Saturday, October 11, 2008

இயற்கை அவஸ்தைகள்! நமது மாநகர்களின் இன்னொரு பக்கம்

ஸ்பென்சர் பிளாசா வந்திருந்த புதிது. சென்னை கே.கே.நகரில் ஏதோ ஒரு பின்னிரவில் அதைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம்.
"மெட்ராஸ் அமர்க்களமா மாறிகிட்டிருக்கில்ல?", இது நான்.

"மண்ணாங்கட்டி! அவசரமா ஒன் பாத் ரூம் வந்தா, ஒதுங்கறதுக்கு இடமில்ல. மவுண்ட்ரோடுல சாந்தி தியேட்டர்ல இருந்து சஃபையர் வரைக்கும் ஒரு பத்து மூத்திர சந்து இருக்கு. ஆனா ஒரு பப்ளிக் டாய்லெட் கிடையாது. இதுக்குப் பேரு சிட்டியா?", பல்லைக் கடித்துக்கொண்டு பயங்கர கோபத்துடன் பேசியது, நண்பர் ஆந்தைக் குமார் (அப்போதைய ஜீ.வி. ஆந்தையார்)

"அட ஆமா, போனவாரம் கூட நான் இப்படித்தான் அவசரமா . . .", என இன்னொரு நண்பர் தன் ஒன் பாத்ரூம் அவஸ்தையை விவரிக்க . . . ஆந்தைக் குமார் குறுக்கிட்டு,
"உங்க கதையை விடுங்க, எத்தனை பொம்பளைங்க இந்த மாதிரி சிட்டிக்குள்ள அவஸ்தைப் படறாங்க தெரியுமா? நீயாவது ஏதாவது சந்துக்குள்ள புகுந்திடுவ, பொம்பளைங்க என்னய்யா செய்வாங்க? ஏதோ ஸ்பென்சர் பிளாஸா அது இதுன்னு அலட்டறீங்களே... அதுல எத்தனை டாய்லெட் இருக்குன்னு சொல்லுங்க.. அப்புறம் சொல்றேன் அது அலட்டலா? குமட்டலான்னு?"

ஆந்தைக் குமாரின் அதே நியாயமான கோபத்தை, சென்ற வார ஆனந்த விகடனில் தீதும் நன்றும் பகுதியில் நாஞ்சில் நாடன் வெளிப்படுத்தியிருந்தார். அவர் தொட்டிருந்தது இன்னொரு சென்சிடிவ் ஏரியா. பஸ்களில் பயணம் செய்யும் பெண்களின் இயற்கை உபாதை அவஸ்தைகளை கோபமும் வலியும் கலந்து எழுதியிருந்தார். ஆண்கள் ஏதோ ஒரு நிறுத்தத்தில் கொஞ்சம் ரிலாக்ஸ் செய்து கொள்ளலாம். ஆனால் பெண்கள்? காட்டு வழியில் இருளில் பஸ்ஸை நிறுத்தி லைட்டை அணைத்து, பெண்களின் இயற்கை அவசரங்களை கழிக்க நேரும் அவலமான, அபாயமான தருணங்களை நாஞ்சில் நாடன் கோடிட்டுக் காட்டியிருந்தார்.

பஸ் பயணத்தில் வாந்தியைக் கட்டுப்படுத்த, மாதவிலக்கை தள்ளிப் போட மாத்திரைகள் உண்டு. அதே போல மூத்திரத்தை கட்டுப்படுத்த மாத்திரைகள் கண்டு பிடிப்பதைப் பற்றி மருந்து கம்பெனிகள் சிந்திக்கலாம் என்று அவர் யோசனை சொல்லியிருந்தார்.

ஆனால் மருந்துக் கம்பெனிகளை நாடுவதை விட, எதிர் வரும் தேர்தல்களில் அனைத்துக் கட்சிகளையும் (வாக்குச் சீட்டு வழியாக) முகத்தில் குத்தி இந்த 'இயற்கை உபாதை பிரச்சனையை' பற்றி ஒரு தீர்வு சொல்லச் சொல்லலாம்.

ஆனந்த விகடன் மூலமாக இந்த பிரச்சனை பற்றி பலரும் சீரியஸாக சிந்திக்க வைத்ததற்க்காக நாஞ்சில் நாடனுக்கு நன்றி!

அப்புறம் . . .
(ஆந்தை) குமார் தற்போது நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்?

