Monday, October 20, 2008

பாவம் பாதசாரிகள்

வயசு மற்றும் பராமரிப்பின்மை காரணமாக என்னுடைய ஹீரோ ஹோண்டா சிடி 100, ஸ்டார்ட் ஆக மறுத்துவிட்டது. அதனால் நடந்தே ஆபீஸ் கிளம்பினேன். வீட்டிலிருந்து திருவள்ளுவர் சாலையை தொட்டதுமே, பாம்..பாம் என்று ஒரு மணல் லாரி என்னை மிரட்டி ஒதுக்கியது. மாட்டுச் சாணம் மற்றும் மழைச் சேருக்குப் பயந்து துள்ளிக் குதித்ததில் ஒரு குட்டிக் கருங்கல் செருப்பை மீறிக் காலைக் குத்தியது.

"என்னடா இது ஆரம்பமே இவ்வளவு கஷ்டமா இருக்கு. லேட்டானா கூட பரவாயில்லை, பேசாம திரும்பப் போய் பைக்கை சரி பண்ணிட்டு மெதுவா போகலாமா?"

"நோ! ஐ வாண்ட் யு ஹியர் ரைட் நெள", காதில் ஹெட் செட்டுடன் ஒரு மொபைல் பெண் என் மேல் மோதிக் கொண்டாள். அடடா ஒரு பெண்ணை இடித்துவிட்டோமே என்று நான் பதறிப் போனேன். அவளோ என் மேல் மோதிக்கொண்ட எந்த சொரணையுமின்றி "மீட் மி அட் சிக்ஸ்" என்று எவனுடனோ மொபைலிக் கொண்டே சென்றாள்.

"ஹலோ கண்ணாடிகாரரே சீக்கிரம் கிராஸ் பண்ணுங்க", இது ஆழ்வார் திருநகர் ஜங்ஷன் போலீஸ்காரர். நான் பரபரவென ஓடினேன். கூடவே ஒரு வயதான தாத்தா மற்றும் சில ஆபீஸ் பெண்மணிகள் ஆபீஸ் கைப்பைகளுடன் ஒரு ரேஸ் போல ஓடிக் கடந்தார்கள். ஆனால் போலீஸ் காரரின் ஸ்டாப் கையை பற்றி எந்தக் கவலையே இல்லாமல் ஒரு ஆட்டோ எங்களுக்கிடையே புகுந்து, நான், தாத்தா, அந்தப் பெண்மணிகள் என அனைவரையும் ஆளுக்கொரு திசையில் துரத்திவிட்டது. "ஓய்" என்று யாரோ கத்தினார்கள். அதற்குள் ஆட்டோ பறந்த திசையை பஸ்களும், மோட்டர் பைக்குகளும் நிறைத்துக் கொண்டன.

என்னுடைய வீடு இருக்கும் ஆழ்வார் திருநகரிலிருந்து வடபழனி 3 கிலோ மீட்டர். சத்யா கார்டன் 2 கிலோ மீட்டர்தான். 80களில் நடந்துபோய்தான் ஆவிச்சி ஸ்கூலில் பத்தாவது படித்தேன். இரண்டு மணி நேரத்திற்கொரு பஸ் வரும். எப்போதாவது கோடம்பாக்க சினிமாக்காரர்களின் வெள்ளைக் கலர் அம்பாசிடர் கார்கள் ஆற்காடு சாலையை கடக்கும்.

அப்போதும் நடைபாதை கிடையாது. இப்போதும் நடைபாதை கிடையாது. இதுதான் 20 வருடங்களில் மாறாது இருக்கும் ஒரே விஷயம்.

தற்போது இரவு 2 மணி ஆனாலும் பஸ்களும், கார்களும் பறக்கின்றன. தெருவை இலகுவில் கடக்க முடிவதில்லை. குறைந்த பட்சம் மோட்டர் சைக்கிள் தேவைப்படுகிறது. சைக்கிளில் செல்வது கூட ரிஸ்க் தான். நடந்து செல்பவர்களுக்குத்தான் துளியும் பாதுகாப்பு கிடையாது.

போரூரிலிருந்து வடபழனிவரையிலும், பாதசாரிகளுக்கென பிளாட்பாரம் எங்குமே கிடையாது. நடந்து செல்லும், நூற்றுக்கணக்கான பள்ளிக் குழந்தைகளும், அவர்தம் தாய்மார்களும் உயிரை கையில் பிடித்துக்கொண்டுதான் பள்ளிக்குச் சென்று வருகிறார்கள். பஸ், ஆட்டோ, கார், மோட்டர் பைக் என அத்தனை வாகனங்களும் ஹார்ன் அடித்தே பாதசாரிகளை பீதி அடைய வைக்கிறார்கள். வண்டிகளில் வரும் எவருக்கும் அரை வினாடி கூட காத்திருக்க பொறுமையில்லை.

அதுவும் வயதானவர்கள் சாலையைக் கடந்து உயிருடன் வந்துவிட்டால் அது அவர்கள் செய்த புண்ணியம்.

அதுவும் நேற்று மழைநாள். பள்ளம் எது? மேடு எது? எனத் தெரியவில்லை. அதற்குப் பயந்து, பிளாட்பாரம் இல்லாததால் நடுரோட்டில் நடக்கும் பயங்கரத்தை நேற்றுதான் உணர்ந்தேன். ஈவு இரக்கமின்றி வாகனக்காரர்கள் பாதசாரிகளை உரசியபடி ஓட்டுகிறார்கள். அதிர்ஷ்டமிருந்தால் நலமாக வீடு . . . இல்லையேல் . . .

சென்னை நகர் முழுவதுமே இப்படித்தான் இருக்கிறது. புதுப்புது பாலங்கள். வாகன நெரிசலைக் குறைக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் பாலங்கள் வந்தவுடன் அந்தப் பகுதியில் இருந்த நடைபாதைகளும் காணாமல் போய்விட்டனவே? பாதசாரிகள் எங்கே நடப்பார்கள்?

சாலைகளில் பாதசாரிகள் நடப்பதற்கென ஒரு தனி சங்கமோ ஒரு இயக்கமோ இருந்தால் சொல்லுங்கள். சேர்ந்து கொடி பிடிக்க தயாராக இருக்கிறேன்.

"யோவ் ஓரம் போய்யா", என்று எவனோ ஒருவன் திட்டிய திட்டும், பஸ், லாரி என அத்தனை வாகனங்களும் வாரி இறைத்த சேரும் இன்னமும் என்னில் இருக்கின்றன. நாளை நான் நடந்து போகப்போவதில்லை. ஆனால் பலருக்கு நடப்பதைத் தவிர வேறு வழியில்லை. பாவம் அவர்கள்!

4 comments:

Anonymous said...

manam nadungukirathu.

யூர்கன் க்ருகியர் said...

மிக சிறந்த முறையில் எழுதி இருக்கிறீர்கள்.
சாலையோர நடைபாதை இல்லையா அல்லது ஆக்ரமிக்கபட்டுள்ளதா?

ISR Selvakumar said...

வணக்கம் ஜீர்கேன்,
சென்னையில் பல பகுதிகளில் நடைபாதைகள் இல்லை. இருந்தால் அவை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

ஒரு முறை கோடம்பாக்கத்திலிருந்து போரூர் வரை எங்கு வேண்டுமானாலும் 10 நிமிடம் நடந்துபாருங்கள். நடை என்றாலே பயம் வந்துவிடும்.

மங்களூர் சிவா said...

சிங்கார சென்னை
:))