Tuesday, January 6, 2009

அபியும் Young அப்பாக்களும் - திரை விமர்சனம்

வீராப்பு - அப்பா, மகன்
தவமாய் தவமிருந்து - அப்பா, மகன்
வாரணம் ஆயிரம் - அப்பா,மகன்
இந்த வரிசையில்
அபியும் நானும்.
ஆனால் இதில் மகனுக்குப் பதில் மகள்.

ஒவ்வொரு படமும் ஒவ்வொரு விதம். ஆனால் ஒரு ஒற்றுமை என்னவென்றால் திடீரென குழந்தை வளர்ப்பில் 'அப்பாக்களின்' பங்கைப் பற்றி தமிழ்சினிமா சிந்திக்க ஆரம்பித்திருக்கிறது.

ஒரு குழந்தை பிறக்கும்போது அப்பாக்களும் பிறக்கிறார்கள். ஆனால் (குறிப்பாக பெண்) குழந்தைகள் வளரும்போது அப்பாக்கள், அவர்கள் வேகத்தில் வளர்வதில்லை. இது அனுபவத்தில் நான் கண்ட உண்மை. Young mothers சுலபமாக பெண் குழந்தைகளின் உலகத்தில் நுழைந்துவிடுகிறார்கள். ஆனால் (என்னைப் போன்ற) Young fathers ஈடு கொடுக்க முடியாமல் திணறுகிறார்கள். உறவின் சுகங்களும், வலிகளும் கலந்த அந்த அப்பா - மகள் வளர்ச்சிப் போட்டியை ராதா மோகன் தன்னுடைய பாணியில் மென் சோகம் கலந்து சிரிக்க சிரிக்க சொல்லியிருக்கிறார்.

ஒரு அதிகாலைப் பூங்காவில் ஒரு புது அப்பாவுக்கு(பிருத்வி ராஜ்), ஒரு பழைய அப்பா(பிரகாஷ்ராஜ்) சொல்கிற சுய அப்பா கதைதான் அபியும் நானும். படம் பார்க்கிற நம்மை பிருத்வி ராஜ் இடத்தில் உட்கார வைத்துவிட்டு, பிரகாஷ்ராஜிடம் கதை கேட்க வைக்கிறார் இயக்குனர்.

'இவர் Beggearஆ இருக்காருப்பா. நம்ம கூடவே இருக்கட்டும்' என்று ஒரு பிச்சைக்காரரை நாய்குட்டியைப் போல நேசித்து தன் வீட்டுக்கு அழைத்துவரும் மகளையும், அந்த பிச்சைக்காரரையும் 'எந்த உறுத்தலும்' இல்லாமல் ஏற்றுக் கொள்கிறார் அப்பா பிரகாஷ்ராஜ். ஒரு சாதாரண பிச்சைக்காரனான தன்னை தன்னுடைய குடும்பத்தில் ஒருவராக மாற்றிய சிறுமியை 'என் அம்மா சார்' என்று
ரவி உருகும்போது, படம் பார்க்கிற அனைவருக்கும் ஒரு கணம் மனதைப் பிசைகிறது. அன்பும், நன்றியும் கலந்த அந்த ஓட்டல் காட்சி், மனிதனை மனிதனாக ஏற்றுக்கொள்ள வைக்கும் ஒரு அற்புதம். அந்தக் காட்சியிலிருந்து நாமும் ரவியை பிச்சைக்காரன் என்பதை மறந்து நமது ஆழ் மன நேசங்களை அடையாளம் காட்டும் ஒரு கண்ணாடியாக பார்க்க ஆரம்பித்துவிடுகிறோம்.

அதே சிறுமி வளர்ந்து த்ரிஷாவாகி 'டெல்லியில எக்கனாமிஸ்டா இருக்காருப்பா' என்று ஒரு 'சர்தார்ஜியை' தனது எதிர்கால கணவனாக அறிமுகப்படுத்தும்போது இடைவேளை வருகிறது. இடைவேளை வரும்போது, ஆஹா இது இன்னொரு மொழி என்று தோன்றுகிறது. ஆனால் இடைவேளைக்குப் பின் மென் சோகங்களுக்கு இடமில்லை. ஆழமான காட்சிகள் எதுவுமில்லை. திரிஷாவின் சர்தார்ஜி காதலனை பிரகாஷ் ராஜ் மருமகனாக ஏற்றுக் கொள்கிறாரா இல்லையா என்பதை மட்டுமே வெற்று நகைச்சுவையாக (சில காட்சிகளில் கோமாளிச்சுவையாக) சொல்லியிருப்பதால் அதிக இனிப்பை சாப்பிட்டது போல ஒரு திகட்டல் வருகிறது.

'சர்தார்ஜியின் குடும்பத்தார்' பிரகாஷ்ராஜ் வீட்டில் அடிக்கிற லூட்டிதான் இரண்டாவது பாதி. பெரும்பாலான காட்சிகள் சுவாரசியமில்லாத பாப்கார்ன் காட்சிகள்.