Friday, October 10, 2008

தமிழகத் தேர்தலின் கருப்பு குதிரைகள்

பொதுவாக தமிழக அரசியல் என்பது, கருணாநிதியை எதிர்க்கும் அல்லது ஆதரிக்கும் அரசியல். அதனால் தேர்தலை பொருத்தவரை அனைத்துக் கட்சிகளுமே கூட்டணி விஷயத்தில் கருப்பு ஆடுகள்தான். ஜெயிப்பது மட்டுமே குறிக்கோள் என்பதால், எல்லா அசிங்கங்களும் தேர்தல் நேரத்தில் நடக்கத்தான் செய்யும்.

தற்போதைய நிலவரப்படி விஜயகாந்த் எந்தக் கழகத்துடன் இணைந்தாலும், எதிர் கழகம் காலி. தனியாக நின்றால் விஜயகாந்த் காலி.

தி.மு.க
தற்போது DMK is in back foot. ஷாக் அடிக்கும் மின்சாரப் பிரச்சனையும், மதுரையிலிருந்து கொண்டு அதிரவைக்கும் அழகிரியும், தி.மு.கவின் தனிப்பெரும் மைனஸ் பாயிண்டுகள். எதிர்க்கட்சிகளை விட மோசமாக ஆளும்கட்சியை தாக்கும் விவகாரங்கள் இவை. ஆனால் ஸ்டாலின் சத்தம் போடாமல் மக்களை சந்தித்துக்கொண்டிருக்கிறார். சொல்லப்போனால் அவர் மேல் குற்றச்சாட்டுகளே இல்லை. உள்ளாட்சித் துறையை கையில் வைத்துக்கொண்டு படு வேகமாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். வேண்டுமென்றே மீடியா வெளிச்சங்களைத் தவிர்க்கிறாரா அல்லது மீடியா வெளிச்சத்தை தன் மேல் விழ வைக்கத் தெரியாமல் தவிக்கிறாரா? என்பதை என்னால் அனுமானிக்க முடியவில்லை. தி.மு.கவின் ஒரே பிளஸ் தற்போது அவருடைய செயல்பாடுகள்தான்.

அ.தி.மு.க
விஜயகாந்த், இளைய எம்.ஜி.ஆர் பக்தர்களை கவர்ந்துவிட்டதில், அம்மா கொஞ்சம் ஆடித்தான் போய்விட்டார். கட்சியின் பலம் பலவீனம் இரண்டுமே ஜெயலலிதாதான். அவர், ஆக்டிவ் பாலிடிக்ஸிலிருந்து கிட்டத்தட்ட 4 மாதங்கள் தொடர் ரெஸ்டில் இருந்ததும், சட்டசபையை தவிர்த்ததும், அக்கட்சியின் மிகப் பெரிய மைனஸ். அந்த இடைவெளியில் விஜயகாந்தும், ராமதாசும் ஸ்கோர் பண்ணிவிட்டார்கள். ஆனால் வீட்டுக்குள் சாக்கடை அடைத்த பிரச்சனைக்கு கூட (சன் டிவி உதவியுடன்) தொடர் போராட்டங்களை நடத்தி கட்சியை லைம் லைட்டில் வைத்திருந்தார். ஆரம்பத்திலும் இப்போதும் கிண்டல் செய்யப்படுகின்ற சமாச்சாரம் இது. ஆனால் இதை மிகப்பெரிய பிளஸ்ஆக நான் நினைக்கிறேன். தேர்தல் நெருக்கத்தில் அந்த துக்கடா போராட்டங்கள், கணிசமான வாக்குகளை பெற்றுத் தரும் என்று நம்புகிறேன்.

தே.மு.தி.க
விஜயகாந்த்தை தவிர வேறு யாரையுமே மக்களுக்கு தெரியாது. விஜயகாந்த்தான் மீடியாக்களின் புதிய டார்லிங். கருணாநதி எதிர்ப்பு பாலிடிக்ஸில் முன்பு ஜெயலலிதாவை சுற்றி வந்த டிவி மைக்குகளும், தினசரி பேனாக்களும், தற்போது விஜயகாந்த் பக்கம் வந்துவிட்டன. அவரும் சளைக்காமல் மீடியாக்களுக்கு நொறுக்குத் தீனி போட்டுக் கொண்டே இருக்கிறார். இதுதான் தே.மு.தி.கவின் பிளஸ். தன்னுடைய எதிரிகள் என்று தி.மு.வையும், அ.தி.மு.கவையும் கை காட்டிவிட்டார். ஆனால் நண்பர்கள் யார் என்று அவரால் யாரையும் கை காட்ட முடியவில்லை. யாருடனும் கூட்டணி வைக்க மாட்டேன் என்று சொல்லிச் சொல்லியே வளர்ந்துவிட்டதால், நண்பர்களாக யாரை எப்படி தேர்ந்தெடுத்து கூட்டணி வைப்பது என்று குழப்பத்தில் இருக்கிறார். மீடியாக்கள் அவருடைய குழப்பத்தை மறைத்து வைத்தாலும், இதுதான் அவருடைய பெரிய மைனஸ்.

