லெண்ண உறவுகளைப் பயன்படுத்தி, ஈழப்போரை நிறுத்த உதவுமாறு விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் திரு.நடேசன் தொலைபேசியில் கேட்டுக்கொண்டதாக ஸ்ரீஸ்ரீரவிசங்கர் அவர்களின் ஆசிரமத்திலிருந்து ஒரு செய்தி வெளியாகியுள்ளதாக இந்திய செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இந்தச்செய்தி உண்மையா பொய்யா என இதுவரை புலிகள் தரப்பிலிருந்து எதுவும் சொல்லப்படவில்லை.

நாங்கள் போர் நிறுத்தத்துக்கு தயாராகவே உள்ளோம். போர் நிறுத்தத்தை நடை முறைப்படுத் தேவையான அனுசரணைப் பணியை மேற்கொள்ளுமாறு தங்களைக் கேட்டுக் கொள்கின்றோம் என்றும் நடேசன் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குருஜியிடம் தெரிவித்துள்ளாராம்.

ஆனால் போர் நிறுத்தம் என்றால் என்ன?
புலிகள் ஆதரவாளர்களைப் பொறுத்தவரையில், தற்போது பிரபாகரன் தப்பி, பின்னர் பலம் திரட்டி மீண்டும் போரிடுவது.
இலங்கையைப் பொறுத்தவரையில், தமிழர்களை கொன்று குவித்து, உடனே பிரபாகரனை பிடித்து, மீண்டும் புலிகள் பலம் பெறுவதை தடுப்பது.

பிரபாகரன் தப்பிவிட்டால் புலிகள் மட்டுமல்லாமல் ஈழ ஆதரவாளர்கள் அனைவருமே மீண்டும் புத்துணர்வு பெறுவார்கள் என்பதில் துளியும் சந்தேகமில்லை. ஆனால் பிரபாகரன் தப்பிவிட்டார் எனத் தெரிந்தால், அடுத்த கணமே இங்கிருக்கும் ஜெயலலிதா உட்பட அனைவரும் தங்கள் அரசியல் நிலையை மாற்றிக் கொள்வார்கள்.  ஜெ.பிரிவு ஈழ ஆதரவாளர்கள்தான் தர்மசங்கடப்படுவார்கள்.

இந்திராகாந்தி பாணியில் போரிட்டு, இலங்கையை பணிய வைத்து, தனி ஈழம் அமைப்பேன் என்று ஜெ மேடையில் முழங்கினாலும், இது வரையில் புலிகள் பற்றியும், புலிகளின் தலைவர் பிரபாகரன் பற்றியும் தனது கருத்து என்ன என்பதைப் பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. நான் புரிந்து கொண்ட வரையில் புலிகள் மேல் அவருக்கு இன்னமும் அபிமானம் வரவில்லை. இனியும் வரப்போவதில்லை. அதனால் அவர் தனி ஈழம் என்று கூறினாலும் தனி ஈழத்தின் தலைவராக பிரபாகரனை ஜெயலலிதா ஏற்றுக்கொள்ள மாட்டார். ஆனால் தீவிர ஈழ ஆதரவாளர்களோ தனி ஈழம் என்றால் அது பிரபாகரன் தலையில்தான் அமையும் என்று போரிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் என்ன விசித்திரம் பாருங்கள். கருணாநிதியின் இன்றைய அரசியல் நிலையால் பிரபாகரனை ஏற்காத ஜெயலலிதாவும், பிரபாகரனைத் தவிர வேறு எவரையும் ஏற்கத் தயாராக இல்லாதவர்களும் ஓரணியில் இருப்பதைப் போலத் தோன்றுகிறது.

அதாவது ஈழ ஆதரவு என்பது பின்னுக்குப் போய், கருணாநிதி எதிர்ப்பு என்கிற ஒரு கோட்டில் அவர்கள் ஒன்றாகப் பயணிக்கிறார்கள். அதற்கு மிக முக்கிய காரணம் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் அவர்களின் சி.டி. அந்த சி.டியில் அப்படி என்னதான் இருக்கிறது?

அன்று எம்.ஜி.ஆர் - இன்று கருணாநிதி : உடல்நிலை பற்றிய கிண்டல்

எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது, அவருடைய கடைசி காலத்தில் அமெரிக்க புரூக்ளின் மருத்துவமனையில் சிகிச்சைக்காக தங்க வைக்கப்பட்டார். அப்போது அதனை அருவருக்கத்தக்க வகையில், கடுமையாக கேலி செய்து தி.மு.க ஆதரவு செய்தித்தாளில் கிண்டல் செய்திகளும், கிண்டல் போட்டோக்களும் வெளிவந்தன.  அந்த கேலிகளையும் கிண்டல்களையும் கருணாநிதி அனுமதித்தார்.

காலச் சக்கரம் உருண்டோடிவிட்டது. இன்று கருணாநிதி சக்கர நாற்காலிகளில் அமர்ந்து கொண்டும், மருத்துவமனைகளில் இருந்து கொண்டும் அரசை நடத்தும் நிலைக்கு அவரை முதுமை வாட்டி எடுக்கிறது.

அன்று கருணாநிதி எம்.ஜி.ஆரின் உடல் நிலையை கேலி செய்தது போல, இன்று ஜெயலலிதா மேடை போட்டு கருணாநிதியின் உடல் நிலையை கேலி செய்கிறார். நாடகம் என்று கிண்டல் செய்கிறார். என்னை சந்திக்க பயந்து கொண்டு மருத்துவமனையில் ஒளிந்து கொண்டிருக்கிறார் என்று ஜோக் அடிக்கிறார்.