"ஒரு பிச்சைக்காரனை குடும்பத்தில் ஒருவனாக ஏற்றுக் கொண்ட உன்னால், பிரதமரே நேரடியாக பேசக் கூடிய ஒரு சர்தாஜியை குடும்பத்தில் ஒருவனாக ஏற்றுக் கொள்வதில் உனக்கென்ன தயக்கம்", என்று அந்த பிச்சைக்காரரை வைத்தே கேட்க வைத்த காட்சியில் ராதாமோகன் மிளிர்கிறார்.

திரிஷா, ஊட்டியில் வளரும் கான்வென்டுப் பெண் அபியாக கச்சிதம். ஆனாலும் அழுத்தமான நடிப்புக்கு வாய்ப்பு இல்லையென்பதால் பெரிய அளவில் மனதை ஆக்கிரமிக்கவில்லை. பிரகாஷ்ராஜ் படம் முழுக்க வருகிறார். அதிக வாய்ப்பு. நிறைவாக செய்திருக்கிறார். சர்தார்ஜியாக வரும் கணேஷ், பிரகாஷ்ராஜின் நண்பராக வரும் தலைவாசல் விஜய், அம்மா ஐஸ்வர்யா அனைவருமே அளவாக வந்து அளவாக நடித்திருக்கிறார்கள். ஆனால் பிச்சைக்காரராக அறிமுகமாகி படம் பார்க்கிற நம்முடைய மனசாட்சியாக உலாவரும் ரவிதான் (இவருடைய உண்மையான பெயர் என்ன?) ஸ்கோர் பண்ணுகிறார்.

வித்யாசாகர் 'ஒரே ஒரு ஊரிலே' மற்றும் 'வா..வா' பாடலிலும் இடையில் காணாமல் போயிருந்த தன்னுடைய மெலடி டச்சை மீட்டெடுத்திருக்கிறார்.

மாறிவரும் சூழ்நிலையில் அம்மாக்கள் 'சம்பாதிப்பது எப்படி?' என்றும், அப்பாக்கள் 'குழந்தைகளை வளர்ப்பது எப்படி?' என்றும் யோசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். முழுவதும் Role Swap நடக்கவில்லை. ஆனால் அம்மா அப்பாக்கள் ஒருவரின் வேலையை மற்றவர் கூச்சமின்றி செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். அதனால் இந்த வரிசையில் எதிர்காலத்தில் இன்னும் சில படங்கள் வரக்கூடும்.

கண்றாவி படங்களில் நடித்தாலும், தயாரிக்கிற படங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று பிரகாஷ்ராஜ் பிடிவாதமாக இருக்கிறார். 'அபியும் நானும்' அவருடைய பிடிவாதத்தின் இன்னொரு அடையாளம். இது மொழியைப் போல முத்திரைப் படமா? என்றால் இல்லை. ஆனாலும் நல்ல படம்.

8 comments:

ஷாஜி said...

//ஆனால் (என்னைப் போன்ற) Young fathers ஈடு கொடுக்க முடியாமல் திணறுகிறார்கள்.//

---நானும் இந்த வரிசயில் சேர்ந்துள்ளேன் (என் மகளுக்கு வயசு 2 மாசம்)

ISR Selvakumar said...

Hi Shaji,
Welcome to Fatherhood.
உங்களுக்கு அன்பு கலந்த ஆட்டம் இனிமேதான் ஆரம்பமாகப் போகுது.
வரப்போகும் ஒவ்வொரு நொடியையும் இரசனையுடன் அணுகுங்கள். அவை தேவ கணங்கள். உங்கள் மகளுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் நல்ல உள்ளங்களின் ஆசிர்வாதம் எப்போதும் கிடைக்கட்டும்.
புத்தாண்டு வாழ்த்துக்கள்!

பாலா said...

selva unmaiyavey arumai

ungalukenrey thani style iruku.

nandriyudan bala

ISR Selvakumar said...

பாராட்டுகளுக்கு நன்றி சாய்ராபாலா.

Anonymous said...

நான் இன்னும் படம் பார்க்கவில்லை. ஆனாலும் படம் பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டிவிட்டீர்கள். அந்த வகையில் ஒரு நல்ல பதிவு.


ரேகா ராகவன்

ISR Selvakumar said...

நன்றி ராகவன். நான் எழுதாவிட்டாலும் யாராவது உங்களை பார்க்கத் தூண்டியிருப்பார்கள். இது அப்படிப்பட்ட படம்.

Samuthra Senthil said...

//ஆனால் பிச்சைக்காரராக அறிமுகமாகி படம் பார்க்கிற நம்முடைய மனசாட்சியாக உலாவரும் ரவிதான் (இவருடைய உண்மையான பெயர் என்ன?) ஸ்கோர் பண்ணுகிறார்.//


அவரோட உண்மையான பெயர் குமாரவேலு.

ISR Selvakumar said...

குமாரவேலுவுக்கு மீண்டும் ஒரு சபாஷ். அவர் அழகிய தீயே படத்திலும் கலக்கியதாக ஞாபகம்.

தகவலுக்கு நன்றி சினிமா நிருபர் அவர்களே.