கூட்டணி எதுவாக இருந்தாலும், உள்துறை அமைச்சராக ஸ்டாலினின் ஆர்ப்பாட்டமில்லாத பெர்ஃபாமன்சும், அ.தி.மு.கவின் சின்சியரான வார்டு லெவல் போராட்டங்களும், விஜயகாந்தின் 'தில்லான ஆள்' என்கிற அதிரடி கவர்ச்சியும், தமிழகத் தேர்தலின் கருப்பு குதிரைகள். இந்த மூன்று குதிரைகளும்தான் கடைசி நேரத்தில் வாக்காளரை எந்தக் கூட்டணிக்கு வாக்களிப்பது என்று தீர்மானிக்க வைக்கப் போகின்றன.

Thursday, October 9, 2008

வணக்கம் கேப்டன்!

எனக்கு கபில்தேவை மிகவும் பிடிக்கும். ஏனென்றால் எந்த புரொமோட்டரும் இல்லாமல், லாபி செய்ய ஆளில்லாமல் வெறும் திறமையால் மட்டுமே இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான தலைவனாக திகழ்ந்த ஒரே வீரன் கபில்தேவ்.

இந்திய கிராமத்து இளைஞனுக்கே உரிய 'வெள்ளேந்தியான போராடும் குணம்' கபில் தேவின் குணம். கபிலை பொறுத்தவரை, ஜெயிப்பதை விட தொடரந்து போராடுவதுதான் முக்கியம். 1983ல் புரொடன்ஷியல் கப்பில் ஜிம்பாப்வேவிற்கு எதிராக 175 ரன்கள் குவித்ததது கபிலின் அசாத்திய போராட்ட குணத்திற்கு கிடைத்த வெற்றி. பிறிதொரு சந்தர்ப்பத்தில் இங்கிலாந்திற்கு எதிராக 15 ரன்கள் எடுத்தால் ஃபாலோ ஆனை தவிர்க்கலாம் என்ற நிலை. கபில் அசரவில்லை. தொடர்ந்து மூன்று சிக்ஸர்களை விளாசித் தள்ளினார்.

அவருடைய ஐ.சி.எல், அவரைப் போன்ற முத்துக்களை கண்டெடுக்கும் முயற்சி. வாய்ப்பு கிடைக்காமல் முடங்கிக் கிடக்கும் எத்தனையோ இளைய கிரிக்கெட் திறமைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதே ஐசிஎல் உதயத்திற்கு காரணம் என்று கபில் பிரகடனம் செய்தார். சொன்னபடி செய்தார். லொட்டு லொட்டு என்று கிழட்டு நடை பயின்று கொண்டிருந்த கிரிக்கெட்டுக்கு 20-20 வடிவம் கொடுத்து புத்துயிர் பெறவைத்தார். சாதாரண கிளப் போட்டிகளிலும், லீக் போட்டிகளிலும் மின்னிக் கொண்டிருந்த இளம் நட்சத்திரங்களை, இன்டர்நேஷனல் நட்சத்திரங்களுடன் விளையாட விட்டு, மாற்று இந்திய அணியை உருவாக்கும் அளவிற்கு புதுத்திறமைகளை அடையாளம் காட்டினார்.

உலகமே அதிசயித்தது. ஆனால் இந்திய கிரிக்கெட்போர்டுக்கு மட்டும் வயிறெறிந்தது. கபிலை நிராகரித்தது மட்டுமல்லாமல், ஐசிஎல் போட்டி நடத்த முடியாதபடி, அனைத்து விளையாட்டு மைதானங்களையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. கபில் அசரவில்லை. மேலும் வேகமெடுத்தார். சாதாரண கிளப் மைதானங்களில், சர்வதேச தரத்தில் போட்டிகளை நடத்தி வெற்றி கண்டார். ஐசிஎல்லின் வெற்றியைக் கண்டதும், பதிலுக்கு இந்திய கிரிக்கெட் போர்டு பணத்தை வாரியிறைத்து ஐபிஎல்லை ஆரம்பித்தது. கிரிக்கெட்டையும், சினிமாவையும் கலந்து கவர்ச்சிகரமான பிரமாண்ட வெற்றி பெற்றது ஐபிஎல்.