காலச் சக்கரம் யாருக்காகவும் நிற்பதில்லை!
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்!

Sunday, May 3, 2009

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவளிப்பதாக நினைத்துக் கொண்டு லோக்கல் ரௌடிகளாகிக் கொண்டு வரும் முட்டாள்கள்!

நேற்று ஐதராபாத்தில் பயிற்சி முடித்துவிட்டு கோவை மாவட்டம் மதுக்கரை ராணுவ முகாமைச் சேர்ந்த வீரர்கள் முகாமிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார்களாம். அதைப் பார்த்த சில அதிரடி ஈழ ஆதரவாளர்கள், இந்திய இராணுவம் இரகசியமாக இலங்கைக்கு ஆயுதம் எடுத்துச் செல்வதாக நினைத்து வீரர்கள் வந்த லாரிகளை வழிமறித்து அவர்களைத் தாக்கியிருக்கிறார்கள். முதலில் பயந்து ஓடிய இராணுவ வீரர்கள் துணைக்கு அவர்களது தோழர்கள் வந்தவுடன் உருட்டுக் கட்டைகளால் திருப்பித் தாக்கியிருக்கின்றனர். வேடிக்கைப் பார்த்த பொது மக்கள் உட்பட, தடுக்க வந்த போலீஸ்காரர்களுக்கும், செய்தி சேகரித்த பத்திரிகையாளர்களுக்கும் இந்தத் தாக்குதலில் அடி விழுந்திருக்கிறது.

இது விரும்பத்தகாத சம்பவம். உலகப் பொருளாதாரச் சரிவால் ஏற்கனவே திடீரென வேலை வாய்ப்புகளை இழந்துள்ள இந்திய இளைஞர்கள், இது போன்ற சமயங்களில் கவனமாக இருக்க வேண்டும். உங்களது விரக்தியான நிலையை பயன்படுத்திக் கொண்டு சமூக விரோதிகள், ஈழப் பிரச்சனை, பாபர் மசூதி இடிப்பு, கோத்ரா இரயில் எரிப்பு போன்ற உணர்ச்சிகரமான விவகாரங்களில் உங்களை பலியாடாக்க முயல்வார்கள். உங்கள் உணர்ச்சிகளைத் தூண்டிவிடுவார்கள். ஜாக்கிரதையாக இருங்கள். ஏற்கனவே தீக்குளிப்புகள் பரவிக் கொண்டிருக்கின்றன. சில குடும்பங்கள் அமைதியை இழந்து விட்டன. இப்போது நமது இந்திய இராணுவத்தினரையே அதுவும் இந்திய எல்லைக்குள்ளேயே, தாக்குவதென்பது பக்குவமற்ற முட்டாள்தனமான ரௌடித்தனமான செயல்.

இது தேர்தல் நேரம். இந்த நேரத்தில் ஆளாளுக்கு ஒரு கருத்து இருக்கும். ஏன் நமது வீட்டுக்குள்ளேயே, ஒரு குறிப்பிட்ட அரசியல் விவகாரத்தில் அப்பாவுக்கு ஒரு கருத்தும், அம்மாவுக்கு ஒரு கருத்தும், மகனுக்கு ஒரு கருத்தும் இருக்கும். அப்படி இருக்கிறது என்பதற்க்காக ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டால் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். அது போன்ற ஒரு கேவலமான அவலமான நிலைதான், நாமே நமது இராணுவத்தை தாக்குவதாலும் ஏற்படும்.

அதனால் மீண்டும் அறிவுறுத்துகிறேன். நீங்கள் எந்தக் கழகத்தை ஆதரித்தாலும் பரவாயில்லை. எந்தக் கழகத்தை எதிர்த்தாலும் பரவாயில்லை. ஆனால் இந்தியாவையே எதிர்க்கிறேன். இந்திய இராணுவத்தையே எதிர்க்கிறேன் என்று நமது நாட்டுக்குள்ளேயே கலகம் பண்ணாதீர்கள். நஷ்டம் உங்களுக்குத்தான். உங்களைத் தூண்டிவிடுபவர்களுக்கல்ல.

உங்களைத் தூண்டிவிடுபவர்கள் அனைத்தையும் பணத்தால் அளப்பவர்கள். நீங்கள் தீக்குளித்தால் உங்கள் குடும்பத்துக்கு பத்து இலட்சம் கொடுத்துவிட்டு, அதனால் பத்து ஓட்டு கிடைக்குமா என்று கணக்குப் போடுபவர்கள்.
உங்களை இந்திய இராணுவத்துக்கு எதிராகத் தூண்டிவிட்டு, மோதவிட்டு அதை உணர்ச்சிகரமான செய்தியாக்கி, அந்தச் செய்தியை ஓட்டுகளாக்கி நாளைக்கு பதவிக்கு வந்ததும், நீங்கள் எதிர்க்கின்ற இதே இந்திய இராணுவத்தை காவலுக்கு வைத்துக் கொண்டு நாடாளத் துடிப்பவர்கள்.

நீங்கள் இப்படிச் செய்வதால் இலங்கைப் பிரச்சனை மட்டுமல்ல, எந்தப் பிரச்சனையும் தீரப்போவதில்லை. உணர்ச்சிகளுக்கு அடிமையாகாமல் அறிவுடன் நிதானமாக சிந்தியுங்கள்!