Monday, September 1, 2008

அவளை என்னால் மறக்க முடியவில்லை

அவள் தமிழில் அறிமுகமாகி, மலையாளத்திலும் பிரபலமாகியிருந்தாள்.  அவள் கைகளிலும் கால்களிலும் பிளேடு கீறல்.
"படுபாவி எல்லாம் அந்த ராஸ்கலுக்காகத்தான். இரத்தம் நிறைய போயிடுச்சி.  ஆனாலும் பிழைச்சுட்டேன்.  அவனை விடமாட்டேன்" என்று சீறிவிட்டு "டயலாக் என்ன?" என்றாள்.

சில வருடங்களுக்கு முன், தி.நகரில் உள்ள ஒரு டெக்ஸ்டைல் ஷோ ரூமுக்கு விளம்பரப் படம் எடுக்கும் சந்தர்ப்பம் வாய்த்தது.  நான் சொன்னது  அவர்களுக்கு பிடிக்கவில்லை.  அவர்கள் சொன்னது எனக்குப் பிடிக்கவில்லை. ஒருவருக்கொருவர் சண்டை போட்டு, சமாதானமாகி கடைசியாக ஒரு  ஸ்கிரிப்ட் ஓகே ஆனது. அதற்கு ஒரு ஜிங்கிளையும் ரெக்கார்ட் செய்த பிறகு, துணிக்கடை தரப்பிலிருந்து எங்களால் இவ்வளவு செலவு செய்ய முடியாது என்று சொல்லி பாதியாக வெட்டப் பட்ட ஒரு பட்ஜெட் வந்தது.

இந்த மாதிரி புது விளம்பரதாரர்கள் ஜகா வாங்குவதை அடிக்கடிபார்த்து பழகியிருந்ததால், நான் பெரிசாக அலட்டிக்கொள்ளவில்லை.   பட்ஜெட் குறையும்போதெல்லாம் உதவுவதற்க்காகவே சில மாடல் கோ-ஆர்டினேட்டர்கள் உள்ளார்கள்.  ரூபாய் 500லிருந்து 1000ம் வரை பேமெண்ட் கொடுத்தால் போதும். ஒரு நாள் முழுக்க நடித்துவிட்டு முகம் சுளிக்காமல், ஆட்டோ ஏறிப்போவார்கள்.  பட்ஜெட் சரிபாதியாகிப் போனதால் நான் அந்த மலிவு மாடல்களுக்காக காத்திருந்தேன்.

உள்ளே வரலாமா? என்று கேட்டுவிட்டு உள்ளே வந்தவள் 'அவள்'. கையில் பிளேடு கீறலுடன் 'டயலாக் என்ன?' என்று கேட்ட அவள். கிட்டத்தட்ட 7 வருட இடைவெளி. அவளுக்கு என்னை அடையாளம் தெரியவில்லை. நான் வேறு நரை தாடியை மறைக்க ஃபுல் ஷேவில் இருந்தேன்.  அதனால் நான் யாரென்று தெரியாமலேயே 'ஹலோ' என்று கையைக் குலுக்கிவிட்டு பெயரைச் சொன்னாள். அது அவளுடைய பெயர் அல்ல.  7 வருடங்களுக்கு முன்பு தமிழ்-மலையாளத் திரை உலகம் அறிந்த பெயர் அல்ல.

"ஏன் பெயரை மாற்றிக் கொண்டாய்?" என்று நான் கேட்டதும், அவள் அதிர்ந்து போனாள்.  என்னை எப்படித் தெரியும் என்றாள்? சொன்னேன்.   ஒரு நெடிய மெளனம்.  அப்போது கீறிய பிளேடின் வலியை இப்போது அவள் அனுபவிப்பதாய் உணர்ந்தேன்.
"புது பேரு, புது வாழ்க்கைன்னு இப்பதான் 3 வேளை சாப்பிட ஆரம்பிச்சிருக்கேன். நான் பழைய ஆர்டிஸ்டுன்னு யாருக்கும் சொல்லிடாதீங்க ப்ளீஸ்."
"ஏன்?"
"எல்லாரும் என்னை மறந்துட்டாங்க?"
"இப்போ சொன்னா என்ன ஆகும்?"
"திரும்பவும் மறந்துடுவாங்க"

என்னால் மறக்க முடியவில்லை.

6 comments:

thamizhparavai said...

'oyilaattam' shaarmila..?

தமிழன்-கறுப்பி... said...

கலக்குங்க...:)

தமிழன்-கறுப்பி... said...

\
நான் பழைய ஆர்டிஸ்டுன்னு யாருக்கும் சொல்லிடாதீங்க ப்ளீஸ்."
"ஏன்?"
"எல்லாரும் என்னை மறந்துட்டாங்க?"
"இப்போ சொன்னா என்ன ஆகும்?"
"திரும்பவும் மறந்துடுவாங்க"
\

சின்ன சின்னதா சுவாரஸ்யமா எழுதறிங்க செல்வா...

Thamira said...

நல்ல குட்டிக்கதை.!

மங்களூர் சிவா said...

interesting!

குடுகுடுப்பை said...

நல்ல குட்டிக்கதை.!

//

குட்டிக்கதை நல்லதோ,கெட்டதோ