இனி ஐசிஎல் அவ்வளவுதான் என்றார்கள். கபில் என்பவன் ஒரு போராட்ட வீரன். அவ்வளவு எளிதில் தோற்கடிக்க முடியாது. இதோ ஐசிஎல்லின் சீஸன் 2 தொடங்கிவிட்டது. "ICL is better in cricket but IPL was better in marketing,"என்று கபில் ஓபன் ஸ்டேட்மெண்ட் விடுத்தார். ஐபிஎல்லின் வெற்றியை மறுக்கவில்லை. சுத்தமான வீரன் எப்போதும் எதிராளியை குறைத்து மதிப்பிட மாட்டான். அதே போல மேலும் சிறப்பான மார்கெட்டிங் உத்திகளுடன் ஐசிஎல் சீஸன் 2ஐ கபில் துவக்கிவிட்டார்.

கிரிக்கெட்டை பொறுத்தவரை, ஒரு பந்தில் 6 ரன்கள் தான் அதிக பட்ச ரன்கள். ஆனால் இனி 9 ரன்கள் அதாவது "Niners" ஆட்டத்தின் விறுவிறுப்பை மேலும் அதிகப் படுத்தும். அதே போல கால்பந்து விளையாட்டில் இருப்பது போல "sky camera"க்கள் மேலும் உற்சாகமான அனுபவத்தை தரும். ஐசிஎல் சீஸன் 2ல் இதுபோன்ற கிரிக்கெட் சுவாரசியங்களுக்கு பஞ்சம் இல்லை.

கொஞ்சம் கொஞ்சமாக பாகிஸ்தான் மற்றும் இலங்கை கிரிக்கெட் வாரியங்கள் ஐசிஎல்லை ஆதரிப்பதைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்துள்ளன. ஐசிசி எனப்படும் உலக கிரிக்கெட் வாரியமும் தற்போது ஐசிஎல்லை செவி மடுக்க ஆரம்பித்துள்ளது.

சென்ற முறை விளையாட மைதானங்களே இல்லாமல் தடுமாறிய ஐசிஎல் இம்முறை 50 கோடி ரூபாய் செலவில் அகமதாபாத்தில் ஒர விளையாட்டு மைதானத்தையே வாங்கி, சர்வதேச தரத்திற்கு மாற்றி விளையாடத் தயாராகிவிட்டது.

1983 உலகக் கோப்பை வெற்றியின் மூலம், இந்திய கிரிக்கெட்டிற்கு பெரிய அண்ணன் இமேஜை பெற்றுத் தந்தார் கபில். தற்போது ஐசிஎல்லின் ஆக்கமும் வளர்ச்சியும் உலக கிரிக்கெட்டையே மாற்றி யோசிக்க வைத்துள்ளது.

கபில் தேவின் இறக்கமும் ஏற்றமும், ஆர்வமும் போராட்ட குணங்களும் முன்னேற விரும்பும் ஒவ்வொரு இந்திய இளைஞனுக்கும் பாடம்.

அதனால்தான் இந்திய இராணுவம் கபிலுக்கு கெளரவ லெப்டினன்ட் கர்னல் பட்டம் கொடுத்து கெளரவித்துள்ளது. அந்த பதக்கத்தை நெஞ்சில் ஏந்தும் போது கபிலின் முகத்தில் தெறித்த உணர்ச்சிகள் அனைத்து இந்திய இளைஞனுக்கும் நாட்டுக்காக போராடும் துணிவையும், ஆர்வத்தையும் தரும்.

சல்யூட் கேப்டன் கபில்தேவ்!

Tuesday, October 7, 2008

பார்வையற்றோர் தாஜ்மகாலை பார்க்க முடியுமா?

புது தில்லி பயணம். சென்ட்ரல் ஸ்டேஷன் பத்தாவது பிளாட்பாரத்தில் நின்றிருந்த ஜி.டி.யில் ஏறி அமர்ந்தேன். தண்ணீர் பாட்டில்கள் வந்திருக்காத 15 வருடங்களுக்கு முன், தாகத்துக்கு வாட்டர் பேகைத் திறந்தேன். ஏதோ ஒரு கவனக் குறைவில் பக்கத்து சீட்டுக்காரரின் மேல், தண்ணீர் சிதறிவிட்டது.

"ரொம்ப ஸாரி ... தெரியாம . . . அட சார் நீங்களா?"
"ஓ... செல்வக்குமாரா? எப்படி இருக்கீங்க?"
"நல்லா இருக்கேன் சார். ஒரு சாஃப்ட்வேர் விஷயமா டெல்லி போயாகணும் அதான் இந்த டிரெயினைப் பிடிச்சேன்"
"நாங்க 20 பேர் டூர் போயிட்டு இருக்கோம்"
"டூரா? டெல்லியில எங்க?"
"நாங்க ஆக்ரா போறோம். ரெண்டு நாள் தங்கி ஆசை தீர தாஜ்மகாலை தரிசிக்கப் போறோம்"
"தாஜ்மகாலை பார்க்கப் போறீங்களா?", அதிர்ச்சியில் எனக்கு பேச்சே வரவில்லை.

அவர்கள் தாஜ்மகாலை பார்க்கப்போனால் எனக்கென்ன அதிர்ச்சி என்கிறீர்களா? விஷயம் தெரிந்தால் நீங்களும் அதிர்ச்சியடைவீர்கள்.

அவர்கள் அனைவரும் பார்வையிழந்தோர்.

அவர்கள் தாஜ்மகாலைப் பார்க்க தாஜ்மகால் வரை செல்ல வேண்டியதில்லை. அவர்கள் திரும்பும் திசை எல்லாம் தாஜ்மகால் தான்.
நீங்களும் நானும் தாஜ்மகாலை குறைந்த பட்சம் ஒரு போட்டோவிலாவது பார்த்திருப்போம். அழகில் மனதை பறிகொடுத்திருப்போம். அதனால் தாஜ்மகாலை நேரில் பார்க்க ஆவல் வருவது இயல்பானது. ஆனால் பிறவியிலேயே பார்வையிழந்த அவர்கள், வெளிச்சத்தையே பார்த்திராத அவர்கள், அழகு என்று எதைச் சொல்கிறார்கள்? தாஜ்மகால் என்று இருள் சூழ்ந்த விழிகளுக்குள் எதைக் காண்பார்கள்?

பார்வையில்லாத அவர்களால் தாஜ்மகாலை பார்க்க முடியுமா?
முடியும் என்று நான் நம்புகிறேன்.
இசையை எழுத்தால் எழுத முடியும் என்றால், வண்ணங்களை காற்றில் உணர முடியும்.
மொழி திரைப்படத்தில், காது கேளாத ஜோதிகா, பிருத்விராஜின் இசைப்பின்னல்களை வெறும் அதிர்வுகளால் உணர்கின்ற அற்புதமான காட்சி வரும். அந்தக் காட்சியுடன், இந்தப் பார்வையற்ற நண்பர்கள் தாஜ்மகாலை பார்த்து இரசிப்பதாகப் பொருத்திப் பாருங்கள். ஒரு வேளை நீங்களும் நானும் பார்வைக்குப் பதிலாக, ஒரு பரவச அதிர்வை உணர நேரிடலாம்.

பார்வையற்ற அந்த நண்பர்களை "Psychological problems of the blinds" என்கிற ஒரு சிம்போசியத்தில் நான் முதன் முதலில் சந்திக்க நேர்ந்தது. திரு. ருத்ரன் அவர்கள் தலைமையில் நடந்த அந்த நிகழ்வில், நான் தான் தொகுப்பாளர்.

டெல்லி டிரெயினில் நான் தண்ணீர் சிந்திய அந்த நண்பர்தான் முதலில் மேடை ஏறியவர். பிறவியிலேயே பார்வையின்றி பிறந்த அவர், எனது குரலை வைத்தே "மாநிறம் உள்ள நீங்கள் உயரமானவர் அல்ல, சராசரி உயரம்தான்." என்று கூறி என்னையும் பார்வையாளர்களையும் ஆச்சரியப்படுத்தினார்.

அதைவிட பெரிய ஆச்சரியம், பார்வையற்ற அவர் தலைமையில் 20 பார்வையற்றவர்கள் தாஜ்மகாலைப் பார்க்க கிளம்பியது. அந்த ஆச்சரியத்துடன், விடை தெரியாத கேள்விகளுடன், நான் சந்தித்த நபர்களும், கிடைத்த அனுபவங்களும் தனிக்கதை. அதை பின்னர் எழுதுகிறேன். ஆனால் முடிவில் ஒன்று உணர்ந்து கொண்டேன். அது . . .

பார்வை என்பது கண்களில் இல்லை!